Wednesday, September 21, 2011

அஞ்சறைப்பெட்டி 22.09.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

ராஜபக்சே இனி இலங்கை, இந்தியாவைத் தவிர வேறு எங்கும் சுதந்திரமாக நடமாட முடியாது போல...

அமெரிக்கா போய் ஊர் சுத்தலாம் என்று இருந்தவர் மனதில் மண்ணை அள்ளிப்போட்டது அமெரிக்கா...

என்றைக்கு இருந்தாலும் நீ ஒரு லட்சம் உயிருக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் ராசபக்சே...


...............................................................................................


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதியை ஏற்று கூடங்குளம் பகுதி மக்கள் கடந்த 11 நாட்களாக நடத்தி வந்த உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர். 127 பேர் தங்களை வருத்திக் கொண்டு நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்கிறது.

மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்... மக்களின் அமைதியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...

வட இந்திய மீடியாக்கள் எல்லாம் ஒரு பிரச்சனை என்றால் வரிந்து கட்டிக்கொண்டு அதையே முன்னிறுத்தி நேரடி ஒளிபரப்பு செய்து சப்ப மேட்டரைக்கூட பெரிதாக்குகின்றனர். கூடங்குளம் பிரச்சனைக்கு தமிழக மீடியாக்கள் வடஇந்திய மீடியாக்கள் போல நடந்திருந்தால் இன்னும் வரவேற்பை பெற்று இருக்கும்....


...............................................................................................


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.  இனி எல்லார்த்துக்கும் சந்தோசம் தான்...


................................................................................................


மாநகராட்சி, நகராட்சியை விட ஊராட்சி மன்ற தேர்தல் தான் களை கட்டும். இதுவரைக்கும் மாமன், மச்சான்களை பார்க்காதவர்கள் கூட வழிந்து வழிந்து பேசுவார்கள்.

ஊராட்சி தலைவர் தேர்தலில் நிற்பவர்கள் வீட்டில் தினமும் கிடாக்கறியும், சரக்கும் நிச்சயம் உண்டு.

கிராமப்புறங்களில் வெட்டியாக பொழுதை கழிப்பவர்களுக்கு எல்லாம் தேர்தல் முடியும் வரை கொண்டாட்டம் தான்.

................................................................................................

முதல்வர் கொடுத்த இலவசங்கள் எந்த பொருளுக்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ மாணவர்களுக்கு கொடுத்த லேப்டாப்பிற்கு பலத்த வரவேற்பு..


எனக்கு தெரிந்த மாணவன் 12ம் வகுப்பில் கணிணி பிரிவை எடுத்து படிக்கிறான். பள்ளியில் இருக்கும் பழைய கணிணியில் எதோ தட்டியவனுக்கு புது லேப்டாப்பை கையில் வாங்கும் போது அவனது முகத்தில் ஏற்பட்ட ஒரு மலர்ச்சி இருக்கே நிச்சயம் இதற்காகவே அம்மாவை பாராட்டி ஆகவேண்டும்...


..................................................................................................


சுவீடனில் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் பக்கவாதம் நோய் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தினமும் 2 “கப்” காபி குடிப்பவர்களுக்கு 14 சதவீதம் பக்கவாத நோய் பாதிப்பு குறைய வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் 3 முதல் 4 “கப்” காபி குடிப்பவர்களுக்கு 17 சதவீதம், 6 “கப்” காபி குடிப்பவர்களுக்கு 7 சதவீதமும் பக்கவாத நோய் பாதிப்பு குறையும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
காபி குடிப்பதால் மூளையில் ரத்த உறைவு குறைந்து பக்கவாத நோய் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்.


..................................................................................................

தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவமு மிகவும் வரவேற்கத்தக்கது..

இதில் அவர்கள் வாங்கும் ஓட்டுக்களைப்பார்த்த பின்னாவது பேசாமல் இருப்பார்களா என்று பார்ப்போம்..


தகவல்

சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நாடுகளாக முறையே அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை உள்ளது. 4வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் கடுமையான நிலநடுக்கம் ஆகியவற்றால் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இதனால் 2011ம் ஆண்டில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி விட்டு 3வது இடத்தை பிடிக்கும் என சர்வதேச நிதியம் தகவல் தெரிவிக்கிறது.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் க.நா. கல்யாணசுந்தரம். கவிதை வாசல் என்ற பெயரில் வலைப்பூ எழுதிவருகிறார்.. இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது.

http://kavithaivaasal.blogspot.com/

 
தத்துவம்



நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம், ஆக்கபூர்வமான சிந்தனை, கற்பனைக் கண்ணோட்டம், நம்பிக்கை.

எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவரம் வரை தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்! 

Tuesday, September 13, 2011

திருமண நாள்.....


திருமணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் சந்தோசங்களை அள்ளிக்கொடுக்கும் காலக்கட்டம். வாழ்வில் பல சந்தோசங்கள் இருந்தாலும் திருமண நாள் என்ற சந்தோசம் மிக இனிமையானது.

சிறுவயதில் இருந்து சொந்தபந்தங்கள், நண்பர்கள் திருமணத்திற்கு செல்லும் போது நம் திருமணம் எப்படி நடக்கும் என்று ஒரு எண்ண ஓட்டம் நிச்சயம் மனதில் இருக்கும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இரண்டு  வகை சொந்தத்தில் திருமணம் செய்வது, புது சொந்தத்தில் திருமணம் செய்வது என்று சொல்லலாம். சொந்தத்தில் திருமணம் செய்வது மிக அதிக சந்தோசம் என்னைப் பொறுத்தவரை...

எனக்கு சிறுவயதில் இருந்து மாமா வீட்டுக்கு சென்றால் அங்கு மாமா பெண்ணோடு விளையாடிக்கொள்டு இருப்பேன். அப்போது பார்ப்பவர்கள் என்ன மாமனோடு விளையாடுகிறாயா என்று கிண்டல் அடிப்பார்கள். எதாவது நிகழ்ச்சிகளுக்கு சென்றால் என்னடா எப்ப பார்த்தாலும் அத்தை பொண்ணோடு சுத்தற என்று சிறுவயதில் இருந்து மன ஓட்டத்தை அத்தை பெண் மேல் திரும்பிய காலகட்டம் கல்லூரி செல்லும் போது தான் என்றாலும் ஞாபகம் தெரிந்து முதல் என் முதல் பெண் தோழி அத்தை பெண் தான்.


அத்தை பெண்ணை என் முதல் தோழியை  திருமணம் செய்து கொள்ளலாம் என்று நான் சொல்வதற்கு முன் என் அக்காக்கள் எல்லாம் முடிவு செய்து பேசஆரம்பித்தார்கள். என் குடும்ப பெரியவர் என் பெரியப்பாவிடம் நானும் என் முடிவையும் சொன்னேன் என் அத்தை மகளை கூப்பிட்டு கேட்டார் எனக்கும் சம்மதம் என்றதும். ஒரு நல்ல நாள் பார்த்து பேசி முடிவானது என் திருமணம். திருமண 14.09.2008 அன்று அந்தியூரில் லட்சுமி திருமண மண்டபத்தில் முடிவாகி சரியாக மூன்று வருடங்களுக்கு முன் என் முதல் தோழியை, என் அத்தை மகளை பெற்றோர்கள், உற்றார்கள், உறவினர்கள் முன் மனைவியாய் ஏற்றேன்...



இன்றோடு மூன்றாண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டில் உங்கள் வாழ்த்துக்களோடு அடிஎடுத்து வைக்கிறேன்....

என்றும் அன்புடன்
சங்கமேஸ்வரன்
கவிதா
(சங்கவி)

Monday, September 12, 2011

தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...!


ருத்துவமும் விஞ்ஞானமும் வளர வளர... சுகாதாரம் தொடர்பான புதுப்புது அச்சுறுத்தல்கள் பற்றிய செய்திகளும் புறப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. லேட்டஸ்ட் வரவு ஈ-கோலை (E coli-Escherichia coli) ''உயிருக்கே உலை வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பரவிவரும் ஈ-கோலை. 

இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக்கான பாதையாக இந்தியாவின் சுகாதாரம் இருப்பதுதான் வேதனை!'' என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

ஈ-கோலை பாக்டீரியா பாதிப்பை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கைகள்.
இப்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக... ஈ-கோலை பாக்டீரியா பெண்களிடத்தில் பரவுவதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது. தாம்பத்யம் வாயிலாகப் பரவி, குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்கிற அளவுக்கு ஈ-கோலை மாறும் அபாயம் இருக்கிறது என்பதற்காகவே இந்த விழிப்பு உணர்வு கட்டுரை. 
 
உ.பி. மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியரும், சிறுநீரக சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஷஹஜாத் ஃபக்ருல் ஹக் இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே விளக்குகிறார்.

''மனித உடலிலேயே ஈ-கோலை பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவை, உணவு ஜீரணத்துக்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகின்றன. மலம் கழிக்கும்போது சரியாக சுத்தப்படுத்தாவிட்டால், மலத்தின் மூலம் வெளியேறும் இந்த பாக்டீரியாவே நமக்கு தீமை செய்யக்கூடியதாகவும் மாறிவிடும். இதைத் தவிர சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் வாயிலாகவும்... சுகாதாரமற்ற இடங்களில் மல, ஜலம் கழிக்கும்போது பிறப்புறுப்புகளில் தொற்றுவதன் வாயிலாகவும் உடலில் பரவ வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இத்தகைய தொற்று ஈ-கோலையை விரட்டியடிக்க நவீன மருந்து மாத்திரைகள் நிறைய வந்துவிட்டன. அதனால், அச்சம் கொள்ளவேண்டாம்!'' என நம்பிக்கையான வார்த்தைகளை சொன்ன டாக்டர் தொடர்ந்தார்.

''யூ.டி.ஐ. ((UTI-Urinary Tract Infection)யூ.டி.ஐ. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாங்கமுடியாத எரிச்சல், முதுகுவலி, குளிர் காய்ச்சல்... போன்ற தொல்லைகளால் அவதிப்படுவார்கள். இதற்குச் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காதபோது... நாளடைவில், சிறுநீரகத்தைப் பாதித்து உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உண்டு. இதில் இருந்து தப்பிக்க சாத்தியமான எளிய வழி இருக்கிறது. சுத்தமான தண்ணீரை அதிகம் குடித்தாலே... பாதிப்பை ஓரளவுக்குக் குறைத்துவிடலாம்!  

'யூ.டி.ஐ.’ என்பது தொற்று நோய் வகையைச் சேர்ந்தது என்பதால், பாதிக்கப்பட்ட நபர்கள் நோய் முற்றிலும் தீரும்வரை உடலுறவைத் தள்ளிப் போடுவது நல்லது. அல்லது ஆணுறையைப் பயன்படுத்தலாம். மனைவிக்கு யூ.டி.ஐ. பாதிப்பு அடிக்கடி இருந்தால், முதலில் கணவருக்குதான் விந்து பரிசோதனை செய்ய வேண்டும். பாதிப்பு இருக்கும்பட்சத்தில், உடலுறவின்போது குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே விந்து வெளியாகிவிடும். ஏனெனில், ஆண்களின் சிறுநீரகத்திலிருக்கும் 'புராஸ்டேட்’ எனும் சுரப்பி, சிலசமயம் வயதின் காரணமாக அளவில் பெருத்துவிடும். அப்போது புராஸ்டேட்டில் ஈ-கோலை தாக்குதலும் அதிகமாக இருக்கும். இதனால், விந்து முந்துதல், மலட்டுத் தன்மை, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் அணிவகுக்கும்.

ஈ-கோலை பாதித்த தன்மையைப் பொறுத்து ஆன்டிபயாட்டிக் ஊசி மற்றும் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் பாதிப்புகளைக் குறைக்கவும், அறவே அதன் பிடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும் ஒரே வழி'' என்றவர், ஈ-கோலை தொற்று நோயைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் சொல்ல ஆரம்பித்தார். 

''மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் அந்தப் பகுதியை சுத்தமாக கழுவி விடவேண்டும். ஆண், பெண் இருவரில் ஒருவர் மலம் கழித்துவிட்டு, தங்கள் உறுப்பை சுகாதாரமாக வைத்துக் கொள்ளாமலிருந்து, அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொண்டாலும்... இந்த ஈ-கோலை பரவக்கூடும். அதேபோல... உடலுறவுக்குப் பிறகு, பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். அசதியாலோ அக்கறையற்ற போக்காலோ பலரும் அப்படியே உறங்கிவிடுகிறார்கள். அது தவறு. தாம்பத்தியத்தில் தொற்றுக்கு வாய்ப்பு ஏற்படாதபடி இயற்கையாகவே சில ஏற்பாடுகள் இருந்தாலும், இத்தகைய பாக்டீரியா பாதிப்புகளில் இருந்து தப்பிக்க... உறவுக்குப் பின்னர் சுத்தம் அவசியமாகிறது. வாழ்கைத் துணை தவிர, மற்றவர்களுடன் உடலுறவு கொள்வதையும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மொத்தத்தில், நம் உடலைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் யூ.டி.ஐ. தொல்லை நம்மை நெருங்கவே நெருங்காது!'' என்றார் உறுதியுடன்.

எப்படி வருகிறது ஈ-கோலை?  

 உடலுக்கு கேடு விளைவிக்கும் ஈ-கோலை பாக்டீரியா எப்படி பரவுகிறது என மைக்ரோபயாலஜி நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம். ''ஈ-கோலை பாக்டீரியாக்களில் பல வகை இருக்கின்றன. ஒவ்வொரு பாக்டீரியாவும் ஒவ்வொரு விதத்தில் பரவும். மலத்தில் உள்ள ஈ-கோலைகளில் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை அதிகம். குறிப்பாக... ஆடு, மாடுகளின் சாணங்களிலும் இந்த ஈ-கோலை பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சாணத்தை சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாக நடக்கும். மிகச்சுத்தமாகக் கழுவிய பிறகே இதர வேலைகளில் ஈடுபட வேண்டும். இல்லையேல் அந்தத் தொற்று எளிதாக நடந்துவிடும்.

மேலை நாடுகளில் வேகவைக்காத காய்கறிகள், மாட்டுக்கறி மூலமாக ஈ-கோலை பாக்டீரியா பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. ஈ-கோலை பாதிப்பு ஏற்பட்ட உடன் எந்த அறிகுறியும் தெரியாது. 24 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்தில் அதன் பாதிப்புகள் தெரியத் தொடங்கும். திடீர் வயிற்றுப்போக்கு வந்தால்... உடனடியாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது!'' என்கிறார்கள் உஷார்படுத்தும் விதமாக.

நன்றி அவள் விகடன்

Friday, September 9, 2011

அஞ்சறைப்பெட்டி 09-09-2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........


மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு அதுவும் தலைநகரில் மிகவும் வருந்தத்தக்க செய்தி. மூன்றடுக்கு பாதுகாப்பு, நான்கு அடுக்கு பாதுகாப்பு என்று வாய் கிழிய சொல்கிறார்கள் ஆனால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை குண்டு வெடித்துக்கொண்டு தான் இருக்கிறது.

அரசியல்வாதிகள் ஆறுதல் சொல்லி புகைப்படம் எடுத்து பத்திரிக்கையில் கொடுப்பதை குறைத்துக்கொண்டு அடுத்த முறை எங்கும் குண்டு வெடிக்காததது போல் நடவடிக்கை எடுங்கப்பா...

...............................................................................................

அடுத்து வருகிறது உள்ளாட்சித் தேர்தல். உள்ளாட்சித் தேர்தலில் எப்பவும் பணம் விளையாடும் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே விளையாடும் என எதிர்பார்க்கலாம். தேர்தல் கமிஷன் சட்டசபை தேர்தலில் பணத்தை தடுக்கவே கஷ்டப்பட்டார்கள். இதில் எப்படி தடுக்கப்போகிறார்களே பொறத்திருப்போம்...
...............................................................................................

உள்ளாட்சி தேர்தலில் வைகோவின் மதிமுக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் வரவேற்கத்தக்கது. 

உள்ளாட்சி தேர்தலில் மும்முனை போட்டி அல்லது நான்கு முனை போட்டியை எதிர்பார்க்கலாம். 

................................................................................................

பேரரிவாளன், முருகன், சாந்தானின் தூக்கு தண்டனையை தற்காலிமாக நிறுத்தி வைக்க செய்ய மிகவும் பாடுபட்டவர் வைகோ. ஆனால் நிறைய பத்திரிக்கைகள் அவர் இருந்தது போல காட்டிக்கொள்ளவில்லை.

யார் சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் இந்த வழக்கை தினமும் கவனிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த வழக்கிற்கு அரும்பாடுபட்டவர் வைகோ என்று....

................................................................................................

கோவையில் அரசின் வீட்டு வசதித்துறை சார்பில் கட்டப்பட்டு தற்போது முடிவிற்கு வந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு மண்ணில் புதைந்துள்ளது.

இதற்கு எப்படி அப்ரூவல் கொடுத்தானுகளோ, இதில் எவ்வளவு சுருட்டுனாங்களோ யாருக்குத் தெரியும்...

..................................................................................................

வீரபாண்டியார் நில அபகரிப்பு வழக்கில் ஜாமினில் வெளியே வந்தார் ஆனால் உடனே மீண்டும் அடுத்த வழக்கில் கைது..

இந்த வழக்கில் ஜாமின் வாங்கினால் மீண்டும் இன்னொரு வழக்கு என மாறி மாறி உள்ள தள்ளுவாங்க போலிருக்கே...

..................................................................................................

கேரள சேச்கிளுக்கும், சேட்டன்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள்...

..................................................................................................

ரெட்டிகளுக்கு போதாத நேரம் போல ஆந்திராவில் ஜெகன் மோகன் சிபிஜயிடம் பாடாத படுகிறார்.  கர்நாடகாவின் பொருளாதாரம் என்றழைக்கப்பட்ட ரெட்டி சகோதரர்கள் இப்ப உள்ளே... இவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பொடும் பொருட்களைப் பார்த்தால் தலை சுற்றுகிறது...

..................................................................................................

சீனாவில் மெட்ரோ ரெயில்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களை உற்சாகப்படுத்த புது உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. இளம் அழகிய கவர்ச்சி அழகிகள் தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து ஆண்களை கிளு கிளுப்பூட்டி வருகின்றனர்.
இச்சம்பவம் ஷாங்காய் மெட்ரோ ரெயில்களில் கடந்த சில வாரங்களாக நடை பெற்று வருகிறது. ரெயில்களின் இருக்கைகளுக்கு இடையில் நடந்து செல்லும் அழகிகள் தங்களது உள்ளாடைகளை கழற்றி வீசி கவர்ச்சியில் உச்சத்துக்கு செல்கின்றனர்.
இதை ரெயில் பயணிகள் தங்கள் செல்போன்களில் வீடியோ படமாக எடுத்து இண்டர்நெட்களில் பதிவு செய்து பரவ விடுகின்றனர். இதனால் ஷாங்காய் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. இதன் மூலம் ரெயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. மேலும் பல ரக டிசைன் கவர்ச்சி உடைகளை அணிந்தும் போஸ் கொடுக்கின்றனர். அந்த உடைகளை அணிந்து ஷாங்காய் நகர வீதிகளில் ஏராளமான பெண்கள் வலம் வருகின்றனர்.
தகவல்

ஜனவரியில் பிறப்பவர்கள் கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறப்பவர்கள் நடிகராகவும் ஆவர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.   குழந்தைகள் பிறக்கும் மாதத்துக்கும், எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

இது குறித்து லண்டன் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக கடந்த முறை நடந்த தேசிய கணக்கெடுப்பு அறிக்கை மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அவர்களின் டிசம்பர் மாதம் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில் பல் டாக்டர்களாக பணி புரிகின்றனர்.

 அதே போன்று ஜனவரியில் பிறந்தவர்கள் கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடிகர்களாகவும் உள்ளனர். மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிறந்தவர்கள் பெயர் சொல்லக்கூடிய வேலையிலும் இருக்கின்றனர்.

அதே வேளையில் கோடை கால மாதங்களில் பிறந்தவர்களில் பெரும் பாலோர் கால்பந்து வீரர், டாக்டர் மற்றும் பல் டாக்டர் பதவியில் இல்லை. இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் பிறந்த மாதங்களின் அடிப்படையி¢ல் அவர்கள் 19 விதமான பணிகளில் இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் மகேந்திரன் வசந்த மண்டபம் என்ற பெயரில் வலைப்பூ எழுதிவருகிறார்.. இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது. இவரின் கவிதைகள் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.. அவர் கவிதையின் ஒரு சில வரிகள்...

சொகுசுக்காரை எடுத்துகிட்டு

கொஞ்சதூரம் போனாலும்
நறுமணம்தான் வீசுதைய்யா
மக்காத குப்பையெல்லாம்!!

http://ilavenirkaalam.blogspot.com/2011/09/blog-post.html


 
தத்துவம்

சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன.

அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று. அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் அறிய முடியாது.


தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு.


நண்பர்களுக்கு வணக்கம்..

எனது புதிய தொழிலுக்கு  i5 Processor, 4 GB Ram, 1 GB NVidia Graphic Card, 500 GB hard disk இந்த திறன் கொண்ட லேப்டாப் தேவைப்படுகிறது. இந்தியாவில் விசாரிக்கையில் 40000க்கும் மேல் வருகிறது. விசாரித்ததில் US, UK, Singapore, Dubai இங்கு  விலை குறைவாக இருக்கும் என்று அறிந்தேன். இங்கு பணிபுரியும் நம் தமிழ் சகோதர சகோரரிகள் விவரம் தெரிந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். எனக்கு டிசம்பரில் கிடைத்தால் போதுமானது.

சகோதர, சகோதரிகள் உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்...

தொடர்புக்கு sat10707@gmail.com



Tuesday, September 6, 2011

கருத்தரிக்கும் ஆற்றலை குறைக்கும் வேப்பிலை...


சிறுவயது முதல் அனைவரும் அறிந்த மரம் வேப்பமரம். சிறுவயதில் மாரியாத்தா கோவிலில் நோம்பி என்றால் மஞ்சளும் வேப்ப இழையும் தான் உடனே ஞாபகம் வரும். கோயிலில் நட்டு வைத்துள்ள கம்பத்தின் மேல் வேப்ப இழையைப் வைத்து அதன் மேல் மஞ்சள் நீரை ஊற்றுவோம். இதற்கு கம்பத்துக்கு தண்ணீர் ஊற்ற செல்கிறேன் என்று செல்வோம்.

ஊரில் யாருக்காவது அம்மை நோய் வந்து விட்டால் வேப்பிலைமேல் ஒரு வெள்ளை வேஷ்டி விரித்து அம்மையால் பாதிக்கப்பட்டவரை படுக்க வைத்திருப்போம் வீட்டுக்கு வெளியே வேப்பிலை குத்தி வைத்திருப்பார்கள்.


கிராமத்தில் இருந்த போது வாரம் இரண்டு அல்லது 3 முறை வேப்பங்குச்சியில் பல் விளக்குவோம். அப்போது வேப்பங்குச்சியை கடித்து மெல்லும் போது ஒரு கசப்பு இருக்கும் அந்த கசப்பு பல் இடுக்கில் உள்ள கிரிமைகளை அழிக்கும் என்று சொல்வார்கள்... இவ்வாறு வேப்ப இலை, மரம் என சிறுவயதில் இருந்து வேப்பமரத்துக்கும் நமக்கும் உண்டான உறவுகள் இன்று வரை உள்ளது.

அப்போதெல்லாம் தெரியவில்லை வேப்பிலை ஒரு கிரிமிநாசினி என்று.. வேப்பமரம் இயற்கை நமக்கு அளித்த கொடையில் மிக முக்கியமானது என்று சொல்லலாம். நிறைய கை வைத்தியங்களுக்கு வேப்பிலை மிகவும் உதவுகிறது.



வேப்பமரத்தின் பயன்கள்

தோட்டத்திலுள்ள ஒரு வேப்பமரம், பத்து குளிர்சாதனக் கருவிகளுக்கு ஒப்பாகும். ஏனெனில், இது வெப்பநிலையை பத்து டிகிரி வரைக் குறைக்கவல்லது.

மருந்துகள், பல வாசனைப் பொருட்கள், கிருமிநாசினிகள் ஆகியவற்றைத் தயாரிக்க வேப்பிலைகள் பயன்படுகின்றன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.

எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்

வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.

வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.

வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.

விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.

வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.

வேப்பம் பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.

100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.

வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.

வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்.

வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.

நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி நிறைய நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


உலகில், இந்தியாவில்தான் இப்போது அதிக வேப்ப மரங்கள் உள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் ஓர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. வேப்பமரத்தின் பயன்களை அறிந்த மற்ற நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகியவை இப்போது அதிக அளவில் வேப்பமரங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளன.

நாம் இருக்கும் வேப்பமரங்களையெல்லாம் வெட்டிக் கொண்டிருந்தால் இழப்பு நமக்குத்தான்!

மரங்களை வெட்டாதீர்... ஒரு மரத்தை வெட்ட வேண்டி வந்தால் 10 மரங்களை நடுவோம்....

Thursday, September 1, 2011

அஞ்சறைப்பெட்டி 02.08.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........


கடந்த இரண்டு நாட்களாக அலுவலகம் விடுமுறை இன்று அஞ்சறைப்பெட்டி எழுத நேரம் கிடைச்சது அதனால் ஒரு நாள் லேட்...

எல்லாரும் விடுமுறையை நல்ல கொண்டாடி இருப்பீர்கள் வாழ்த்துக்கள்....

...............................................................................................

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய அம்மாவிற்கு வாழ்த்துக்கள்...

உண்மையான தமிழன் எல்லாம் அம்மா பின்னால் இருப்பதால் தமிழர்களுக்கு நல்லதே நடக்கும்....

இந்த தூக்கு தண்டனை பிரச்சனையை கிளப்பி அம்மாவை தூக்கம் இல்லாமல் செய்யலாம் என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இப்ப தூக்கம் இல்லையாம்... அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறாங்களாம்.... 5 வருடத்திற்கு அம்மாவை எவனும் ஒண்ணும் செய்ய முடியாது....

இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்காக உயிரை இழந்த செங்கொடிக்கு என் வீர வணக்கங்கள்....
...............................................................................................

ஒரு வழியாக லோக்பாலுக்காக போராடிய 74 வயது இளைஞருக்கு வாழ்த்துக்கள்...

........................................................................................................

இந்திய கிரிக்கெட் வாரியத்தையும், இந்திய ஒலிம்பிக் சங்கமும் தனிப்பட்ட அதிகாரத்துடன் இயங்கி வருகிறது இதை விரைவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சேர்க்கப்போறாங்களாம்...

இங்க என்ன என்ன ஊழலெல்லாம் நடந்திருக்கோ.... விநாயகருக்கே வெளிச்சம்....

அநேகமாக இம்மசோதா சரத்பவாருக்கு செக் வைக்க கூட இருக்கலாம்....

........................................................................................................

இன்னும் கைது படலம் தொடர்ந்து கொண்டே இருக்கு... கைது செய்த போலீசாரை விட முன்னாள் அமைச்சர்கள் மேல் தைரியமாக புகார் கொடுத்த பொது மக்களை பாராட்டலாம்....

........................................................................................................

தமிழகம் முழுவதும் இன்று முதல் அரசு கேபிள் வருகிறது. கேபிள் கட்டணக் கொள்ளைக்கு இன்றில் இருந்து விடிவுகாலம்.... அம்மாவின் ஆட்சியில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் நிறைவேறுவதில் மகிழ்ச்சியே...


 
தகவல்


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஐந்தில் திருந்து இல்லையேல் ஐம்பதில் வருந்து என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

குழந்தையாய் இருக்கும் போது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஏற்படாவிட்டால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல்வேறு விதமான புற்று நோய் வரும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி.

குழந்தை ஆசையாய் கேட்கிறதே, அடம்பிடிக்கிறதே என்பதற்காக தேவையற்ற நொறுக்குத் தீனிகளையும், சிப்ஸ், பர்கர், பீட்சா போன்றவற்றையும் வாங்கித் தரும் பெற்றோர் குழந்தைகளுக்குள் கான்சர் நுழைவதற்கான கதவையும் கூடவே திறக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

இங்கிலாந்தில் மட்டும் சுமார் 17 விழுக்காடு குழந்தைகள் அளவுக்கு மிஞ்சிய எடையுடன் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று கவலையுடன் தெரிவிக்கிறது.

இப்படி அதிக எடையுடன் இருப்பது பிற்காலத்தில் சிறு நீரகம், கல்லீரல், மார்பு, புரோஸ்டேட், உணவுக்குழாய் என பல்வேறு இடங்களில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதைத் தவிர நீரிழிவு, இதய நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக அதிகரித்து விடுகிறது.

குழந்தைகளாய் இருக்கும் போது சரியான உணவுப் பழக்கத்துக்குள் வராவிடில் இளைஞர்களானபின் அவர்களால் ஆரோக்கிய நிலைக்கு வர முடியாமல் போய்விடும் என எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரிட்சார்ட் ஜோன்ஸ்.

உடல் எடை அதிகரிப்பதால் வரும் கான்சர் வருடம் தோறும் தனது விழுக்காட்டை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.

வயிற்றுப் பகுதிகளில் அதிகமாய் சேரும் கொழுப்பு மார்பகப் புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் போன்றவற்றுக்குக் காரணமாகி விடுகிறது. நினைவில் கொள்ளுங்கள், மார்பகப் புற்று நோய் ஆண்களுக்கும் வரலாம் !

லிவர், சிறுநீரகம், கல்லீரல் போன்ற இடங்களில் கான்சர் வரவும் இந்த அதிகப்படியான கொழுப்பு காரணமாவதுண்டு.

சைட்டோகின்ஸ் எனும் நமது உடலிலுள்ள பொருள்  கான்சரை எதிர்த்துப் போராடுகிறது, அதன் அளவை அதிகப்படியான கொழுப்பு குறைத்து விடுகிறது. எனவே புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் வலுவிழந்து உடல் நோயில் விழுகிறது.

எனவே, பெற்றோர் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். குழந்தை இன்றைக்கு சிரிப்பதல்ல, என்றைக்கும் ஆரோக்கியமாய் வாழ்வதே முக்கியம்.



அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் மகேந்திரன் வசந்த மண்டபம் என்ற பெயரில் வலைப்பூ எழுதிவருகிறார்.. இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது. இவரின் கவிதைகள் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.. அவர் கவிதையின் ஒரு சில வரிகள்...

சொகுசுக்காரை எடுத்துகிட்டு

கொஞ்சதூரம் போனாலும்
நறுமணம்தான் வீசுதைய்யா
மக்காத குப்பையெல்லாம்!!

http://ilavenirkaalam.blogspot.com/2011/09/blog-post.html


 
தத்துவம்


நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உணைமையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!


தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!