Saturday, February 20, 2010

வெள்ளரிக்காயும் உடல்நலமும்...

 குளிர்காலம் முடிந்து இப்பொழுது வெய்யில் ஆரம்பித்து விட்டது. கோவையில் இருக்கும் நாங்களே மதிய வேளையில் வெளியில் செல்ல முடிாத அளவு வெப்பம் இருக்கிறது. சென்னையில் சொல்ல வேண்டியதே இல்லை அனேகமாக அங்கேயும் தொடங்கி இருக்கும் என நினைக்கிறேன். குளிர்காலத்திற்கும், வெய்யில் காலத்திற்கும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. வெய்யில் காலத்தில் நாம் நம் உடம்பிற்கு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளில் ஒன்று வெள்ளரிக்காய் இதன் மகத்துவம் நான் தெரிந்து கொண்ட வகையில் மிக அதிகம். அதை உங்களுட் பகிர்கிறேன் நீங்களும் பன் பெறுங்கள்...

வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை நம்மில் சாப்பிடாதவர்கள் சிலர் தான் இருப்பர். மிக குறைந்த விலையில் உடல்நலத்திற்கு ஏற்றது. வெள்ளரியை மூன்று வகையாக பிரிக்கலாம்.
பிஞ்சு வெள்ளரிக்காய்
பச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை சொல்லிமளாது. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியாக பார்த்துவாங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
இது பிஞ்சுக்கும் அடுத்தநிலை. இதை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். இதை வைத்து பழ வகை குழம்பு வைக்கலாம். அதற்கான பதிவு நம் வலைப்பூவில் நிறைய இருக்கின்றது.
வெள்ளரிபழம்
வெள்ளரி நன்கு பழத்து இருக்கும் பெரியதாகவும் இருக்கும். பழத்தை ஜூஸ் செய்து சாப்பிட ஏற்றது. இல்லை எனில் நாட்டுச்சக்கரை கலந்து அதனுடன் பழத்தை சேர்த்து சாப்பிடலாம். வெப்ப காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தரும்.
வெள்ளரியின் பயன்கள்:
விட்டமின் ஏ, பொட்டாசியம் அதிகம் உள்ளது
  1. சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  2. வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.
  3. வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
  4. உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்

Tuesday, February 16, 2010

எண்ணெய் குளியலும் உடல் நலமும்...


இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல். இன்று நம்ம ஊரைப்பொறுத்த வரை எண்ணெய்க் குளியல் அதிகம் நடக்கும் இடம் குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் அங்கு சென்றால் மட்டுமே நமக்கு எண்ணெய் குளியல் ஞாபகம் வருகிறது. ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.

எப்படிக் குளிப்பது

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,  பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும். 
 எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும் நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும் இரணஇடு சொட்டு எண்ணெய் விடவேண்டும். பின் சூரிய ஒளியில் ஒரு 20 நிமிடம் உடல் காய நிற்கவேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு

ஒரு வயது‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளாக இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கான எ‌ண்ணெயை (பே‌பி ஆ‌யி‌ல்) வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது உட‌ல் முழு‌க்க‌த் தட‌வி‌வி‌ட்டு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்.

ஒரு வயது‌க்கு மே‌லிரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை வா‌ங்‌கி வ‌‌ந்து, ச‌னி‌க் ‌கிழமைக‌ளி‌ல் உட‌ல் முழுவது‌ம் தே‌ய்‌த்து ‌சி‌றிது நேர‌ம் ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் கு‌ளி‌க்க வை‌க்கலா‌ம்.

முத‌‌ல் இர‌ண்டு மூ‌ன்று வார‌ங்களு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை தே‌ய்‌த்தது‌ம் கு‌ளி‌க்க வை‌த்து ‌விடு‌ங்க‌ள். பு‌திது எ‌ன்பதா‌ல் உடலு‌க்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள ‌சில நா‌‌‌ள் ‌பிடி‌க்கு‌ம்.

ந‌ல்லெ‌ண்ணைய புரு‌வ‌த்‌தி‌ல் தடவ ம‌ற‌க்க வே‌ண்டா‌ம். 4வது வார‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 ‌நி‌மிட‌ம் முத‌ல் ஊற ‌வி‌ட்டு‌க்‌ கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்
கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.

நன்மைகள் :
  • உடல் சூட்டைத் தணிக்கும்
  • உடல் புத்துணர்ச்சி பெறும்
  • உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்
  • திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும் (இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
  • சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்
  • ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்
நோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியம் என்பதே என் கருத்து.

Friday, February 12, 2010

தர்பூசணி: இது நம்ம ஊர் வயாகரா


இனி கோடை காலம் வந்து விட்டது உடல் சூட்டைத்தணிக்க தர்பூசணி சாப்பிடலாம் என்று தான் நானும் இருந்தேன் அதைப்பற்றிய ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன் அதற்காக புதிய தகவல்களை நான் தேடும் போது ஒரு பழைய பத்திரிக்கையில் வந்த செய்தியை படிக்கும் போது ஆண்மை விருத்திக்கு தர்பூசணி மிகவும் உதவுகிறது சொல்லப்போனால் அது ஒரு வயகாரா என்று படித்தேன். இதை எப்படி பதிவு செய்வது நிறைய பெண் பதிவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தலைப்பை பார்த்ததும் நம் பதிவிற்கு வந்து படிப்பவர்கள் படிப்பார்களா மாட்டர்களா என்று மனதில் உறுத்தல் ஆனால் தர்பூசணியில் இருக்கும் தகவல் மிகவும் முக்கியமான பயன்கள் வாழ்க்கைக்கு தேவையானதும் கூட, அதனால் இக்கட்டுரையை எழுதியே ஆகவேண்டும் என்று பதிகிறேன்.
நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக்கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், 'ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே...!" என்று அங்கலாய்க்கும் தகவல் இது.
அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர், இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.
இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணிக்கு என்ன சிறப்பு?
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.
வெள்ளை பகுதியில்தான்...
இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.
இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
தர்பூசணியின் பயன்கள்:
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.
மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.
பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.
வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள். கோடையைக் கொண்டாடுங்கள்.
இப்பதிவை படிக்கும் நண்பர்களே இப்பதிவை அனைவரும் அறிய தமிழ்மணத்திலும், தமிழிஸ்லியும் அப்படியே ஒரு குத்து குத்துங்க...

Wednesday, February 10, 2010

சர்க்கரைநோய்யும் உணவுகளும்....



சர்க்கரை நோய் இன்று இந்தியாவில் அதிகம் பேருக்கு உள்ள பிரச்சனை. நாம் தினமும் பார்க்கும் 100 பேரில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்கு இன்று சர்க்கரை நோய் பரவக் காரணம் நமது உணவுப்பழக்கவழக்கம்தான். இதுவே இப்பொழுது 70 வயதைக்கடந்தவர்களில் அதிகம் பேருக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றால் அவர்களின் உணவுப்பழக்கம் தான் காரணம். நாமும் நமது உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றினால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம் இதற்காக நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நான் அறிந்த தகவல்களை தொகுத்து அளித்து இருக்கிறேன்.
ஒரு குழந்தை இளம் வயதிலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாளமில்லா சுரப்பி மண்டலம்தான். இதை ஆங்கிலத்தில் எண்டோகிரைன் சிஸ்டம் என அழைப்பõர்கள். இந்த நாளமில்லாச் சுரப்பிகள் தான் மனித உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன்களின் சுரப்பானது வாத, பித்த கபத்தை பொறுத்தே அமைகின்றன. இந்த மூன்றில் எதனுடைய நிலையில் மாறுபாடு ஏற்பட்டாலும் முதலில் பாதிக்கப்படுவது ஹார்மோன்களே. வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய பங்கு வகிப்பது ஹார்மோன்கள் ஆகும். உடலுக்கு தேவையான சர்க்கரை அதாவது இன்சுலினை சுரக்கும் கணையம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன் ஏற்பட்டு நீரிழிவு நோய் உருவாக காரணமாகிறது.
இந்த நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே.
முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
கீழ்கண்ட உணவு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து வருவது நல்லது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்:
கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காளி பிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள் :
சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.
கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை
இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோய்க் காரர்களுக்கு உகந்த பழங்கள்:
  • சாத்துக்குடி                                 1
  • ஆரஞ்சு                                         2
  • ஆப்பிள் (தோலுடன்)              1
  • கொய்யா (சிறியது)                  2
  • பேரிக்காய் (சிறியது)               2
  • வெள்ளரிக்காய்                         2
  • அன்னாசிப்பழம்                        4 வளையங்கள்
  • தர்பூசணி                                     1 துண்டு
மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம்.
உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால்.
வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

  • எலுமிச்சை சாறு                  200 மி.லி.
  • வாழைத்தண்டு சூப்             200 மி.லி.
  • அருகம்புல் சூப்                     200 மி.லி.
  • நெல்லிக்காய் சாறு             100 மி.லி
  • கொத்தமல்லி சூப்                100 மி.லி.
  • கறிவேப்பிலை சூப்             100 மி.லி.
    இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.
அசைவ உணவுகள்:
முட்டை                                       1 (வெள்ளைக் கரு மட்டும்)

மீன்                                                 2 துண்டுகள்

கோழிக்கறி                                 100 கிராம் (அவித்தது)


தவிர்க்க வேண்டிய உணவுகள்:
  1. வேர்கள் மற்றும் கிழங்கு வகைகள்.
  2. இனிப்பு வகைகள்.
  3. எண்ணையில் வறுத்த பொருட்கள்.
  4. காய்ந்து உலர்த்திய பழங்கள் மற்றும் கொட்டைகள்.
  5. சர்க்கரை.
  6. வாழை, சப்போட்டா, சீதா போன்ற பழவகைகள்.
மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும் தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், ஆசனமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
தினமும் நான் நடைப்பயிற்சியும், ஆசனமும் தினமும் காலை நேரங்களில் தவறாமல் செய்து வருகிறேன் இதற்கு முக்கிய காரணம் உடல் வலிமை பெறும், ஆரோக்கியமாக இருக்கலாம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. நான் நன்றாக சாப்பிட்டு பழகிவிட்டேன் தினமும் வித விதமாக சாப்பிடுவேன் அது மட்டும் இல்லாமல் நிறைய நொறுக்குத் தீனிகள், மாலை வேளைகளில் தனியாக இப்படி நிறைய சாப்பிடுவேன் எனக்கு பயம் வந்து விட்டது நாளை நமக்கு சர்க்கரை வியாதியோ, கொலஸ்டிரலோ வந்து விட்டால் எதுவும் சாப்பிட முடியாது இதற்காகவே நடைபயிற்சியும் ஆசனமும் சிறிது உணவுப்பழக்கத்தையும் மாற்றிவிட்டேன்.

Monday, February 8, 2010

பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்



பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத்தணிக்கும்.


சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.


ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.
வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.
பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.


பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.


பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.


பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேகபுஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.


வெண்பூசணி லேகியம்
நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச்சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது. பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.
சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.
சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு  தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும். பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.
இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியத்தின் பயன்கள்

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை, எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல்
நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.

Sunday, February 7, 2010

தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம்

மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தை சங்கமம் என்று அழைப்பார்கள். காவிரி, பவானி கண்ணுக்கு புலப்படாத அமுதநதி இம்மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தை கூடுதுறை என்று அழைக்கிறார்கள். இக் கூடுதுறையை தென்னிந்தியாவின் திருவேணி சங்கமம் என்றும் அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரபலமான இடம் பவானி இங்கு தான் கூடுதுறை அமைந்துள்ளது. ஒவ்வொரு அம்மாவசை அன்றும் கூடுதுறையில் கூட்டம் அலைமோதும்.

சங்கமேஸ்வரர் ஆலயம் அமைப்பு:
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிவஸ்தலம் பெயர் திருநணா (பவானி) இறைவன் பெயர் சங்கமேஸ்வரர் இறைவி பெயர் வேதநாயகி, வேதாம்பிகை
பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர்.
கூடுதுறையில் சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.
வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.
இக்கோவிலுக்கு இரண்டு வாயில்கள். வடக்கு நோக்கிய முக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் சிறிய பிள்ளையார் கோயில் உள்ளது. கிழக்கு வாயிலுக்கு எதிரேதான் கொடிமரம், பலிபீடம்,விளக்கேற்றும் கற்துண் ஆகியவையெல்லாம் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக கூடுதுறைக்குச் செல்லலாம். நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் அமைந்துள்ளன. கூடுதுறையிலே ஒரு தீர்த்தக் கட்டம் உள்ளது. இதனை 'காயத்திரிமடு' என்றும் கூறுகின்றனர். இதன் கரையில் காயத்திரி லிங்கம், அமுதலிங்கம் என்று இருக்கின்றன. திருக்கோவிலைச் சுற்றி அந்நாளில் கோட்டை இருந்திருக்கிறது.தற்போது இடிந்த சிதைந்த சில பகுதிகளைக் காணலாம். இக்கோவில் தற்போது புதிய திருப்பணியைக் கண்டுள்ளது. இங்கு மகாமண்டபம், இப்பகுதிகளை ஆண்ட இம்மடி கெட்டி முதலியார் என்பவர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள இரு பெண்களின் சிற்பம் பார்க்கத்தக்கது.இக்கோவிலுள்ளே பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உண்டு.
அம்பிகையின் பெருமை:
அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார்.
இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றுமுள்ளன.
ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
ஆடி 18
பவானி கூடுதுறையில் எப்போது நீராடினாலும் சிறந்த பலன் உண்டு. இருந்தாலும் அமாவாசை நாட்களிலும், ஆடி 18 அன்றும் இங்கு பெரும் கூட்டம் கூடுகிறது. ஆடி 18ம் நாளில் இக்கூடுதுறையில் சுமங்கலிப்பெண்கள் ஆயிரக்கணக்கில் கூடி, தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து வழிபடுவர்.காவிரி அம்மனுக்கு தீபாராதனை செய்து, மாங்கல்யம் நிலைக்கவும், வீட்டில் உள்ள இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடவும் வேண்டி, மஞ்சள் நூல் கயிற்றை அணிந்து கொள்வர். சிறுமிகளுக்கும், கன்னிப்பெண்களுக்கும் கூட இக்கயிறை, வயதில் மூத்த சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பர்.பின்னர் தேங்காய், பழம், காதோலை கருகமணி ஆகியவற்றை இலையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவர். திருமணமான புதுத்தம்பதியினர் காவிரிக்கு பூஜை செய்து, தாங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மணமாலைகளை பத்திரப்படுத்தி இந்த நாளில் ஆற்றில் விடுவர்.
பரிகார தலம் : 
தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லை. இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது.இங்குள்ள நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்வதால் பிதுர்களுக்குரிய பூஜை செய்தால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகிறது.
இலந்தை பழம் நைவேத்தியம் : 
கோயிலின் தென்மேற்கு மூலையில் உள்ள மேடை மீது உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது. இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார். இம்மரம் தினமும் இறைவனின் நைவேத்தியத்திற்கு சுவைமிக்க பழங்களை தருகிறது. மூலவர் கிழக்கு நோக்கியும், குபேரன் பூஜித்ததால் ராஜகோபுரம் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது.சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளது. விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் எனப்படுகிறது. ராவணன் இங்குள்ள சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளான். ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு சூரிய பூஜை நடப்பது சிறப்பு.நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளன. எனவே, இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. இங்கு கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது. அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு.
இத்தளத்தின் சிறப்பு அம்சம்:
அகால மரணமடைந்தவர்களுக்காக "நாராயணபலி' பூஜை செய்யப்படுகிறது. இதனால் அவர்களது ஆத்மா சாந்தியடைவதாக ஐதீகம். பிரார்த்தனை குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் நதியில் குளித்து விட்டு இங்குள்ள அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து ஆவுடையை 3 தடவை சுற்றி வந்து தரிசித்தால் சிறந்த பலன் உண்டு. தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லையாம். இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தல விநாயகரையும், சங்கமேஸ்வரரையும் வழிபட்டு இங்குள்ள இலந்தை பழங்களை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மாந்திசனி மகன் கிரகத்தின் ரூபத்தில் சனிபகவான் தனி சன்னதியில் உள்ளார். மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும். ஜுரஹரேஸ்வரர் தனி சன்னதியில் அருளுகிறார். அடிக்கடி காய்ச்சல், தோல் வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து மிளகு ரச சாதத்துடன் அரைக்கீரை கூட்டு நைவேத்தியம் செய்து வழிபட்டால் உடனடி நிவாரணம் கிடைப்பதாக கூறப்படுகிறது. வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, இவரை வில்வத்தினால் அர்ச்சித்து அதை உணவில் சேர்த்து கொண்டால் நலம். நாக தோஷம் உள்ளவர்கள், கல்லில் செய்த நாகரைக்கொண்டு வந்து, ஆற்றின் கரையில் இருக்கும் விநாயகர் அருகே பிரதிஷ்டை நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்திற்கு தாலி கட்டி அதை ஆற்றில் விடுகிறார்கள். பெண்கள், அரசங்கொத்திற்கு பூஜை செய்து அதை ஆற்றில் விடுகிறார்கள்.
குறிப்பு: இப்பகுதியில் பலர் சிவபெருமான் பக்தர்கள் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு சங்கமேஸ்வரன் என்று பெயரிடுகின்றனர். இப்பகுதியில் நிறைய சங்கமேஸ்வரன்கள் உள்ளனர் எனது பாட்டனார் தீவிர சிவ பக்தனாம் அதனால் தான் எனக்கு சங்கமேஸ்வரன் பெயர் வைத்தாரம்.

Friday, February 5, 2010

பாட்டியின் பழமொழியும் சங்கவியும்...

கடந்த வார இறுதியில் எனது வீடு கோவை மத்தியில் இருந்ததை மாற்றலம் என முடிவு செய்து கோவை பேரூர் தாண்டி ஒரு அழகான மலை அடிவாரத்தில் வீடு இடம் பெயர்ந்துள்ளேன். கடந்த ஞாயிறு அன்று வீடு பால்காய்ச்சும் நிகழ்ச்சி நடந்தது அன்று வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் வந்து இருந்தனர். இதில் மிக வயதான எங்க பாட்டியும் வந்து இருந்து. அந்த பாட்டி ஒவ்வொரு முறை பேசும் போதும் பழமொழிகளை சொல்லி பேசியது எனக்கு இந்த பழமொழிகள் எல்லாம் கேட்டு இருந்தாலும் அன்று நான் கவனிக்கத் தொடங்கினேன். இன்று அந்த பழமொழிகள் எல்லாம் நம்மில் பலபேருக்கு நிச்சயம் தெரியும் ஆனால் உபயோகப்படுத்த மாட்டோம்.
பாட்டியிடம் நான் மாட்டினேன் பாட்டி என்னைப்பார்த்து கேட்டது ஏண்டா பேராண்டி உனக்கு மாதம் எவ்வளவு சம்பாரிக்கறாய் என நான் சிரித்துக்கொண்டே சொன்னேன் வீட்டுக்கு எவ்வளவு தருகிறாய் மிண்டும் சிரித்து விட்டு தருவதில்லை என்றேன் என்ன செய்யற உன் சம்பாதியத்தை என கேட்க நான் சிரிக்க அதற்கு சொன்னது பாட்டி சும்மாவ சொன்னாங்க சிறுவார் வீட்டு வெள்ளாமை வீடு வந்து சேராதாம் என்று எனக்கு புரியவில்லை பின்பு யோசிக்கும் போது தான் புரிந்தது அந்த பழமொழி.
அன்று முழுவதும் நான் கேட்ட அதற்கு முன்பு கேட்ட மற்றும் நண்பர்களிடம் கேட்ட பழமொழிகளை தொகுக்க முயற்சித்தேன் ஒரளவு தொகுத்து உள்ளேன். நீங்களும் இப்பழமொழிகளை அனுபவியுங்கள்... "பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது".

மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது?
மழை எப்போது பெய்யும், கருவுற்ற பெண் எப்போது பிரசவிப்பாள் என்று தெரியாது அதற்காக இப்பழமொழி.

அடைத்த கதவு திறக்காத மழை
கோடை காலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்
ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும்
கார்த்திகை மாதம் கனமழை பெய்யும்
ஒரு நாள் முழுவம் தொடந்தது பெய்யும் மழையை அடைமழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்கிறனர்.

அந்தி மழை அழுதாலும் விடாது! 
கோடை காலத்தில் அந்தி நேரத்தில் மழை பிடித்தால் நாள் முழுவதும் மழை பெய்யும் அதற்கு கூறிய மொழி தான் அந்தி மழை அழுதாலம் விடாது.

தவளைகள் போடும் சத்தத்தை தவளை, உடைக்கட்டா... தவக்கட்டா... என்று மழை கூறுவதாகக் கற்பனை செய்து கூறுகின்றார்கள். அதாவது வயல் வரப்புகள் எல்லாம் உடைத்துவிடும் அளவோடு மழை பெய்யப் போகிறது என்று தவளை ஆளுடம் சொல்வதாகக் கூறுகிறார்கள்.
மழை முகம் பாராத பயிரும்; தாய் முகம் பாராத பிள்ளையும் ஒன்று என்று கூறுகிறது ஒரு பழமொழி.

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்சானம்
அடுத்தவன் பொருளை எடுத்து மற்றவருக்கு தருவது தானம் ஆகாது. இந்த கருத்தை தான் இப்பழமொழி உனர்த்துகிறது.

அரச மரத்தை சுற்றி வருவதற்குள் அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாளாம்
குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் தினமும் அரச மரத்தைச்சுற்றி வந்தால் குழந்தைபேறு உண்டாகும் என்பது ஒரு நம்பிக்கை இந்த பழமொழி கூறுவது அவசரம் பற்றியே மரத்தை சுற்றிக் கொண்டே வரும்போது அடிவயிறு பெருத்துவிடுமா என்ன? கரு உருவாக வேண்டும் மாதங்கள் சில போக வேண்டும் அல்லவா.

இருட்டு வீட்டுக்குப் போனாளும் திருட்டு கை நிக்காது
மனிதன் தன் செயலைமாற்றிக் கொள்வது கடினம்.இயல்பாய் அமைந்து விட்ட சுபாவம் எளிதில் மாறாது மறையாது.

கிழிஞ்ச சேலையும் புழுங்கரிசி திண்ண வாயும் சும்மா இருக்காது
சேலை பழசாகி விட்டால் கிழிந்து கொன்டே இருக்கும் நின்றால்,உட்கார்ந்தால் கூட கிழியும். சிலர் புழுங்கல் அரிசியை சதா வாயில் அடக்கி மெல்லுவார்கள்.இந்த பழக்கத்தால் அவர்கள் வாய் சதா அசை போட்டுகொண்டே இருக்கும்.

சும்மா இருந்த வாய்க்கு கொஞ்சம் அவல் கிடைத்த மாதிரி
சாதாரணமாகவே (வாய் சதா அசை) பிறர் பற்றி பொல்லாங்கு பேசும் ஒருவனுக்கு அவனை பற்றி செய்தி கிடைத்துவிட்டால் கேட்கவா வேண்டும்?

பந்திக்கு முந்து படைக்கு பிந்து
சாப்பிடுவதற்று நம் கை (வலது கை) முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில் (போர் புரியும் நேரம்) இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வார்கள். எவ்வளவு தூரம் கை பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாக செல்லும் இதுவே பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என்கிறார்கள்.

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
பழங்கால சித்த மற்றும் நாட்டு மருத்துவத்தில் மூலிகை, சில பூக்கள், காய், விதை போன்றவற்றை போல சில மூலிகை (மருத்துவ குணம் கொண்ட) வேர்களும் முக்கிய பங்கு வகித்தன. அதன் பொருட்டே ஒரு வைத்தியன் அவனிடம் ஆயிரம் மருத்துவ வேர்களை வைத்திருந்தாலும், தெரிந்து வைத்திருந்தாலும் அவன் அரை வைத்தியகாரன் தான் என்று சொன்னார்கள்.

யாணைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
வலிமை யானவனுக்கு ஒரு நேரம் வந்தால் எளிமையானவனுக்கும் ஒரு நேரம் வரும் என்பதே இதன் பொருள்.

கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு
கைபுண் அல்ல"கைப்பூண்"அணியக்கூடிய ஆபரணம்,அதாவது கழுத்தில் அணியும் ஆபரணத்தைப் பார்க்க கண்ணாடி அவசியம்.ஆனால் கையில் அணியும் பரணத்தைப் பார்க்க கண்ணாடி தேவையில்லை நம் பக்கத்திலிருக்கும் மனிதனைத் தெரிந்துகொள்ள அல்லது புரிந்துகொள்ள மூன்றாவது மனிதன்க் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதே இதன் உட்கருத்து.

கப்பலே கவிந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கப்பல் கவிழ்ந்து நீ ஏழையாகி விட்டாலும் அதற்க்காக மனம் நொந்து கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட்டால் போன பணமும், செல்வமும் திரும்பவா வந்துவிடும்.இது ஒரு கருத்து.மற்றொறு கருத்து. கன்னம் என்பதுமுகத்தில் உள்ள கன்னம் அல்ல."கன்னக்கோல்" கப்பல் கடலில் முழ்கி பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டாலும் நீ மீண்டும் உழைத்து சம்பாதிக்க வேண்டுமே தவிர, கன்னக்கோல் வைத்து திருடி பிழைக்கக் கூடாது. "கன்னக்கோல்"-அந்தக் காலத்தில் திருடர்கள் கன்னக்கோலைப் பயன்படுத்தி சுவற்றில் ஒட்டை போட்டு திருடுவார்கள்.

ஆட தெரியாதவனுக்கு தெரு கோணலாம்
நமது இயலாமைக்கு அல்லது தோல்விக்கு எதாவது ஒரு காரணம் கூறி தப்பிப்பதையே இப்பழமொழி விளக்குகிறது.

ஆறு வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி

தாயும் பிள்ளை என்றாலும் வாயும் வயிறும் வேறு தான்


தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை


அடியாது மாடு படியாது


எண்ணெய் தடவிக்கிட்டு குப்புறப்படுத்தாலும் ஒட்டுற மண் தான் ஒட்டும்

இன்னும் நிறை இருக்கின்றது இதற்கான விளக்கங்களை தொகுத்து இரண்டாம் பகுதியாக வெளியிடலாம் என இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்த பழமொழியையும் கூறுங்கள் நண்பர்களே...

Monday, February 1, 2010

தண்ணீரும் உடல்நலமும்...

தண்ணி குடி எல்லாம் சரியாகிவிடும் இந்த வரிகளை கேட்காத வீடு இருக்காது. தண்ணீர் நம் வாழ்வோடு உள்ள ஒன்று நாம் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை தண்ணீர் இல்லாமல் நம்மால் இருக்க இயலாது. தண்ணீர் நாம் குடிக்க, குளிக்க நமது அன்றாட தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய உதவுகிறது. நமது உடலிலும் தண்ணீர் இருக்கிறது. தண்ணீர் பல மருத்துவ தன்மைகள் கொண்டது தண்ணீரைப்பற்றி நான் அறிந்த படித்த பல தகவல்களை சேகரித்தேன் இத்தகவல்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

நமது உடலில் தண்ணீரின் பங்கு:
ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன் கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது. அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது, இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும் ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம் எனவே தேவையான அ ளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
தண்ணீர் இழக்கும் அளவு அருந்த வேண்டியது அவசியம். இல்லை எனில் தண்ணீர் இழப்பு (dehydaration) ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கும் உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறாமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 8 கோப்பை தண்ணீர் அருந்துவது மிக அவசியம். அதிக அளவில் அருந்துவதால் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகங்கள் அவற்றை சிறுநீராக்கி வெளியேற்றிவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பதை பழகிக்கொள்ள வேண்டும்.
உடலுக்கு தண்ணீர் அருந்துவதாலும் சில உணவுப்பொருட்களை செரிக்கும் போது உப பொருளாக உற்பத்தியாவதாலும் கிடைக்கிறது. அதிக உடல் பயிற்சியின் போதும் வெளியே வெப்ப நிலை அதிகம் இருக்கும் போது தண்ணீர் வியர்வையாய் உப்புடன் சேர்ந்து வெளியேறுகிறது. வியர்வை ஆவியாகி வெளியேறும்போது உடலின் வெப்பத்தை உபயோகிப்பதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. அதே சமயம் குளிர் அதிகம் இருக்கும் போது சிறுநீராக அதிக அளவில் வெளியேறுகிறது. அதிக அளவில் வாந்தி எடுத்ததலும் வயிற்று போக்கு ஏற்பட்டாலும் தண்ணீர் வெளியேறுவதால் உடனே நிறைய நீர் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.
சோடியம் பொட்டாசியம் போன்ற சில மிக முக்கியமான தனிமங்கள் நீருடன் சேர்ந்து வெளியேறுவதால் இவை உடலின் அமில காரத்தன்மை மற்றும் நீரின் அளவை சரியாக வைத்திருக்க அதிக நீர் அருந்துவது அவசியமாகும். உடலும் இந்த மின்ணுக்களின் அளவை சரியாக்கி கொள்ள மிகவும் உழைக்கிறது. உதாரணமாக அதிக சோடியம் மின்னணு உடலில் சேர்ந்துவிட்டால், உடனே தாகம் எடுத்து நாம் நீர் அருந்தி அதை சரிப்படுத்துவோம். உடனே மூளை சிறுநீரகத்திற்கு ஒரு செய்தி அனுப்பி, சிறுநீர் வெளியேறுவது குறைந்து சோடியம் அளவு சரியாகிவிடும். சோடியம் அளவு குறைவாக இருந்தால், சிறுநீர் அதிகமாக வெளியேறி இரத்ததில் நீரின் அளவைக் குறைந்து, சோடியம் அளவை சரிப்படுத்துகிறது. தாகம் எடுப்பது உடலின் நீர் அளவு குறைந்திருப்பதைக்காட்டுகிறது. அதேபோல பிட்யூட்டரி என்ற உறுப்பும், சிறுநீரகமும் தண்ணீர் மின்னணுக்கள் அளவை சரியாக அவைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
உடலில் தண்ணீர் அளவு குறையும் போது மூளை வாசோப்பெரெஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது சிறுநீரகங்கள் அதிக சிறுநீர் வெளியேற்றுவதை தடுக்கிறது. உடலில் தண்ணீர் குறையும் போது திசுக்களில் உள்ள தண்ணீர் செல் சவ்வுகளில் இருந்து வெளியேறி இரத்தத்தில் கலக்கிறது. தண்ணீர் அளவு அதிகமாகும் போது இரத்ததில் இருந்து திசுக்களுக்கு உள்ளே சென்று தண்ணீர் அளவை கட்டுப்படுத்துகிறது.
தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்:
தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.
தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.
ஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை கூடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
 மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.
எப்போது தண்ணீர் குடிக்கலாம்:
தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை ஏற்கனவே நிலவியது. தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும். தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.
காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.
காலை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும். கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.
இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம். எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. 
உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும். தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது. ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும். பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை ஆகவே உடற் பயிற்சி செய்த பின் சரியான முறையில் தண்ணீர் குடிக்கும் வழிமுறை என்ன என்றால் முதலில் தண்ணீர் வாய்க்குள்ளே ஈரம் செய்ய வேண்டும். பின் குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.