Wednesday, November 28, 2012

அஞ்சறைப்பெட்டி 28/11/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
காவிரியில் நீர் வேண்டி இன்று பேச்சு வார்த்தைக்கு செல்கிறார் முதல்வர் நிச்சயம் இந்த பேச்சு வார்த்தையில் அனைவரின் எதிர்பார்ப்பும் தண்ணீர் வேண்டும் என்பது தான். கர்நாடகம் நமக்கு நதிநீர் ஆணையப் பங்கீட்டின் படி கொடுக்க வேண்டிய நீரை கொடுத்தால் போதுமானது. மேட்டூர் அணையில் 50 கன அடி தண்ணீரை வைத்துக்கொண்டு பல இலட்சம் ஏக்கர் பயிர்கள் கருகி வாடும் நிலையில் நமக்கு தண்ணீர் கொடுத்தால் தான் நமது விவசாயிகளின் வாழ்வாதரார் பிரச்சனையின்றி முடியும்...

தண்ணீர் இல்லை எனில் அந்த பயிர்களும் கருகி அதை நம்பி விவசயாயம் செய்த விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் முதல் விளைச்சலைப்பயன் படுத்தும் நாம் வரை அனைவரும் மிக பாதிக்கப்படுவாம் என்பது தான் நிதர்சனம்...

தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நானும்....

  ................................................................


மணல் பிரச்சனை வெகுமாக இன்றைய நடுத்தரமக்களை மிகவும் பாதித்துள்ளது ஒரு லோடு மணல் 20 ஆயிரம் என்றால் எப்படி வீடு கட்டுபவர்களும், கட்டுமானப்பணி மேற்கொண்டவர்களும் கட்டிடங்களை கட்டுவது. 3 ஆயிரம் இருந்த மணல் 6 ஆயிரம் ஆகி இன்று 20 ஆயிரத்தில் வந்து நிற்கின்றது.
அரசு தைரியான பல நடவடிக்கைகள் எடுத்து இந்த மணல் பிரச்சனையை விரைவில் தீர்க்கும் என்று எதிர்பார்ப்போம்...
 
..........................................................................................

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு இதற்கு கார்ப்பேரேட் நிறுவனத்தில் பணி புரிபவர்களும் அப்பர் மிடில் கிளாஸ்க்களும் நிச்சயம் ஆதரவு தெரிவிப்பார்கள். இதனால் பாதிப்படைவது நிச்சயம் சில்லரை வணிகர்கள் தான். சில்லரை வணிபத்தை பற்றி விரிவான கட்டுரையை விரைவில் எனது கருத்துக்களை பதிகிறேன்...
................................................................................................

சமீபத்தில் கேரளாவிற்கு சென்று இருந்தோன் அதிக நேரம் ரயில் பயணங்கள் தான் மேற்கொள்ள வேண்டி இருந்தது. தென் இந்தியாவில் அதிகமாக ரயில் வண்டியை உபயோகிப்பவர்கள் கேரள மக்களாகத்தான் இருப்பர். சூப்பர் பாஸ்ட் முதல் அனைத்து ரயில்களும் நிறைய இடங்களில் நின்று செல்கின்றன. அதோ போல் முக்கிய தளங்களுக்கு எல்லாம் ரயில் போக்குவரத்து உள்ளது. கொச்சியில் இருந்து தினமும் திருவனந்தபுரம் வரை வேலைக்கு சென்று திரும்புபவர்கள் நிறைய பேர் உள்ளனர் அவர்களிடம் பேசியதில் அவர்கள் பேருந்தை விட அதிகம் ரயிலைத்தான் பயன்படுத்துகிறோம் என்றனர்.

...............................................................................................

கேரளத்தில் ஒருவரிடம் வழிகேட்டால் சரியாக சொல்ல மாட்டார்கள் மலையாளத்தில் கேட்டால் தான் சொல்வார்கள் என்று நிறையபேர் சொல்லக்கேட்டதுண்டு ஆனால் கொச்சி, கோட்டயம், திருவனந்தபுரம் என அனைத்து இடங்களிலும் தமிழில் தான் வழிகேட்டேன் தவாறகவோ, சொல்ல மறுத்தவர்களோ என யாரும் இல்லை கேட்டதற்கு சரியான விளக்கங்களை சொன்னார்கள்..
கேரளாவில் அரசு அனுபமயுடன் கள் கிடைக்கிறது. சரக்கு கடையில் விசாரித்த போது நம்ம ஊரை விட அங்கு சரக்கு விலை குறைவுதான். எல்லா சரக்குகளும் தாராளமாக கிடைக்கிறது. என் நண்பர் இராணுவத்தில் வேலை செய்ததால் எனக்கு மிலிட்ரி சரக்கு ஏகபோகமாக கிடைத்தது..
...............................................................................................

சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் செவ்வாய் 4-வது கிரகமாக உள்ளது. இது சூரியனில் இருந்து 22.79 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முறை சூரியனை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பூமியில் இருந்து 5 கோடியே 46 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
இதன் மேற்பரப்பில் காணப்படும் கருப்பு ஆக்சைடு இக்கோளை சுற்றி சிவப்பாக காணப்படுவதால் இது 'செவ்வாய்' என அழைக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளது போன்று கிண்ணக் குழிகளையும், பூமியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனி மூடிய துருவ பகுதிகளையும் கொண்டது.
செவ்வாய் கிரகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டன. பின்னர் 1965-ம் ஆண்டில் அங்கு தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்தனர். இதை தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வாழ கூடிய சாத்தியம் உள்ளனவா? என்பதை கண்டறிய அமெரிக்க நாசா விண்வெளி மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
அதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோவர் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. அது இந்த ஆண்டு ஆகஸ்டில் செவ்வாயில் தரை இறங்கியது. ரோவருடன் கியூரியா சிட்டி என்ற ரோபோ ஆய்வு கூடமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. அது அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளை உள்ளடக்கியது.
அவை செவ்வாய் கிரகத்தின் சுற்று சூழல், மண், மலை காற்று, தட்ப வெப்ப நிலை போன்றவற்றை ஆராய்ந்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பும் திறன் வாய்ந்தவை. தற்போது அவை செவ்வாய் கிரகத்தில் உள்ள மண், பாறை போன்றவற்றை போட்டோ எடுத்து அனுப்பியது.
சமீபத்தில் அங்கு வீசிய புழுதி புயலையும் படம் பிடித்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்த நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழ தகுதி வாய்ந்த கிரகம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். எனவே செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைத்து வருகின்றனர். அதற்கு தேவையான பொருட்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று இந்த நிறுவனம் சாதனை படைத்தது.
...............................................................................................

பரபரப்பான சாலைகளின் ஒரம் உள்ள வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு மனஇறுக்க நோயால் பாதிக்கப்படும் அபாயம் இரண்டு மடங்காக உள்ளது என சமீபத்திய ஆய்வு முடிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குழந்தையின் கருப்பருவத்தில் இருந்து, ஒரு வயது வரையிலான காலகட்டத்தில், வாகன போக்குவரத்து மிகுந்த பரபரப்பான சாலையோரங்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு, வாகனங்கள் வெளியிடும் புகை மாசுக்களால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

இதனால், குழந்தைகளின் நோய் தாக்குதல் அபாயம் இரட்டிப்பு ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வாகன போக்குவரத்து மாசுக்கள் மிக அதிகமாக உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு 3 மடங்காகவும் இந்த ஆபத்து உயரக்கூடும் எனவும் கலிபோர்னியா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


தகவல்


2013 இல் உங்கள் குழந்தை சுவிற்சர்லாந்தில் பிறக்கட்டும்!

2013 இல் ஒரு குழந்தை பிறக்க வேண்டுமாயின் சுவிற்சர்லாந்தில் பிறக்க வேண்டும் என்கிறார்கள் 'The Economist' ஆய்வாளர்கள்.
அதாவது  ஒரு நாட்டின் சுகாதாரத்தன்மை, வன்முறையற்ற சூழல்,  அரசியல் நிலைமை, பூகோள அமைப்பு என்பவற்றின் அடிப்படையில் இனி வருங்கால சந்ததியினருக்கு உலகின் எந்த நாடு மிகச்சிறந்த வளமான வாழ்க்கையை கொடுக்க கூடியது என The Economist இன் Econimist Intelligence Unit ஒரு ஆய்வு நடத்தியது. 2030 களில் அந்நாடுகளின் பொருளாதார, சமூக நிலைமைகள் எப்படி இருக்கலாம் எனவும் இதன் போது ஆராயப்பட்டது.

இறுதியில் வெளியான முடிவுகளின் படி இப்பட்டியலில் சுவிற்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா - நோர்வே ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. முதல் பத்துக்குள் ஹாங்காங் - சிங்கப்பூர் போன்ற நாடுகளும் இடம்பிடித்துள்ளன.

முதல் 10 நாடுகளுக்குள் 50% வீதமானவை ஐரோப்பிய நாடுகளே.  ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார வளம் கொண்ட ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் பட்டியலில் பின் தள்ளியே நிற்கின்றன. வாக்கெடுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் 71 நாடுகளில் இந்தியாவுக்கு 66 வது இடம் கிடைத்துள்ளது.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக திருபவனம் வலைத்தளம் என்ற பெயரில் எழுதி வருகிறார். இவருடைய மருத்துவக்குறிப்புகள் மற்றும் நிறைய அறியாத்தகவல்களை இவர் பதிவில் காணலாம்...

http://newstbm.blogspot.in/


தத்துவம்
நாம் செய்யும் தவறுகளுக்கு அனுபவம் என்னும் பெயர் சூட்டுகிறோம்.

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வது தான் வளர்ச்சியின் அடையாளம்...

ஆயிரம் வீண் வார்த்தைகளைவிட இதமான ஒரு வார்த்தை சிறந்தது. - புத்தர்

Sunday, November 25, 2012

ஆண்களின் உடல்அமைப்பு ( சாமுத்ரீகா லட்சணம்)



ஆண்களின் உடல் அமைப்பு எப்படி அமைந்திருக்கவேண்டும் என சமீபத்தில் படித்த புத்தகத்தில் அழகாக குறிப்புட்ப்பட்டு இருந்தது இப்படித்தான் இருக்க வேண்டுமாம்...

1. தலை - ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.

2. நெற்றி - அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. மிகச் சிறுத்திருப்பின் மூடனாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.

3. கண் - ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.

4. மூக்கு - உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

5. வாய் - அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்.

6. உதடு - உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.

7. கழுத்து - ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடமாம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமையாம்.

8. தோள் - தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

9. நாக்கு - நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.

10. பல் - மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்.

11. காது - காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.

12. கைகள் - நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.

13.மணிக்கட்டு - மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.

14. விரல்கள் - கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.

15. மார்பு - ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் முலைக்காம்புகள் எடுப்பாகவும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் காம இச்சை அதிகம் இருக்கும்.

16. வயிறு - பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.

17.முதுகு - சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரமாகும்.

18. கால்கள் - கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

19. கால்பாதம் - கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.

Wednesday, November 7, 2012

அஞ்சறைப்பெட்டி 8/11/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........


ஒரு ஆண்டுக்கு 6 சிலிண்டர் தான் கொடுப்பார்களாம் அப்ப இரண்டு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் என்ற கணகில் தருகின்றனர். இதனால் இலபாம் அடைவது நிச்சயம் அரசாங்கம் அல்ல. கேஸ் விற்பனையாளர்கள் தான் ஏற்கனவே நஷ்டம் நஷ்டம் என்று பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துகின்றனர். ஆனால் ஆண்டு இறுதியில் அந்த நிறுவனங்கள் எல்லாம் எப்படித்தான் பலகோடி இலாபங்கள் பெறுகின்றன என்பது அனைவருக்கும் புரிந்த புதிராக உள்ளது. 
உப்பைத்திண்ற நாம் தண்ணியை குடித்து தானே ஆகவேண்டும்...
  ................................................................
 தீபாவளி விற்பனை ஊரெங்கும் பின்னி எடுக்கிறது கோவையில் மாலை வேலைகளில் முக்கிய வீதிகளில் நடந்து செல்வதே பெரும் பாடாக உள்ளது அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நண்பர் ஒருவர் 1 வாங்கினால் 1 இலவசம் என்று துண்டுகளை விற்று கொண்டு இருந்துள்ளனர் நம்மால் இலவசம் என்றதும் கூட்டத்தில் புகுந்து 10 துண்டுகள் வாங்கிவிட்டு பாக்கெட்டில் கைவிடும் போது தான் தெரிந்துள்ளது பர்ஸ் பனால் என்று ... கூட்டத்தில் பார்த்து செல்லுங்க மக்களே கொஞ்சம் ஏமாந்தீர்கள் என்றால் அப்புறம் அம்போ தான்...
..........................................................................................

மீண்டும் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகி உள்ளார் அவருக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு இருக்கும் எதோ நம்மால் முடிந்தது இந்த இணையம் மூலம் வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வோம்...
................................................................................................


மதிமுகவில் எஞ்சி இருந்த ஒரே பேச்சாளர் மற்றும் தமிழகம் முழுவதும் அறிந்த சிறந்த மேடைப்பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தும் வெளியேருகிறார் என்பது வைகோவிற்கு மிக வருத்தமான செய்திதான். தன்னோடு வந்தவர்களில் இன்று ஒரு சிலர்தான் உள்ளனர் அவர்களையே தக்க வைக்காத இவர் எப்படி கூட்டணி கட்சிகளை தக்க வைத்து ஆட்சியை பிடிக்க முடியும்.. வைகோ சிறந்த பேச்சாளர், நேர்மையாளர், போராட்ட குணம் உள்ளவர் தான் ஆனால் தமிழகத்தில் அரசியல் நடத்துவது அவருக்கும் வெகு தூரம் என்பது என் பார்வை...
...............................................................................................



இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆண்கள் ஆடை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அப்போது ஆண்கள் எந்த வயதில் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று கருத்து கேட்கப்பட்டது. அதில் ஆண்கள் 37 வயதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
ஏனெனில் அப்போதுதான் அன்பான மனைவியும், பெருமை படதக்க குழந்தைகளும் கிடைத்திருப்பர். மிக நெருங்கிய நண்பர்களும் கிடைப்பது இந்த வயதில்தான். எனவே, 37 வயதில்தான் ஆண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வுகள் அமையும்.
அதே வேளையில் வீடு, கார் போன்ற சொத்துகள் வாங்குவது, பட்டம், பதவியில் உயர்வு பெறுவது போன்றவையும் இந்த வயதில்தான் பெரும்பாலும் நிகழ்கிறது. எனவே, 37 வயதில்தான் ஆண்களுக்கு சந்தோஷமான தருணங்கள் அமைகின்றன என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
...............................................................................................

இந்த வருட தீபாவளியை அனைவரும் தொலைக்காட்சியின் முன் அமராமல் குடும்பத்தோடு காலையில் எண்ணெய் தேய்த்துக்குளித்து புத்தாடை அணிந்து இனிப்புகள் உண்டு பட்டாசு வெடித்தும் குடும்பத்தோடு அளவாடி கொண்டாடுங்கள் என என் குடும்பம் சார்பாக அணைவரையும் வாழ்த்துகிறேன்...

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்...




தீபாவளிக்கு பட்டாசுகளை பாதுகாப்பாக வைப்பது எப்படி ??

* ராக்கெட்டுகளை பாட்டிலில் வைத்து வெடிக்கக் கூடாது.

* குடிசைப் பகுதியில் ராக்கெட் வெடிக்கக் கூடாது.

* 5 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது.

* மத்தாப்புக்களை கொளுத்தும் போது கையுறை அணிய வேண்டும்.
கொளுத்தி முடிந்ததும் அவற்றை தண்ணீரில் நனைத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

* பாக்கெட்டுகளில் பட்டாசுகளை வைக்கக் கூடாது.

* எக்காரணம் கொண்டும் பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எரியக்கூடாது. அப்படிச் செய்வது கிரிமினல் குற்றமாகும்.

* அணுகுண்டு வெடிகள் வெடிக்கும் போது நீண்ட குச்சி உதவியுடன் வெடிக்க வேண்டும்.

* காற்றழுத்தம் அதிகமான நேரங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது.

* வீட்டுக்குள் பட்டாசை உலர வைக்கக்கூடாது.

* திறந்த வெளியில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்.

* தரமான பட்டாசுகளையே வாங்கி வெடிக்க வேண்டும்.

* இறுக்கமான மற்றும் கதராடை அணிந்து பட்டாசு வெடிக்கலாம்.

* பள்ளி மற்றும் ஆஸ்பத்திரி அருகில் பட்டாசு வெடிக்க கூடாது.

* ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் 101-க்கு உடனே தகவல்
தெரிவிக்க வேண்டும்.

சிறிய தீப்பொறிதான் விபத்துக்கு காரணம் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் உன்னிப்பாக செயல்பட வேண்டும்.

முடிந்த அளவிற்கு தீ விபத்துக்களை தவிர்ப்போம்... தவிர்ப்பது நம் கையில் தான் உள்ளது...
தகவல்


லண்டனைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான ஜேக் மன்றோ அனைத்து வகையான செங்கற்களையும் கொண்டு கட்டிடங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர். கட்டுமானத்தில் அடிக்கடி புதுமையை புகுத்தி வரும் இவர் தற்போது சர்ச்சைக்குரிய, அதே சமயத்தில் நினைத்தாலே அறுவறுக்கத்தக்க ஒரு செங்கல்லை தயாரித்துள்ளார்.

26 வயதான ஜேக் மன்றோ, விலங்குகளை வெட்டி இறைச்சி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் இருந்து ரத்தத்தை ஒட்டுமொத்தமாக வாங்கி அதனுடன் மணலை கலந்து செங்கல் போன்று தயாரித்து, அவற்றை மின்அடுப்பில் 70 டிகிரி வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் வேக வைத்து பதப்படுத்துகிறார். ஒவ்வொரு ரத்த செங்கல் தயாரிப்பதற்கும் அவர் 35 லிட்டர் ரத்தத்தை பயன்படுத்துகிறார்.

இதுபற்றி ஜேக் கூறுகையில், ‘இந்த செங்கல் தண்ணீர் புக முடியாத அளவுக்கு மிகவும் கெட்டியாக உள்ளது. இரும்பு கம்பிக்குப் பதில் இதனை பயன்படுத்த முடியும். மேலும் இந்த செங்கற்களைக் கொண்டு எகிப்தில் முன்மாதிரியான ஒரு கட்டுமானத்தை நிர்மாணிக்க திட்டமிட்டிருக்கிறேன். இருப்பினும் இந்த செங்கற்களைகொண்டு வீடு கட்டினால் அதில் மக்கள் வசிக்க விரும்புவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்றார்.

எனினும், வளர்ச்சியடையாத நாடுகளில் மண் கற்களுக்குப் பதில் ரத்த செற்கற்களை பயன்படுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுருக்கமாக சொல்லப்போனால், ரத்தத்தை சமைத்து உருவாக்கிய இந்த சிவப்பு செங்கற்கள் பற்றி நினைத்தாலே நிச்சயம் தலை சுற்றும்.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக கதம்ப மாலை என்ற பெயரில் சாய்ரோஸ் என்பவர் எழுதி வருகிறார் இவரின் ஒவ்வொரு கவிதைகளும் நிகழ்வுகளை அற்புதமாக எடுத்துக்காட்டுகின்றன.

http://jeevanathigal.blogspot.com/

 
தத்துவம்
 தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல;  தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.

வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான்.அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும்.

வெற்றியை சிந்தியுங்கள், வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள்,வெற்றியை உருவாக்குவதற்கு தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும்