Wednesday, June 22, 2011

உடலுக்கு புத்துணர்ச்சியை ஊட்டும் கொத்தமல்லி


இயற்கை உணவுவகைகளைப் பற்றி பதிவெழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இன்றைய இயந்தர சூழ்நிலையில் நமது உணவுப்பழக்கங்கள் மிக மாறிவிட்டது. நம் வேகத்திற்கு ஏற்பவும் நேரத்திற்க ஏற்பவும் உணவுப்பழக்க வழக்கங்ளும் மாறிவிட்டன என்றால் அது மிகையாகது.

நம் வீட்டு அருகே கிடைக்கும் பல அற்புதமான பழங்கள், காய்கறிகள் மிக முக்கியமாக கீரை வகைகளை நாம் அதிகம் உண்பதில்லை அதற்கு காரணம் அது சமைக்கும் போது ஏற்படும் நேர விரயமாக கூட இருக்கலாம். கீரைகள் வாரம் மும்முறை உண்டு வந்தால் நிறைய நோய்களை வராமல் தவிர்க்க முடியும். அந்த வகையில் இன்று அனைவரும் அதிகம் பயன்படுத்தும் வாசனையான மற்றும் மருத்துவ குணமுள்ள கொத்தமல்லியை பற்றி பார்ப்போம்.

மக்கள் பிணி நீங்கி  நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன.  இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம்.  மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.

கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும்.  இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.


நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.

கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள்.  அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம்.  ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனைஅறிந்ததில்லை.

பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி.  இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர்.  இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.

நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர்.  இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது.   இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை.  இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப் படுகிறது.

இது கார்ப்புச் சுவை கொண்டது.  குளிர்ச்சித் தன்மையுடையது.  சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.

கொத்துமல்லிக் கீரையுண்ணில் கோரவ ரோசகம்போம்
பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்- சத்துவமாம்
வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீருங்
கச்சுமுலை மாதே! நீ காண்
-அகத்தியர் குணவாகடம்
பொருள்
 
சுவையின்மை, சுரம் நீங்கவும், உடலை வன்மையாக்கவும், விந்துவைப் பெருக்கவும் உதவும்.

கொத்தமல்லியின் பயன்கள்

சுவையின்மை நீங்கும்.

வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.

வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும்.  மலச்சிக்கல் நீங்கும்.  

இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும்.  மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.

புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.

கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்  கண் சூடு குறையும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும்.  மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.

உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல்.  இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.  இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.

நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.  மன அமைதியைக் கொடுக்கும்.

உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.  விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும்.  இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும்.  இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாய் நாற்றத்தைப் போக்கும்.  பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.

சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.

சொரசொரப்பான தோலை மிருதுவாக்கும்.

கொத்தமல்லி இலை     – 1 கைப்பிடி
சின்ன வெங்காயம்    – 5
மிளகு        – 10
சீரகம்        – 2 தேக்கரண்டி
பூண்டு        – 5 பல்
மஞ்சள் தூள்        – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை    – 1 கொத்து
உப்பு         -  தேவையான அளவு

எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.

கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.

5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

கொத்தமல்லி சூரணம்

கொத்தமல்லி     – 300 கிராம்
சீரகம்        – 50 கிராம்
அதிமதுரம்        – 50 கிராம்
கிராம்பு        – 50 கிராம்
கருஞ்சீரகம்        – 50 கிராம்
சன்னலவங்கப்பட்டை 50 கிராம்
சதகுப்பை        – 50 கிராம்

இவை அனைத்தையும்  இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும்.  இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.
கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.

காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும்.  இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது.

இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால்  சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.

16 comments:

  1. தனியா பற்றி தனியா ஒரு பதிவு போட்டு எங்களுக்கு பயனுள்ள குறிப்புகளை அள்ளித்தந்த உங்களுக்கு தனியா ஒரு ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  2. பயனுள்ள குறிப்பு நன்றி.

    J

    ReplyDelete
  3. வாசனைக்காக மட்டுமே இத்தனை நாளும் கொத்தமல்லி இலை பாவிக்கிறார்கள் என்று நினைத்தேன்.ஆனால் ஈழத்தில் மல்லி பாவிப்போம் வாசனைக்கு இலை பாவிப்பதில்லை.சட்னி செய்வோம் !

    ReplyDelete
  4. வடக்கேயும் கொத்தமல்லியை வெறும் வாசனைக்காக மட்டும் சேர்ப்பதில்லை. இங்கே அதுவும் ஒரு காய்கறிதான்.

    ReplyDelete
  5. கொத்தமல்லியில் இவ்வளவு இருக்கின்றதா...ரொம்ப பயனுள்ள தகவல்....

    ReplyDelete
  6. சங்கவி,

    இங்க அதுக்கெல்லாம் நேரமில்லை. அதனால, கொத்துமல்லி ஊருகாய் வாங்கி பயன்படுத்திக்கிறோம்.

    ReplyDelete
  7. என் பசங்களுக்கு அடிக்கடி கொத்தமல்லி சாதம் செய்து தருவேன்...அவர்களின் பிடித்த உணவு அது.

    தினமும் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    நல்லதொரு பதிவு சதீஷ். தெரியாதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  8. கொத்தமல்லி வாசம்.. ஆஹா கொத்து கொத்தா வீசும்.. அப்படித்தான் மாமா அத்தை மக நேசம்.. ஹி ஹி

    ReplyDelete
  9. கொத்தமல்லியில் இத்தனை விடயங்கள் இருக்கிறதா.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. முன்னடி மூட்டை பூச்சி வாசம் அடிக்குது’னு ச்சாப்ப்பிட மாட்டேன். இப்போ, என் பேவரிட்

    ReplyDelete
  11. நல்ல தகவல்...
    கொத்தமல்லி பற்றி இவ்வளவு விஷயங்கள் கொடுத்து அசத்தியுள்ளீர்..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. கொத்தமல்லியில் இத்தனை பயன்களா...? இனி கொத்தமல்லியை கீழே போட மாட்டேன்.

    ReplyDelete
  13. கொத்தமல்லிக்கு மணத்துக்கு மட்டும் அல்ல. வுடலுக்கும் நல்லது என்பதை தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  14. கொத்தமல்லி மணத்துக்கு மட்டும் அல்ல உடலுக்கும் நல்லது என்பதை தெரிவித்ததற்கு நன்றி .

    ReplyDelete