Tuesday, August 31, 2010

பெற்றோர்களே உஷாராக இருங்கள்...


7 வயது சிறுவன் விவேக் அவனது அப்பா மின்சார வாரியத்தில் பெரிய பதவியில் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அப்பாவின் மேல் உள்ள கோபத்தில் விவேக்கை கடத்திவிட்டார்கள் அவனது அப்பாவின் எதிரிகள். யார் எதற்கு கடத்தினார்கள் என்றே தெரியவில்லை. போலீசாரும் வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்கள்.


விவேக்கிற்கு தெரிந்ததெல்லாம் அப்பா பெயர் அம்மாவின் பெயர் தான். இவனை யார் கடத்தினார்கள் எதற்கு என்றும் அவனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஊரே ரனகளமாகி இருந்தது அனைத்து வீட்டிலும் சோகம். எங்கு திரும்பினும் இதே பேச்சு. கிராமத்து பெரியவர் வீட்டுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது காவல் நிலையத்தில் இருந்து கந்தசாமி மகன் கிடைத்து விட்டான் சென்னையில் என்று. அப்புறம் ஊரில் இருந்து ஒரு 15 பேர் காவல் துறை அதிகாரிகளுடன் சென்னை சென்று விவேக்கை மீட்டு வந்தனர்.


விவேக் அங்கு நடந்ததை சொல்லும் போது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது அவனை கடத்தியவர்கள் அவன் பள்ளியில் இருந்து வெளியே நிற்கும் போது இலந்த வடை வாங்கிக்கொண்டு இருந்து இருக்கிறான் ஒருவர் வந்து இன்னும் 2 வாங்கிக்கப்பா நான் உங்க அப்பாவின் நண்பன் தான் என்று சொல்லி வாங்கி கொடுத்து இருக்கிறான் நான் போகும் போது உங்க வீட்டிலி விட்டிவிடட்டுமா என கேட்க இவன் சரி என்றதும் அவனை ஒரு பைக்கில் அழைத்து பின் வேறு காருக்கு மாற்றி இருக்கிறார்கள். அடுத்த நாள் விழித்துப்பார்க்கும் போது கார் எங்க இருக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை அவனுக்க காரிலேயே இட்லி வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.


விவேக் சாப்பிட்டு விட்டு என்ன ஏது என்று தெரியாமல் அவனை மிரட்டி இருக்கிறார்கள் அவனும் புரியாமல் தவித்துக்கொண்டு இருந்திருக்கிறான். சாலை ஓரத்தில் பப்பாளி விற்றுக்கொண்டு இருந்திருக்கிறார்கள் இவன் பப்பாளி வேண்டும் என கேட்க அவர்களில் ஒருவன் கூட்டிக்கொண்டு போய் வாங்கி கொடுத்து உள்ளான் இவர்கள் சாப்பிடும் போது ஒரு காவல் துறை அதிகாரி அங்கு வந்து ஓரமாக பைக் நிறுத்தி தம் அடிக்க விவேக் சாப்பிட்டு விட்டு இன்னொன்று வேனும் என கேட்க ஒன்று தான் வாங்கித்தருவேன் என அவன் இவனை அதட்டி மிரட்ட விவேக் அவனை விட்டு ஓடி இருக்கிறான் ஓடி தடுக்கி விழந்து உள்ளான் அவனை அந்த காவல் துறை அதிகாரி தூக்கி குப்பைகளை தட்ட இதை பார்த்த கடத்தியவன் ஒதுங்கி விட்டான். அந்த அதிகாரியிடம் விவேக் முன்னுக்குப்பின் தவறான தகவல் தர அவர் அவனை அங்கு யாருடன் வந்தான் என அவர் தேட கடத்தியவர்கள் எஸ்கேப்.


விவேக்கிடம் அவனது அப்பா பெயர், அம்மா பெயர் மட்டும் சொல்லி இருக்கிறான் ஊர் பேர் கேட்க தாத்தா பாட்டி என பல ஊர்களை சொல்லி உள்ளான். அதிகாரிகளும் அவனிடம் ஒவ்வொருவராக பேச்சு கொடுக்க அதில் ஒரு பெண் அதிகாரி உங்க அப்பா உன்னை எங்க சினிமாவிற்கு கூட்டிட்டுப்போவார் என சொல்ல அவன் ஊர் பேர் சொல்லி தியேட்டர் பேர் சொல்லி இருக்கிறான் இங்க தான் நிறைய படம் பார்த்து இருக்கிறேன் என்று சொல்ல காவல் துறை அதிகாரிகள் அந்த ஊர் நிலையத்திற்கு போன் செய்து கேட்க ஆமாம் இங்க விவேக் என்ற சிறுவன் காணமல் போகிவிட்டான் அவன் தான் என்று சொல்ல அப்புறம் விவேக்கை மீட்டு உள்ளனர். விவேக்கிடம் அதிகாரிகள் கிட்டத்தட்ட 15 மணி நேரம் பேச்சு கொடுத்து உள்ளனர்..


விவேக் என்னும் என் நண்பன் என்னுடன் சென்னையில் பணியாற்றும் போது என்னிடம் கூறிய சம்பவம் இது.


இச்சம்பவம் மூலம் எனது கருத்து சிறுவயதில் குழந்தைகளிடம் அப்பாவின் பெயரையும், அவரது தொலைபேசி எண்ணையும் குழந்தைகளிடம் சொல்லி சொல்லி மனதில் பதிய விட்டால் குழந்தை எங்காவது காணமல் போனாலோ, எதாச்சையாக நம்மிடம் சொல்லாமல் சென்று விட்டலோ நீ யார் என கேட்டால் அப்பாவின் பெயரும் தொலைபேசி எண்ணும் அச்சிறுவர்களுக்கு தெரிந்தால்  அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

Monday, August 30, 2010

மூக்குத்தி முத்தழகு...


மூக்குத்தியைப்பற்றி ஒரு காலத்தில் பல பாடல்கள் வந்து உள்ளன, அதற்கு காரணம் அப்போதெல்லாம் மூக்குத்திய பெண்களை நிறைய பார்க்க முடியும் ஆனால் இப்போது மிக மிக குறைவு....அழகாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. மூக்குத்தி குத்திய பெண்ணின் அழகு தனிதான். பெண்கள் மூக்குத்தி அணிந்திருந்தால் அவர்களின் அழகு மிளிர்கிறது என்பார்கள். மூக்குத்தி குத்துவது அமைத்தனம் என்றும் கூற கேள்விப்பட்டு இருக்கிறேன். மூக்குத்தி அணிகலன் மட்டுமல்ல உடலுக்கும் நல்லது என்று கூறுகிறார்கள்.

கிராமப்புறங்கிளில் மூக்குத்தி அணிந்த பெண்கள் அதிகம் காணலாம் அன்று. இன்று மூக்குத்தி குத்திய பெண்களை கிராமம் மட்டுமல்ல எங்கும் பார்த்தாலும் கிடைக்கமாட்டர்கள் தேடினால் தான் கிடைப்பார்கள். முன்காலத்தில் பெண்கள் மூக்குத்தி அணிந்தது மருத்துவக்காரணம் அதிகம் அதனால் தான் மூக்குத்தி அணிந்துள்ளனர் காலப்போக்கில் அது அடிமைத்தனம் என்று கூறி கணவன் இறந்தால் பெண் மூக்குத்தியையும் கழட்ட வேண்டும் என்ற அடிமைத்தனத்தால் பல பெண்கள் மூக்குத்தி குத்துவதை தற்போது விரும்புவதில்லை. அதனால் மூக்குத்தி குத்திய பெண்களை இப்போது பார்ப்பது அரிதாகிவிட்டது. மூக்குத்தியை பெண்கள் பலங்காலத்தில் குத்தியதற்கு மருத்துவ காரணங்கள் தான் அதிகம்.



மருத்துவ காரணங்கள்

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.  மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். 
 
மூக்குக் குத்துவற்கு இப்படிப் பல காரணங்கள் உண்டு. மூக்குத்தி அணிவதால் பல நன்மைகள் உண்டு. ஆனால் கணவனை இழந்ததும் பெண் மூக்குத்தியைக் கழற்ற வேண்டுமென்பது  எப்படி வந்தது என்பது  தெரியவில்லை. அப்படிக் கழற்றும்  போதுதான் மூக்குத்தி அடிமைச்சின்னமாக மாறுகிறது.

Thursday, August 26, 2010

சுதந்திரநாடு சோத்துக்கு கேடு

நாம் இருப்பது சுதந்திரநாட்டில் அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றோமா என்றால் நிச்சயம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நமது முன்னோர்கள் அவர்களின் சுயநலமில்லாமல் நமக்கு பின் வரும் சந்ததியினர் சுதந்திரமாக வாழவேண்டும் என அடி உதை பட்டு ஆங்கிலேயரிடமிருந்து வாங்கப்பட்டது சுதந்திரம். அவர்கள் வாங்கித்தந்த சுதந்திரத்தால் தான் நாம் சுதந்திரமாக இருக்கிறோம்.

சுதந்திரமாக நாம் என்ன செய்கின்றோம் என்றால் நிறைய செய்கிறோம் நமக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற நிறைய உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் யாரைப்பற்றி வேண்டுமானலும் திட்டலாம், அவர்களும் நம்மை திட்டலாம் இது ஒரு வகை சுதந்திரம். வலைபதிவுகளில் தமிழக அரசியல் தலைவர்கள் முதல் டெல்லி அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் திட்டியும், பாராட்டியும் எழுதுகிறோம் இது நமது சுதந்திரம், திட்டு வாங்கியர்கள் நமக்கு ஆட்டோவில் ஆள் அனுப்பலாம் அது அவர்கள் சுதந்திரம்.

இன்னும் பல சுதந்திரங்கள்

தண்ணி அடித்துவிட்டு சுதந்திரமாக வாகனம் ஓட்டுவது. காவலரிடம் மாட்டினால் 100 கொடுத்து மீண்டும் சுதந்திரத்தை பெறுவது.

சிக்னல் விழுகும் போது குறுக்கே வாகனத்தை ஓட்டுவது. வெள்ளை கோட்டைத்தாண்டி வண்டியை நிறுத்துவது.

பரிசு கொடுத்து பல காரியங்களை செய்வது.

சுதந்திரமாக நடப்பது, ஓடுவது என பல வகையில் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். வளர்ந்த நாடுகளில் இல்லாத சுதந்திரம் நமக்கு இருக்கிறது வாகனத்தில் செல்லும் போது உச்ச வந்தால் வாகனத்தை ஓரம் நிறுத்தி உச்ச போவது என சொல்லிக்கொண்டே போகலாம்.

சோத்துக்கு கேடு

இச்சுதந்திர நாட்டில் நாம் வாழும் சுக வாழ்க்கை இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் நமக்கு சோத்துக்கு வழி இல்லாமல் இருக்கப்போகிறோம். உணவுப்பண்டங்களை ஏற்றுமதி செய்த நாம் இனி இறக்குமதி செய்தால் தான் சோறு இல்லை எனில் நம் சோத்துக்கு கேடு தான். இன்று நம் நாட்டின் முக்கிய தொழில் விவசயாம் தான் இதில் நமக்கு பல பிரச்சனைகள் உண்டு அனைத்தையும் பின் தள்ளி நம் விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதனால் தான் சுதந்திரமாக என்ன வேண்டுமோ அதை சாப்பிட முடிகிறது. இல்லை என்றால் ஒவ்வொரு பொருளையும் இறக்குமதி செய்து தான் சாப்பிடவேண்டும். இன்றைய காலகட்டத்தில் விளை நிலங்கள் எல்லாம் வீடு கட்டுவதற்கு பிரித்து போட்டு விற்பனை செய்கின்றனர் இது தான் இன்று கொடுகட்டி பறக்கும் வியாபாரம். விவசாய விளை நிலங்களில் வீடுகட்ட அப்ரூவர் தரக்கூடாது என அரசு சொன்னாலும் நம் ஆட்கள் அப்ரூவர் தரும் அதிகாரியை அப்ரூவராக மாற்றி அனுமதி வாங்கிவிடுகின்றனர். விவசாய நிலங்களை எல்லாம் அளித்து தொழிற்சாலைகளும், வீட்டு மனைக்கும் விற்பனை செய்வது இன்னும் தொடருமானால் விரைவில் இந்த சுதந்திர திருநாட்டில் சோத்துக்கு வழி இல்லாம் இறக்குமதி என்னும் பெயரில் அடுத்தவன் கை ஏந்தும் நிலைமை வரும்...

Wednesday, August 25, 2010

நம்ம வீட்டு டாக்டர்.....


இன்று நாம் எதற்கெடுத்தாலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளோம் சாதரண தலைவலி வந்தால் மருத்துவரிடம் ஓடுகிறோம் அங்கு அவர் கண் பரிசோதனை, நரம்பு பரிசோதனை என சாதாரண தலைவலிக்கு 1000 ரூபாய் செலவு வைத்து விடுகிறார்கள். அடுத்த நாள் தானாக அத்தலைவலி தீர்ந்து விடும். நம் வீட்டில் நாம் உண்ணும் உணவில் உள்ளது நமக்கான நோயை குணப்படுத்தும் ஆற்றல் இதைத்தான் நாம் பாட்டி வைத்தியம் என்று கூறுகிறோம். 

பாட்டி வைத்தித்தால் பல நோய்கள் குணமாகின்றன ஒரு எல்லையை தாண்டியபின் மருத்துவமனைக்கு செல்லாம். நம் வீட்டுப்பொருட்கள் என்ன நோய்க்கு என்ன சாப்பிடலாம் என்று சில பொருட்களை தொகுத்து உள்ளேன். இன்னும் நிறைய பொருட்கள் உள்ளன அந்த தகவல்கள் எல்லாம் சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்....

உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்.

ருசியின்மையைப் போக்குபவை
புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி.

சிவப்பணு உற்பத்திக்கு
புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை.

மருந்தை முறிக்கும் உணவுகள்
அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்.

விஷத்தை நீக்கும் உணவுகள்
வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்பித்தம் தணிப்பவைசீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை.

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

வாய் தூர்நாற்றம்
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

விக்கலை நிறுத்த
ஒரு கரண்டி சர்க்கரை வாயில் போட்டு சுவையுங்கள் பறந்து போகும் விக்கல்.

இஞ்சி
மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம் தெரியும் இஞ்சியின் மகிமை. மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூட்டை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

Tuesday, August 24, 2010

வெங்காயத்தில் என்ன இருக்கு?


வெங்காயம் இந்த சொல்லை நாம் அதிகம் கடிந்து கொள்ள பயன் படுத்துகிறோம். ஆமா பெரிய வெங்காயம் என்று அனைவரும் சொல்லதில் ஆச்சர்யமில்லை. உண்மையில் வெங்காயம் பெரியது தான் இதில் உள்ள மருத்துவ குணங்கள் எண்ணிலடங்கா. வெங்காயத்தை சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரு வகை உள்ளது. நம் தமிழ் மக்கள் வெங்காயத்தை பயன்படுத்தாமல் குழம்பு வைப்பது குறைவு. அதிக பேர் பயன்படுத்தும் சமையல் அறை பொருள் வெங்காயம். இவ்வெங்காயத்தால் ஒரு முறை ஆட்சி மாற்றமே நடந்து உள்ளது.

ஆங்கிலத்தில் 'Onion' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த 'ஆனியன்' என்ற வார்த்தைக்கு மூலமான 'இலத்தீன்' சொல்லான 'யூனியோ' என்பதற்கு 'பெரிய முத்து' என்று பொருளாம். பல வித உடற்கோளாறுகளையும் தீர்த்துவைக்கும் வெங்காயத்திற்கு இந்தப் பெயர் பொருத்தம்தானே?


'என் பெண்ணைக் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறும் மாமனார், மாமியாரிடம் 'கண்டிப்பாக வெங்காயம் நறுக்காமல் பார்த்துக்கொள்கிறேன்' என்று மாப்பிள்ளை சொல்வது பழைய கால நகைச்சுவைக்காட்சிகளில் அடிக்கடி இடம் பெறுவதுண்டு. வெங்காயத்தைத் தண்ணீரில் நனைத்துவிட்டு நறுக்கினால் அவ்வளவாகக் கண் எரியாது, வெங்காயம் நறுக்குகையில் 'சூயிங் கம்' சாப்பிட்டால் கண் எரியாது என்று பல உத்திகள் கொடுக்கப்பட்டாலும் 'தன்னை வெட்டிக் கொல்பவரை, தனது அச்செயலுக்காக வருந்தி அழ வைக்காமல்' வெங்காயம் விடுவதில்லை. வெங்காயம் ஏன் கண்களைக் கலங்கடிக்கிறது தெரியுமா? அதில் உள்ள வேதிமமான 'அலைல் ப்ரொபைல் டை சல்பைடு' தான் இதற்குக் காரணம். இந்த ஒரு சங்கடம் தவிர, வெங்காயத்தால் மற்ற எல்லாமே நன்மை, நன்மை, நன்மையைத் தவிர வேறில்லை என்று அடித்துச் சொல்லலாம்.


வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே, நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது. பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் பிரதான இடத்தை வகிக்கின்றது. பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள், வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதய சக்தியைத் தருகிறது. நரை, தலை வழுக்கையைத் தடுக்கும். உடல் வெம்மையைத் தணிக்கும். இரத்த விருத்தி, எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த நோய்கள், கண் நோய்கள், வாத நோய்களை குணமாக்குகிறது.

வெங்காயத்தின் பயன்கள்:

1) நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.

2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து காதில் விட, காது வலி குறையும்.

3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.

4) வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5) வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

6) வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.

7) வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.

8) வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.

9) வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும்.

10) வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.

11) வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

12) வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

13) படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.

14) திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.

15) வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.

16) வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.

17) பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.

18) வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட, மேகநோய் குறையும்.

19) வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20) பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21) வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது."

22)  கொஞ்சம் வெங்காயத்தை அரைத்து, உப்பு, வெறும் சோறு இவற்றுடன் கலந்து பிசைந்து வெற்றிலையில் வைத்துக் கட்டுப்போட்டால், நகச்சுற்று சரியாகும்.


23)  தேள் கொட்டிய இடத்தில் உடனடியாக வெங்காயத்தை நறுக்கித் தேய்ப்பதன் மூலமும், பாம்புக்கடிக்கு பச்சை வெங்காயத்தை மென்று தின்பதன் மூலமும், நஞ்சால் ஏற்படும் பாதிப்பு குறையும். பிறகு முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.


24)  சின்னவெங்காயத்தை வதக்கித் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் வெங்காயத்தை, விளக்கெண்ணெயில் வதக்கிச் சாப்பிடலாம். உடனடியாகப் பலன் உண்டாகும். வெங்காயம் சிறு குடல் அழற்சியைப்போக்கவும், குடல் பாதையை சுத்தம் செய்யவும்கூட உதவுகிறது.


25) மஞ்சள் வெங்காயம் இவற்றை அரைத்துச் சுட வைத்து அவற்றை வேனல் கட்டிகளில் தடவினால், சீக்கிரம் பழுத்து உடைந்துவிடும். முகப்பருத் தொல்லை உள்ளவர்கள் வெங்காயத்தை நறுக்கி, பருக்களின் மீது தேய்க்க பருத்தொல்லை போயே போச்சு.

26) வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். குறிப்பாக உடல் சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமலுக்கு இது மிகவும் நல்லது. புகை பிடிப்பதால் அல்லது தொழிற்சாலைகளில் மாசு கலந்த காற்றை சுவாசிக்க நேர்பவர்கள், வெங்காயச் சாற்றை அடிக்கடி அருந்திவர நுரையீரல் சுத்தமாகும். இரத்த அழுத்ததைக் குறைக்கும் வல்லமையும் வெங்காயத்திற்கு உண்டு.


27) வீட்டிற்கு 'வண்ணம்' பூசுகிறீர்களா? அந்த நெடியைத் தாங்க முடியவில்லையா? உடனே இரண்டு பெரிய வெங்காயங்களை இரண்டாக நறுக்கி வீட்டின் நான்கு மூலையிலும் வையுங்கள். அதே போல், வீட்டில் நோயாளிகள் இருந்தாலும் கிருமிகள் பரவாமல் தடுக்க, இதைச் செய்யலாம். ஏனெனில் , வெங்காயம் சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளை உறிஞ்சிவிட வல்லது. எனவே, சமையல் செய்ய வெங்காயம் தேவையானால், நறுக்கி நீண்ட நேரம் வைக்காமல் உடனடியாகப் பயன்படுத்தி விடுவது நலம்.

Thursday, August 19, 2010

மாரடைப்பை தடுக்கும் இஞ்சி


இஞ்சி உணவின் ருசி கருதி உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு நறுமண பொருள். நறுமண பொருள் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நோய் நிவாரணி ஆகும். தமிழர்களின் உணவுகளில் இஞ்சிக்கு அதிக இடம் உண்டு. உலர்ந்த இஞ்சிக்கு சுக்கு என்று பெயர் சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை என்று கிராமங்களில் கூறுவார்கள்.

முன்பு கிராமங்களில் வாரத்திற்கு ஒரு நாள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் காலையில் எழுந்து பல் துலக்கி காபிக்கு பதில் இஞ்சிசாறுடன் பால் கலந்த இஞ்சி காபியை பருகுவர் இஞ்சியின் காரம் தவிர்க்க நாட்டுச்சக்கரை கலந்து பருகுவர். வெறும் வயிற்றுக்குள் செல்லும் இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொண்டு வர உதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆனால் இன்று நாகரீகம் வளர்ந்து இஞ்சிகாபி சாப்பிடுவது மிகவும் குறைந்து விட்டது. வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இஞ்சி காபி அருந்துவது அவசியம் இதை கடைபிடித்து பாருங்கள் உடல் பொலிவு பெறுவதுடன் சுறுசுறுப்பும் கிடைப்பதை உணரலாம்.

மாரடைப்பிற்கு அருமருந்து இஞ்சி: 

"இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும். 

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது." என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இஞ்சியின் குணப்படுத்தும் மற்ற நோய்கள்
  • சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.
  • இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி       
  • இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
  • மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
  • செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
  • மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
  • தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.
  • மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும்.
  • இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.
  • இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. 
  • மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
  • பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
  • ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.
  • பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். ( இஞ்சியை சுத்தம் செய்து சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து அதனை காய வைத்தால் சுக்கு கிடைக்கும்)
  • இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
  • இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
  • இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
  • இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
  • இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இன்று பலருக்கு உள்ள பிரச்சனை மலச்சிக்கல் சாப்பிடும் அளவிற்கு உடல் உழைப்பு அதிகம் இல்லாததால் இப்பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. இது வெளியில் சொல்லதற்கும் நிறைய பேருக்கு கூச்சம் இருக்கும் இதனால் தான் படும் அவதியை மருத்துவரிடம் சொல்லி மருந்துக்காக செலவு செய்வதற்கு நம் வீட்டில் உள்ள இஞ்சியை தட்டிப்போட்டு வாரம் ஒரு முறை இஞ்சி சுக்கு காபியை அருந்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

Tuesday, August 17, 2010

உமாசங்கர் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு என் ஆதரவு...

உமாசங்கர் இந்த பெயர் இன்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். இதற்கு காரணம் அவரது நேர்மை. இந்த நேர்மையான அதிகாரிக்கு ஆதரவாக உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள் என்று நண்பர் அருண் பதிவிட்டு இருந்தார் வரவேற்க வேண்டிய பதிவு.

இன்று உமாசங்கர் நாளை யாரோ? உமாசங்கருக்கு மட்டுமல்ல நேர்மையான பணத்திற்கு அடிமையாகாத பொதுமக்கள் நலனில் அக்கறை உள்ள எந்த ஒரு அதிகாரிக்கும், அவர் எந்த ஜாதியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும் என் ஆதரவு உண்டு.

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்"

Monday, August 16, 2010

HIV நம்பிக்கை மையம்


HIV தாக்கினால் என்ன செய்வது அதை எப்படி கையாள வேண்டும் என நான் திருமணத்திற்கு முன் இரத்தப்பரிசோதனை அவசியம் என்று ஒரு பதிவு இட்டு இருந்தேன் அதற்கு பல பின்னூட்டங்களிலும், மெயிலிலும் வருத்தப்பட்டும் அடுத்து என்ன செய்யலாம் என்றும் பல நண்பர்கள் சில அறிவுரைகள் கூறி இருந்தனர் அவர்களுக்கு என் சார்பிலும் என் நண்பன் சார்பிலும் நன்றி...

என் நண்பனின் தங்கை ரிசல்ட் வாங்கி சென்ற அடுத்த நாள் அவரே யாருக்கும் தெரியமால் அந்த ரிசல்ட்டைப் பார்த்து விட்டார். நல்ல தைரியமாகத்தான் இருக்கிறார். இதற்கு என்ன வழி என்று பலரிடம் ஆலோசனை கேட்டு நண்பரிடம் விளக்கினேன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் மாதம் 8 ஆயிரம் வரை செலவாகும் என்று கூறி இருந்தார்கள் அரசு மருத்துவமனையில் அனைத்தும் இலவசம் என்று சொன்னார்கள் நண்பனின் மாத வருமானம் குறைவு தான் தனது குடும்பத்தையும் பார்க்க வேண்டும் தங்கையையும் பார்க்க வேண்டும் என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி முடிவில் அரசு மருத்துவமனைதான் சரி என்று முடிவு செய்தோம்.


கோவை அரசுமருத்துவமனையில் உள்ள நம்பிக்கை மையத்திற்கு சென்றோம் அங்கு காலை 8 மணிக்கு ஒரு 10 பேர் காத்திருந்தனர் அங்கு இருந்த அதிகாரியிடம் இவர் என் நண்பர் அவரின் தங்கை என நடந்த அனைத்தையும் சொன்னேன். பொறுமையாக கேட்டு அருமையாக பதில் சொன்னார். ஒவ்வொரு முறை அவர் சொல்லும் போதும் மிக புரியும் படி விளக்கினார்.

நீங்கள் தனியாரிடம் பரிசோதனை செய்ததை நாங்கள் எடுத்துக்க மாட்டோம் நாங்கள் இங்கு இரத்தப் பரிசோதனை செய்து உங்கள் இரத்தத்தில் வைரஸ் கலந்து இருந்தால் அதற்கு அடுத்து இன்னும் சில பரிசோதனை செய்து இங்கு உள்ள மருத்துவர் இது வைரஸ் என்று உறுதி செய்த பின் தான் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று சொல்வார். உங்களுக்கு வைரஸ் இருப்பது உறுதியானலும் அது எந்த நிலையில் இருக்கிறது என்று கண்டுபிடித்து அதற்கு தகுந்த மருந்துகள் கொடுப்போம் என்றார். இது ஆரம்ப நிலையில் இருந்தால் நீங்கள் சத்துள்ள உணவு வகைகள் மற்றும் எந்த நோயும் தாக்காமல் பாதுகாப்பாக இருந்தால் நீண்ட நாள் நிச்சயம் வாழலாம் அப்படி வாழ்பவர்கள் இன்று நிறைய இருக்கின்றனர் என்றார். மேலும் வைரஸ் தாக்கபடபட்டவர்கள் சரியான மருந்து சாப்பிட்டு நன்றாக உள்ளவர்கள் இதே வைரஸ் தாக்கியவரை திருமணம் செய்து கொள்ளலாம் இன்று இது போல் நடக்கிறது தைரியமாக இருங்கள் என்று முகம் சுளிக்காமல் அன்போடு கூறினார்.

அவருக்குப்பின் வந்த ஒரு பெண் அதிகாரி அவரைப்போலவே நிதானமாகவும், நன்கு புரியும் படியும், எப்படி எதிர்கொள்ளலாம் என்று கூறி இரண்டு பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். பரிசோதனை விவரம் வந்த பின் தான் மருத்துவரை அனுகவேண்டும் என கூறி தைரியம் சொல்லி அனுப்பினார்...

அடுத்து இரண்டு நாட்களுக்கு அனைத்து பரிசோதனையும் செய்துள்ளனர் (முதல் நாள் மட்டும் நான் உடன் சென்றேன்) நண்பனின் தங்கைக்கு HIV இரத்தத்தில் கலந்து உள்ளது மற்றபடி உடலின் எதிர்ப்பு சக்தியினால் அது அடுத்த நிலைக்கு செல்லவில்லை உங்கள் உணவுகளை சத்து உள்ள உணவாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் நோய் தொற்றும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் உடலில் உள்ள கலோரின் குறையாமல் இப்போது இருப்பது போலவே இருக்க உணவு தான் முக்கியம். அரசால் இலவசமாக அளிக்கப்படும் மருந்துகளை கொடுத்து உள்ளனர்.

நம்பிக்கை மையம் நம்பிக்கை அளிக்கிறது.....

Friday, August 13, 2010

அந்தியூர் குதிரைசந்தை படங்களுடன்

திருவிழா தொடங்கி 2 நாட்கள் முடிவடைந்த நிலையில் 3ம் நாளான இன்று காலையே கோயிலுக்கு புறப்பட்டு விட்டோம் மாலை நேரங்களில் மழை பெய்வதாலும் மாலையில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சாமி தரிசனத்திற்கு வெள்ளிக்கிழமை காலையில் செல்வோம். சனிக்கிழமை கோயிலைச் சுத்திப்பார்பதற்கும் தூரி விளையாடுவதற்கும், சோளக்கருது, கொள்ளேகால் பருப்பி, மைசூர் அல்வா, பேரீக்காய் இதை எல்லாம் சாப்பிட்டு விட்டும் வீட்டுக்குத் தேவையான பொருட்களான தோசைக்கல், பனியாரக்கல் கடைகளில் வாங்கிவிட்டும் வருவோம். சில கடைகளில் வீச்சருவாளும் கிடைக்கும் சனிக்கிழமை மதியம் 2 மணியில் இருந்து இரவு 1 மணி வரை ஆட்டம் பாட்டத்தோடு குடும்பத்துடன் அனுபவிப்போம்... அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அதைப்பற்றி  சொல்கிறேன் இப்ப படத்தை பாருங்க.. அனுபவிங்க....
சாட்டை கடை... இது போல் ஒரு 50 கடை இருக்கும்
 இந்த குதிரக்கு 3 சுளி இருக்குதாம் அதனால் 3 இலட்சமாம்...

நான், மாமா, என் குழந்தை மற்றும் 3 லட்ச குதிரை
 6 லட்சமாம் (6 சுளி இருக்குதாம்)



இராஜஸ்தான் குதிரைகள்...

 வேட்டைக்காரன் படத்தில் நடித்த குதிரை

  நடனம் ஆடும் குதிரை... (இப்ப குளிக்க போய்கிட்டு இருக்குது)
 5 லட்சம்


1 லட்சம்


 சாட்டைக்கடை

சோளக்கருது ( வழி எங்கும் இப்படி குவித்து வைத்து கூவி கூவி விற்பனை செய்வார்கள்
அல்வாக்கடை
வரும் பதிவுகளில்... பலவகையான இராட்டினம், மாட்டுச்சந்தை மற்றும் விதவிமான கடைகள் படங்கள்... ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்சி சுமார் 2000 குடும்பங்கள் வந்து பொங்கல் வைத்து கிடா மற்றும் கோழி வெட்டி குடும்பம் குடும்பமாக விழாவைக் கொண்டாடுவர்...

Thursday, August 12, 2010

அந்தியூரில் தொடங்கியது இந்தியாவின் மிகப்பெரிய குதிரை சந்தை

அந்தியூர் குருநாதசாமி தேர்த்திருவிழா மற்றும் குதிரைச்சந்தை

ஆடி மாதம் கடைசி வாரத்தில் அந்தியூர் குருநாதசாமி திருவிழாவுடன் குதிரைச்சந்தையும் மாட்டுச்சந்தையும் தொடங்கும். இங்கு நடக்கும் குதிரை சந்தை இந்தியாவின் மிகப்பெரிய குதிரை சந்தை என்று கூறுவார்கள். அதே போல் மாட்டுச்சந்தையும். இந்த குதிரை சந்தை ஹைதர் அலி, திப்புசுல்தான் காலத்தில் தொடங்கப்பட்டது என்றும் போருக்காக குதிரை வாங்குவதற்கு இச்சந்தை மிக பிரபலம் என்பார்கள் ஆண்டு தோறும் 5 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு லட்சக்கணக்கில் மக்கள் வருவார்கள். இந்த வருடம் 5 இலட்சம் பேர் கூடுவார்கள் என்றும் அதற்கு தகுந்தாற் போல் தற்காலிக பேருந்து நிலையம், வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்படடுள்ளது என்று கோயில் அறங்காவலர்கள் கூறினர்.

தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான கால்நடைகள் வளர்ப்புப் பிராணிகளை வாங்கவும், விற்கவும் அதிகளவில் வருவர். இச்சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள குதிரைகள் ரகத்தில் காட்டியவாடி, நெக்ரா, நாட்டுக்குதிரை, மட்டக்குதிரை, ரேஸ் குதிரை, இங்கிலீஸ் பீட், பேபி குதிரை என பலவகை விற்பனைக்கு வந்துள்ளன. 

குதிரையின் கவர்ச்சியான நிறம், ஆளுமை மிக்க கம்பீரத் தோற்றம், சுழி, வயது, ராசி என பல அம்சங்களைக் கொண்டு அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சுமார் 7 அடி உயரமுள்ள 4 வயது காட்டியவார் குதிரை 6 லட்சம் வரை விலை போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே வகை 6 மாத குட்டி 3 லட்சம் வரை விற்கப்படும். 

கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம், பேரிரைச்சல் ஏற்படும் இடங்களில் கூட பதற்றமடையாமல் கம்பீரமாக அமைதியாக இருக்கும் "இங்கிலீல் பீட்’ குதிரைகள் விலை 3 லட்சம். இவ்வகை குதிரைகள் போலீஸôரின் ரோந்துப் பணிகள், பந்தயம், கடல்கரை, பூங்காக்களில் குழந்தைகளை அமர வைத்து உலா செல்ல பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.  மாடுகளில் பர்கூர் செம்மறை மாடுகள், காளிகார், அம்ரித், ஆலாம்பாவி, தஞ்சை உம்பாச்சேரி, காங்கேயம் காளைகள் என பலவகை மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில், 6 அடிக்கு உயரமுள்ள காங்கேயம் காளைகள் ஜோடி 80 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. 

திருப்பூர் வாரணவாசியைச் சேர்ந்த கோபிநாத், காங்கயம் காளை ரகத்தில் மயிலைக் காளை, செவளைக்காளை ஜோடி 1.50 லட்சத்துக்கு கேட்கப்படுவதாக தெரிவித்தார். சந்தைக்கு புதுவரவான மைசூர் மலையான் மாடுகள் ஜோடி 75 ஆயிரம்.  விவசாயப் பணிகளில் எவ்வகையாக இருந்தாலும் அசராமல் செய்யும் ஆந்திரத்தின் ஓங்கோல் ரக மாடுகள் ஜோடி 1.50 லட்சம். இவ்வகை மாடுகள் பல்லவர் காலத்து சிற்பங்களில் இவ்வகை மாடுகளே இடம்பெற்றுள்ளதாக பள்ளிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி தெரிவித்தார்.

அதிகம் பால் கறக்கும் ஜெர்சி, சிந்து ரக பசுக்கள், கன்றுகள் பொள்ளாச்சி, கோவை, மைசூர் மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.  ஆடுகளில் 4 அடி உயரமுள்ள ஜமுனாபாரி, நாட்டு ஆடுகள், கலப்பின ஆடுகள் என பலவகைகளும், கோழிகளில் ஈமு கோழி, நாட்டுக் கோழிகள், சண்டைக் கோழிகள் என பார்வையாளர்களைக் கவர்கின்றன.

கால்நடைகளுக்குத் தேவையான கயிறுகள் மூக்கணாங்கயிறு முதல் அரசியல் கட்சிகளின் நிறக் கொடிகளின் நிறங்களில் சாட்டைகள் என பல வண்ணங்களில் அணி வகுத்துள்ளன. மேலும், அலங்காரப் பொருள்கள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளுக்குத் தேவையான பொருள்கள், விவசாயக் கருவிகள் அதிகளவில் வந்துள்ளன.  விவசாயிகள் மற்றும் பல மாநில வியாபாரிகள், அதிகளவிலான கால்நடைகள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், ஆயிரக்கணக்கில் அலை அலையாய் வரும் பார்வையாளர்கள் என கால்நடைச் சந்தை, விழாக் கோலம் பூண்டுள்ளது
.

குதிரை மற்றும் திருவிழா படங்கள் அடுத்த பதிவில்.....
 

Wednesday, August 11, 2010

பதிவுலகமும் நானும்


இத்தொடர் பதிவு எழுத என்னை அழைத்த கயலுக்கு என் நன்றி....
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சங்கவி
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

எனது உண்மையான பெயர் சங்கமேஸ்வரன்.
இப்பெயர் வைக்க காரணம் என் மனைவியின் பெயர் கவிதா... எங்கள் இருவர் பெயரையும் சேர்த்து சங்கவி என்று ஆரம்பிச்சாச்சு...

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

கூகுளில் எதாச்சையாக நடோடிகள் என டைப் செய்தேன் அப்போது வந்த விமர்ச்சனங்களைப் பார்த்தேன் அப்போது தான் வலைப்பதிவு என்ற விசயம் தெரியவந்தது. அப்புறம் என்ன தொடங்கியாச்சு...

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா நானா? நானும் தமிழ்மணம், தமிழிஸ், தமிழ்10, பேஸ்புக் அப்புறம் இருக்குற மெயில் ஐடிக்கெல்லாம் அனுப்புறேன் ஆனா படிக்கறாங்களான்னு தெரியல... (எப்படி பிரபலமாவது என இன்னும் யோசிக்கிறேன்)

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

இருக்கறதுல பாதி பதிவு சொந்த பதிவுதான் நமது ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவமே... அதை அப்படியே பதிவாக்கிவிட வேண்டியது தான்....

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா? 

பதிவின் மூலம் கோடி கொடுத்தாலும் நண்பர்களுக்கு ஈடு இணை எதுவுமில்லை நான் சம்பாரித்தது நண்பர்களை மட்டுமே....

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு பதிவு வைத்திருக்கிறேன் இரண்டும் தமிழ் பதிவுகள் தான் ஒன்று சங்கவி இன்னொரு பதிவு கிராமத்துக்காரன்...

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது ஏன் எனில் எழுத்து என்பது அவர்களுடைய சுதந்திரம்.. பொறாமை கொஞ்சம் நஞ்மல்ல நிறைய உண்டு அழகா கவிதை எழுதுறாங்க, அழகா கதை எழுதறாங்க, அழகா விமர்ச்சனம் எழுதுறாங்க நமக்கு வர மாட்டேங்குதே அப்படின்னு எல்லார் மேலேயும் பொறாமை உண்டு...

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

என் பதிவைப் பார்த்து முதன் முதலில் பாராட்டியது மணிஜீ தான்..
நிறைய தகவல்கள் கொடுத்து எழுதச்சொன்னதுடன் என்னை வலைபதிவர்களிடம் அறிமுப்படுத்தியது இவர்தான்... 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப்பற்றி பதிவுலகம் தெரிந்து கொள்ள வேண்டிய அணைத்தும் என் பதிவுகளில் இருக்குது எல்லாம் படிங்க என் சேட்டை அங்க தெரியும்.....

இப்பதிவை தொடர இதை படிப்பவர்கள் அனைவரையும் அழைக்கிறேன்... நிறைய பேர் எழுதி இருப்பீங்க எழுதாதவங்க எல்லாரும் எழுதுங்கோ............. 

Tuesday, August 10, 2010

ஆதரவற்ற வேர்கள்....


வேர்கள் இல்லை எனில் மரமும் இல்லை கிளைகளும் இல்லை. நான் சொல்லும் வேர் பெற்றோர்கள் நாம் உருவாக காரணமே இவர்கள் தான் ஆனால் இன்று 100ல் 20 பேர் தங்களது தாய் தந்தையை கவனிப்பதில்லை இது தான் அதிகம் உள்ள குற்றச்சாட்டு. நேற்று இரவு வானொலி கேட்டுக்கொண்டு இருந்தேன் அப்போது கேட்டவை கோவையில் கடந்த வாரத்தில் மகன் என்னை கவனிப்பதில்லை என்று காவல்துறைக்கு வந்த தொலைபேசி எண்ணிக்கை மிக அதிகம். இந்த  தொலைபேசி அழைப்புகளுக்கும் அவர்கள் சார்ந்த காவல் நிலையத்தில் இருந்து காவல் துறை ஆய்வாளர்களை அனுப்பி பிரச்சனைகளை விசாரித்து தீர்வு காணப்பட்டது என்று மேற்கு மண்டல உயர் அதிகாரி கூறினார்..

அந்த தொலை பேசி அழைப்புகழ் எல்லாம் பெற்றோரிடம் இருந்து வந்தது. என் மகன் என்னை கவனிப்பதில்லை சொத்தை பிரித்துக்கொடு என்று துன்புறுத்துகிறான். எனக்கு சாப்பாடு போடுவதில்லை என்று தன் மகன் மீது வைத்த குற்றச்சாட்டுகள் தான் ஏராளம். இது நடைமுறையில் நாமே நிறைய இடங்களில் நிச்சயம் பார்த்து இருப்போம்.

மகனை பெத்து வளர்த்தி, படிக்கவைத்து, வேலை வாங்கிக்கொடுத்து, திருமணமும் செய்து வைக்கும் வரை அவனுக்கு பார்த்து பார்த்து செய்கின்றனர் பெற்றோர் ஆனால் இன்று வேலை நிமிர்த்தமாக வெளியூரில் வேலை செய்யும் பலர் தனது பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லை எனில் விடுமுறை வாங்கி வந்து கவனிக்கும் நிறைய பேரை பார்த்து இருக்கிறேன். ஆனால் சிலர் தனது சுயநலத்திற்காகவும், சந்தோசத்திற்காக தனது பெற்றோரை கவனிக்காமல் பக்கத்து ஊரிலேயே இருந்தாலம் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் அப்படியே விட்டு விடும் சிலர் இருக்கின்றனர். இவர்களுக்கு மேல் பெத்த தகப்பனையும், தாயையும் தன்னிடம் பணம் இருக்கிறது ஆனால் உங்களை பார்க்க நேரமில்லை என்று முதியோர் இல்த்திற்கு அனுப்பும் சில கயவர்களும் இருக்கிறார்கள் இவ்வாறு அனுப்பும் சிலரை என்னைக் கேட்டால் வளைகுடா நாடுகளில் நடப்பது போல் கொடூர தண்டணை அளிக்கலாம் என்று தான் கூறுவேன்.

இன்று பெற்றோரை தெய்வமாக பார்க்கும் மகன்களையும் பார்த்திருக்கிறேன், வெளியூருக்கு வேலையில் இருந்தால் தினமும் இரவு பெற்றோருக்கு போன் செய்து நலம் விசாரிக்கும் எத்தனையோ இளைஞர்கள் உள்ளனர். இப்படி இருப்பவர்கள் தான் அதிகம். ஆனால் பெற்றோரை காப்பகத்துக்கும், வீட்டுக்கு அருகிலேயே தனி குடிசை ஒன்று போட்டு அவர்களை தனியாக சமையல் செய்யச் சொல்வது அவர்களுக்கு எந்த உதவியும் செய்யமால் இருப்பது இது போன்று இருப்பவர்கள் குறைவுதான் அந்தக்குறைவு தான் மனவழியை அதிகப்படுத்துகிறது. இப்படி குடிசையில் உன் பெற்றோர் வசிக்கிறார்களே ஏன் சரியாக பார்ப்பதில்லை என்றால் எங்க அம்மாவுக்கும், எங்க அப்பாவுக்கும சரியான வாய் தேவையில்லாமல் பேசி வீட்டில் பிரச்சனையை கிளப்பிகின்றார்கள் என்றான் ஒருவன் அட சண்டாள நீ குழந்தைகயாக இருக்கும் போது என்ன வெல்லாம் பேசி இருப்பாய் அப்போது அவர்கள் உன்னை ஒதுக்கினார்களா பெரியன் ஆனவுடன் உனக்காக எத்தனை பிரச்சனைகளை அவர்கள் சமாளித்து இருப்பார்கள் அப்போது நீ பேசாததையா அவர்கள் பேசிவிட்டார்கள். இதை எல்லாம் யாரும் யோசிப்பதில்லை நாளை நமக்கும் இது தான் என்று.

தனது மகன் மகள் யாரும் இல்லாமல் உழைத்து ஓய்ந்து போன போது பெரியோர்கள் செல்லும் இடம் காப்பகமாக இருக்கலாம். ஆனால் மகன் உயர் நிறுவனத்தில் வேலை கை நிறைய சம்பளம் என வசதி வாய்ப்புகளோடு இருந்து விட்டு தன் தாய் தகப்பனை வேலைக்கு அனுப்புவது என இருப்பார்கள் கேட்டால் நான் சொன்ன எங்க கேக்கு இந்த கிழம் என்று கூறுவார்கள். நல்ல நிலையில் இருக்கும் மகன் குறைந்த பட்சம் மாதம் 1000 ரூபாய் கொடுத்தால் அந்தப் பெற்றோரின் சந்தோசம் சொல்லிமாளாது.

ஒவ்வொருவரும் இன்று எப்படி தன் தாய் தந்தையை நடத்துகிறார்களோ நாளை அவர்களது குழந்தையும் அவர்களை அப்படித்தான் நடத்தும் இது மனதில் இருந்தால் பெற்றோரை நன்றாக வைத்துக்கொள்வர். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தான் நம் குழந்தைகளும் நம்மை வழிநடத்துவார்கள் இது எல்லோருக்கும் நினைவில் இருக்கவேண்டும்...

Thursday, August 5, 2010

திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியமா?


திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை ஆண் பெண் இருவருக்கும் அவசியமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் என்றே கூறுவேன். திருமணத்திற்கு முன் இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலம் என்ன நோய் இருக்கிறது என்பதை முன் கூட்டியே அறியலாம்.

இன்று நிறைய ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்று அறியாமல் திருமணத் செய்வதன் மூலம் திருமணத்திற்கு பின் அவர்களுக்கு இருக்கும் நோய் அறிகுறி தெரியவந்தால் இருவருக்குமே அந்த வாழ்க்கை நிலையும் இல்லை, நிம்மதியும் இல்லை. இருவர் குடும்பதிற்கும் ஊர் உலகத்தில் அவப்பெயர்தான். திருமணம் நிச்சயம் ஆவதற்கு முன் ஆணும் பெண்ணும் தங்கள் கருத்துக்களை பரிமாறுவதற்கு இன்று நம் வீட்டில் அனுமதிக்கின்றனர் அது போல் ஆண், பெண் ஜாதகத்துடன் பரிசோதனை சான்றிதழையும் இணைக்கலாம் என்பது என் கருத்து. இது நடக்கக் கூடிய காரியமா என்றால் நிச்சயம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் ஆனால் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பட்டால் தான் புரியும். எப்போதும் நாம் ஒரு வேதனையையோ, சந்தோசத்தையோ அனுபவிக்கும் போது தான் அதன் வலி தெரியும். அதுபோல் வேதனையையும், வலியையும் நான் அனுபவித்ததால் தான் என் வேதனையையும் வலியையும் உங்களுடன் பகிர்கிறேன். இதை பதிவாக்கும் போது பலர் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் இதை படித்த ஒருவர் ஆண் அல்லது பெண் வீட்டில் இரத்தப்பரிசோதனை சான்றிதழ் கேட்டாலே என் பதிவால் பயன் தான் என்று நினைத்து எழுதுகிறேன்.

சமீபத்தில் என் நண்பன் எனக்க போன் செய்தான் எனக்கும் அவனுக்கும் 12 வருட நட்பு படிக்கும் போது நட்பு ஏதாவது நிகழ்ச்சி எனில் அவன் வீட்டுக்குச் செல்வேன். அவனுக்கு அம்மா இல்லை சித்தி தான். நாங்கள் எப்போது வீட்டுக்கு சென்றாலும் எங்களையும் மகன் போல் தான் பாப்பங்க அவங்க சித்தி அவன் சொல்வான் எங்க அம்மா இருந்தாக் கூட என்னை இப்படி பார்த்து இருப்பாங்களா என்பது சந்தேகம் அப்படி பார்க்கின்றார்கள். சித்தியின் மகள் நாங்கள் அவன் வீட்டிற்கு செல்லும் போது 2ம் வகுப்பு படித்தார்கள் என்று நினைக்கிறேன் அவன் அப்பா கூலி வேலைதான்.

நண்பன் என்னை அழைத்து சொன்ன விசயம் தங்கைக்கு 20 வயதில் திருமணம் முடித்தோம் மூன்று மாதம் தான் குடும்பம் நடத்தினாள் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக எங்க கூட தான் இருக்கிறோள். அவளுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன் இந்நிலையில் அவள் முதல் கணவர் கடந்த மாதம் இறந்துவிட்டார். அவர் இறந்தது எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயினால் என்று சொல்றாங்க தங்கை அவன் கூட வாழ்ந்ததால் தங்கைக்கு பரிசோதனை செய்யலாமா? திருமண ஏற்பாடு நடக்கிறது என்ன செய்யலாம் என்று கேட்டான் நான் நிச்சயம் இரத்தப்பரிசோதனை எதற்கும் செய்து கொள்ளலாம் என்றேன். எங்கள் ஊரில் பரிசோதனை செய்தால் ஊர் எல்லாம் தெரிந்து விடும் எனக் கூற நான் இங்கே வந்து விடு என்றேன். இங்கு பரிசோதனை செய்தோம் ஒரு பத்து வருடத்திற்கு அப்புறம் அன்றுதான் தங்கையைப் பார்த்தேன். பரிசோதனை முடித்து விட்டு 3 மணிக்கு சென்று பரிசோதனை விவரத்தைப் பார்த்தால் பாசிட்டிவ் என்று இருந்தது என் கையால் வாங்கி அதைப்பார்த்த உடன் என்ன செய்வது என்று தெரியாமல் என் கண் கலங்கியது.

நண்பனை மட்டும் அழைத்து விவரத்தை சொல்லி விட்டு தங்கையிடம் இன்னும் 2 நாள் ஆகுமாம் மும்பை அனுப்பி அதன் பின் சொல்கிறார்கள் என்று சொல்லி அனுப்பினேன் என்ன செய்வது இன்று வரை சொல்லவில்லை. புதிதாக பார்த்த மாப்பிள்ளையிடம் தங்கை உங்களை பிடிக்கவில்லை என்று கூறி அவரை வேறு இடம் பார்க்க சொல்லிவிட்டதாக சொன்னான்.

வாழ்க்கையில் மறக்கக முடியாத தருணம் அது எத்தனையோ நல்லது கெட்டது செய்திருந்தாலும் அந்த பரிசோதனை விபரத்தை என் கையில் வாங்கி கண்ணீர் விட்டதை எப்படி மறப்பது தூக்கமில்லாமல் தவிக்கிறேன் அவர்களுக்கு எப்படி உதவி செய்வது. மருந்து மாத்திரை எங்கு வாங்குவது என்று ஒவ்வொன்றாக விசாரித்துக்கொண்டு இருக்கிறேன். 22 வயதுப் பெண் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என் நண்பன் தங்கை என்பதால் மனது அடித்துக்கொள்கிறது. இத்தனை நாள் எத்தனையோ முகம் தெரியாதவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் இப்போது தான் வலியை உணர்கிறேன். நமக்கு பக்கத்தில் நடக்கும் போது தான் உரைக்கிறது. இது போல் விபரம் தெரியாமல் இன்று நம் ஊரில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் மனவலி மனவேதனை நினைத்தாலே கண்ணீர் தான்.

இனி வரும் காலங்களில் திருமணத்தின் போது பரிசோதனை சான்றிதழ் வேண்டும் என அனைவரும் கேட்க வேண்டும். நாம் கேட்கவில்லை என்றாலும் அரசாங்கம் கேட்கும் படியான சட்டம் இயற்றலாம். திருமண பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. திருமணம் பதியும் போது இருவரது உடல் பரிசோதனை சான்றிதழ் நிச்சயம் வேண்டும் என்று அரசு சட்டமியற்றினால் பல அப்பாவிகள் இந்நோயில் இருந்து தப்புவதற்கு வாய்ப்பு உண்டு...

Tuesday, August 3, 2010

தாய்ப்பாசம்


இன்று கணவன் மனைவி ஏற்படும் பிரச்சனைகளால் நிறைய பிரிவுகள் ஏற்படுகின்றன தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கும் செய்திகளில் இதுவும் ஒன்று. விவாகரத்து கேட்டு கியூவில் நிற்பவர்கள் ஏராளம் இதற்கு நிறைய காரணங்கள் உண்டு அதில் ஓர் முக்கியமான காரணம் தாய்ப்பாசம்...

மனைவிகள் சொல்லும் அதிக புகார் அம்மா பேச்சை கேட்கிறார். அம்மா பேச்சை கேட்டு என்னைத் திட்டுகிறார் இதனால் தனிக்குடித்தனம் போகலாம் என்றால் அம்மாவை விட்டு வர மறுக்கிறார் இது தான் அதிக குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இன்றும் கூட்டுக்குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. கூட்டுக்குடும்பத்திற்கு முக்கிய காரணமே தாய்ப்பாசம்தான்.

இன்று மனைவி நாளை அம்மா நாளை மறுநாள் மாமியார் இதுதான் இன்றைய நிகழ்வு. நிறைய மனைவிகள் யோசிப்தில்லை நாளை நாமும் மாமியார் ஆகப்போகிறோம் அப்போது நம் மகனை நம்மிடம் இருந்து பிரித்தால் இதை யோசித்தால் போதும் இப்பிரச்சனைக்கு எளிய தீர்வு உண்டு.

ஒரு பெண் திருமணம் ஆகி கணவனிடம் வருகிறாள் அவள் கருவுற்றதற்கு முன் கணவன் மேல் இருக்கும் அன்பு கருவுற்றதற்கு அப்புறம் குறையத்துவங்குகிறது. தனக்கு குழந்தை பிறந்த பின் அத்தாய் தன் மகனை தன் கண்ணுக்குள் வைத்து காக்கிறாள் கூடவே தனது அனைத்து அன்பையும் குழந்தையின் மீது காட்டுகிறாள். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் வைத்து அவனுக்கு என்ன வேண்டும் என்ன எதிர்பார்க்கிறான் என அவனை பார்த்து பார்த்து வளர்க்கிறாள். மகனின் முதல் ரசிகையே தாய். மகனுக்கு முதலில் தெரிவது தாய் தான் பின்பு தான் மற்றவர்கள். மகன் குப்புற விழுந்து, தவழ்ந்து, எழுந்து நின்று மேதுவாக விழுந்து விழுந்து நடந்து ஒவ்வொன்றையும் முதலில் ரசிப்பவள் தாய் மட்டுமே..

குழந்தைப்பருவத்திலேயே அம்மா மீது அதிக அன்பு கொள்கிறான். தன்னிடம் யார் விளையாடினாலும் அவன் அம்மாவைப் பார்த்த உடன் சிரிக்கும் சிரிப்பு இப்படியே எனக்கு உசிரு போய்விட வேண்டும் என்று தான் தாய் கூறுவாள். மகனுக்கு விபரத் தெரியும் போது தான் தன் அம்மா அப்பாவின் மனைவி என்று அவனுக்கு தெரியவருகிறது. மகனுக்கும் தாய்க்கும் உள்ள பாசத்திற்கு ஈடு இணை இல்லை. மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது பெண் மகனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தாய்க்கு நிச்சயம் பிடித்திருக்க வேண்டும் என்பது மகனின் விருப்பமாக இருக்கும். திருமணம் முடிந்து வரும் மருமகள் தன் மகன் மீது பொழியும் அன்பை தாய் ஏற்றால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சியே... தாய்ப்பாசத்திற்கு இவ்வுலகில் ஈடு இணை எதுவும் இல்லை..

Monday, August 2, 2010

வலைப்பதிவில் எனக்கும் 200 நண்பர்கள்

நான் வலைப்பதிவுலகத்திற்கு வந்தது பல திரைவிமர்சனத்தை கணிணியில் படித்த போது தான் எனக்கு வலைப்பதிவு ஒன்று இருக்கிறது இதில் நிறைய பேர் எழுதுகிறார்கள் என அறிந்து கொண்டேன் நான் பத்திரிக்கைத் துறையில் 5 வருடம் வேலை செய்துள்ளேன் நிறைய கட்டுரைகள் எழுதி எங்கள் துணை ஆசிரியர்களிடம் கொடுத்துள்ளேன் யாரும் என்னை ஊக்கப்படுத்தவில்லை விமர்ச்சனமும் செய்யவில்லை நல்லாத்தான் இருக்கு என்று சொல்வார்கள்.

நாமும் இனி எழுதுவோம் நாம் சொந்தமாக கணினி வாங்கியதும் எழுத தொடங்குவோம் என முடிவு செய்து அதற்கு முன் வலைப்பதிவை தொடங்குமுன் என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது எனக்கு பெண் குழந்தை பிறந்தால் என் பெயரையும் என் மனைவி பெயரையும் சேர்த்து சங்கவி என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன் அப்பெயரையே என வலைப்பதிவிற்கும் சூட்டினேன்...

முதலில் 29.10.2009 அன்று படித்ததில் பிடித்தது என்று எனக்குப்பிடித்த கவிதையை காப்பி செய்து போட்டேன் தொடர்ந்து 7 பதிவுகள் மற்றவர்கள் எழுதியதை எனக்கு பிடித்தது என்ற பெயரில் காப்பியடித்து பதிவாக்கினேன்.. வலைப்பூவைப்பற்றி அறிந்ததும் முதன் முதலாக பால்ய காலம்- 6 முதல் 10 வயது வரை என்று என் சொந்த அனுபவங்களை பதிவேற்றினேன். எனக்கு முதல் பின்னூட்டமிட்டவர் தேவன்மையம் சார் தான் எனது வலைப்பதிவின் முதல் நண்பர் என்பதில் மிக்க மகிழ்ச்சி அதே பதிவில் பின்னூட்டமிட்டவர்கள் பிரசன்னா, தியாவின் பேனா, விக்னேஸ்வரி, தமிழரசி இவர்கள் அனைவரும் என் வலைக்கு முதலில் வந்தவர்கள் அவர்களுக்கு என் நன்றி...

எத்தனை நாளைக்குத்தான் நம் அனுபவத்தைப்பற்றி எழுதுவது நமக்கு என ஓர் தனித்துவம் வேண்டும் என்று எதைப்பற்றி எழுதலாம் என்று யோசிக்கும் போது உணவுகளைப் பற்றி எழுதலாம் என முடிவு செய்து ஒவ்வொரு உணவைப்பற்றியும் எழுத ஆரம்பித்தேன். உணவைப்பற்றி எழுதிம் போது தான் நெட்டில் தமிழ்மனம், தமிழிஸ் எல்லாம் இருப்பதை படித்து அறிந்து அதில் பதிவாக்கினேன் இதைப் படித்தவுடன் நண்பர் மணிஜீ என்னை அவரது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினார் இதன் பின் எனக்கும் நண்பர்கள் எண்ணிக்கையும் என் வலைப்பக்கத்தை படிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகியது.. என்னை முதலில் அனைவருக்கும் அறிமுகப்படுத்திய நண்பர் மணிஜீக்கு என் நன்றி... ஆனந்தவிகடன் வரவேற்பரையில் எனது வலைப்பதிவு வந்திருந்து மேலும் எனக்கு நண்பர்களை அதிகமாக்கியது.

அதன் பின் ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்திற்கு சென்று இருந்தேன் அங்கு செல்வதற்கு முன் பாலாசி, கதிர், அருண் இவர்களின் தொலைபேசியில் அழைத்து நானும் கலந்து கொள்வதாக கூறி அங்கு சென்ற போது தான் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் அதன் பின் எனது வலைப்பூவிற்கு வரும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகியது.

நண்பனாகவும் பின் என் பங்காளியாகவும் ஆன பிரபாகர் என்னால் மறக்க முடியாதவர் அவரின் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தினார் அவர் மூலம் எனக்கு சேட்டைக்காரன், சத்திரியன் கண்ணன், கருணாகரசு போன்ற நண்பர்கள் நண்பர்களாகி  பின்தொடர்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி...

நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி நான் எழுதும் பதிவுகளில் மொக்கை ஆனாலும் பயன் உள்ளது என்றாலும் அதை பின்னூட்டத்தில் கருத்து வேறுபாடு இன்றி தங்களது கருத்தை சொல்லும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த 
நன்றி.. நன்றி... நன்றி....