Monday, March 17, 2014

நமக்கு தேர்தல் விதிமுறையை அறிய வைத்த டி.என்.சேஷன்


இந்திய துணைக்கண்டத்தில் 1990க்கு முன் தேர்தலை நடத்துவது மத்திய அரசாங்கமும், அதிகாரிகளும் தான் என மக்கள் நினைத்துக்கொண்டு இருந்தனர். 1990ல் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் டி.என். சேஷன். இவர் பதவி ஏற்புக்கு முன் பின் என்று இந்திய தேர்தலை பிரிக்கலாம். இதற்கு முன் இவ்வாணையம் செயல் பட்டு வந்தாலும் இவர் வரவிற்குப்பின்தான் சாமானிய மக்களும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் சுதந்திரமாக கேள்வி கேட்க இப்படி ஒரு ஆணையம் இருக்கின்றது என அனைவரும் அறிந்தனர்.
1990க்கு முன் நடந்த தேர்தலில் ஊழல் மிகுந்திருந்த நிலையில் இவரின் பதவிக்காலத்தில் கண்டிப்புமிக்க நேர்மையான செயலால் கொஞ்சம் தனிக்கப்பட்டது என்பது தான் வரலாற்று உண்மை. தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதுடன் தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றி நடக்கின்ன்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்புள்ள சவாலான பணியாகும்.
தேர்தல் அறிவித்துவிட்டால் ஒவ்வொலு ஊரிலும் ஒவ்வொரு கட்சிக்காரரும் ஒலிப்பான்களை வாகனங்களில் கட்டிக்கொண்டு 24 மணி நேரமும் கத்திக்கொண்டே இருக்கும் எப்ப வேண்டுமானாலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார்கள், சுவற்றில் வரைவது, போஸ்டர் ஒட்டுவது என வரம்புக்கு மீறிய செயல்கள் அனைத்தும் கண்காணிப்பின்றி நடந்தது.
 


 டி.என். சேஷன், இந்தியத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த போது தனக்கிருந்த அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி, பல கெடுபிடிகளுக்கு மத்தியில் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்தார். வானளாவிய அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு உண்டு என்பதையும், ஆட்சியாளர்களின் கைப்பாவையாகத் தேர்தல் கமிஷன் செயல்பட வேண்டிய தேவையில்லை என்பதையும் டி.என். சேஷன் உணர்த்தினார்.

அதன் பின்னரே, தேர்தல் ஆணையத்திற்கு இவ்வளவு அதிகாரங்கள் இருப்பது வாக்காளர்களுக்குத் தெரிய வந்தது. பிறகு வந்த தேர்தல் ஆணையர்கள் தங்களுக்குள்ள அதிகாரங்களை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றனர்.
இதனால், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு அரசியல் கட்சிகள் ஆளாகியிருப்பதுடன், விதி மீறல்கள் நடந்தால் அதற்குரிய தண்டனையை எதிர்கொள்ளவும் நேரிடுகிறது.
எனவே, தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதும் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள தேர்தல் நடத்தை விதிகளில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.
* தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விடுகின்றன.
* இதன் பிறகு, வாக்காளர்களுக்கு பயனளிக்கக் கூடிய எவ்வித சலுகை அறிவிப்புகளையும், அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ அறிவிக்கக் கூடாது.
* புதிய திட்டம் தொடர்பான அறிவிப்போ, அடிக்கல் நாட்டு விழாவோ நடத்தக் கூடாது. அது தொடர்பான வாக்குறுதிகளையும் அளிக்கக் கூடாது.
* அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் தனிப்பட்ட எந்தவொரு பணி நியமனத்தைச் செய்யக் கூடாது.
* வாக்குக்காக எந்தவொரு அரசியல் கட்சி, அல்லது வேட்பாளர்கள் ஜாதியினர், வகுப்பினரிடையே கருத்து வேறுபாடுகளை, மோதல்களை பதட்டம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது.
* வேட்பாளர் எவரும் எந்தவொரு தனி நபருடைய நிலம், கட்டிடம், மதிற்ச்சுவர் முதலியவற்றின் மீது, அதன் உரிமையாளரின் அனுமதியின்றி கொடிக் கம்பம் நடுதல், விளம்பரத் தட்டிகள் கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், விளம்பரம் எழுதுதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது.
* கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது.
* தேர்தல் கூட்டம் நடத்துவதற்காக ஆளுங்கட்சி எந்த வரையறைகள், நிபந்தனைகளின் பேரில் பொது இடங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதே அடிப்படையில் பிற கட்சிகளும், வேட்பாளர்களும் அந்த இடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* தேர்தல் நேரத்தில் பத்திரிக்கைகளிலும், பிற ஊடகங்களிலும் அரசு செலவில் அரசின் சாதனைகளை விளம்பரமாக வெளியிடுதல், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பயன்படுத்துதல் கூடாது.
* ஒரு அரசியல் கட்சியின் கூட்டம் நடத்துமிடத்தில், அதே நேரத்தில் மற்றொரு கட்சி ஊர்வலமோ, பேரணியோ நடத்தக் கூடாது. அதேபோல் ஒரு அரசியல் கட்சியின் விளம்பரங்களை மற்றொரு அரசியல் கட்சி அகற்றக் கூடாது.
* வாக்காளர்களுக்கு கையூட்டு, அன்பளிப்பு வழங்குதல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக் கோருதல் போன்றவை தேர்தல் விதிகளுக்கு மாறானவை.
* வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பாகவே மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறும். அதன் பின்னர் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் வேட்பாளர்கள் இறங்கக் கூடாது.
* வாக்குச் சாவடிக்கு வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வர வேட்பாளர் எவரும் ஏற்பாடுகள் செய்யக் கூடாது. 
 
தேர்தல் ஆணையம் மூலம் அதிகாரவர்க்கத்தின் பிரச்சனைகளை முறையிட முடியும் என்பது இவர் மூலமாகத்ததான் அறிந்தோம் என்றால் அது மிகையாகது.
 
இது ஒரு மீள் பதிவு.. 
 
2011 சட்டமன்ற தேர்தலின் போது எழுதியது, இப்போதும் அனைவரும் அறிய வேண்டிய விதிமுறை என்பதால் மீள்பதிவு...

Sunday, March 16, 2014

குழந்தை வளர்பில் சூதனமா இருங்க பெத்தவங்களே...

 
குழந்தை வளர்ப்பு ஒரு கலை, அவர்களை முறையாக வளர்க்க வேண்டும் என்று சொல்கின்றனர் இப்போது எல்லாம். இதற்காகப் பல மருத்துவர்களும், குழந்தை வளர்ப்பு பற்றிப் பல புத்தகங்கள், பல வலைப்பதிவுகள் என அனைத்து மொழிகளிலும் உண்டு. இதைப்பற்றி எல்லாம் நம்ம வீட்டுப் பாட்டியிடம் சொன்னால் போடா போக்கத்தவனே, உன்னை எல்லாம் அப்படியா வளர்த்தோம், உனக்குத் துணியே போட மாட்டோம், அம்மணமா சுத்திகிட்டு இருந்த பய இன்னிக்கு என்ன பேச்சுப் பேசறாம் பாரு என்கின்றனர், எங்க வீட்டுப்பாட்டிகள்.

குழந்தைகள் வளர வளர பல பிரச்சனைகள் வரும் அதை நாம் அவர்களுக்குப் பக்குவமாக எடுத்துச்சொல்லவேண்டும், நம் குழந்தைகளுக்கு உண்டான தகுதி என்ன வென்று நாம் அறிந்து அவர்களை அதன் படி நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் இது தான் இப்போதைய அட்வைசாக உள்ளது.

எனது பால்ய நண்பன், நான் எப்போது ஊருக்கு சென்றாலும் ஆட்டம் பாட்டம் எல்லாம் இவனோடு தான், ரொம்பக் கஷ்டப்பட்டு இன்று சுயதொழிலில் ஈடுபட்டு நல்ல முறையில் உள்ளவன். இவருடைய குழந்தை சமீபத்தில் அதிகத் தலை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது, நடக்க இயலவில்லை என ஒவ்வொரு பிரச்சனையாக அடுக்கி அழ, எப்போதும் தொழிலையே பார்த்துக் கொண்டு இருந்தவர் பக்கத்தில் உள்ள டாக்டரிடம் காண்பித்து அவர் கொடுக்கும் மறுந்தை சாப்பிட்டாலும் இதே பிரச்சனை.

அம்மா தலை வலிக்குதும்மா, அம்மா தலை இழுத்துப் பிடிக்குதம்மா, அம்மா வயிறு எரியுதும்மா, அப்பா முட்டி காலையே ஊனமுடியவில்லை, நடந்தால் கால் வலி அதிகமாக உள்ளது, படுத்த உடம்பெல்லாம் வலியாக இருக்கிறது என்று குழந்தை அழுது கொண்டே இருந்தால் மருத்தவரிடம் தான் அழைத்துப் போவோம், அவரும் குழந்தைக்கு ஒன்றும் இல்லை என்றால், அப்போது பெற்றோர் படும் பாடுதான் அதிகம்.
 
இந்தக் குழந்தைக்கு அனைத்து டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்து விட்டார்கள் ஆனால் எங்கும் எந்தப் பிரச்சனையுமில்லை, அடுத்த என்ன செய்வது என்று யோசிக்கும் போது தான் கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவரை சந்தித்தோம். அவரும் அனைத்து டெஸ்ட்டையும் பார்த்து விட்டு, இரண்டு நாள்க்குப் பின் சொன்னார்.

குழந்தைக்கு எந்தப் பிரச்சனையுமில்லை அவளின் மனது தான் பிரச்சனை, எதிலும் நாம் தான் முதலிடத்தில் இருக்கவேண்டும் என்று பெற்றோர் சிறிய வயதில் அந்தக் குழந்தையை மற்றக் குழந்தைகளுடன் இணைத்து பேசியதால் வந்த வினை, முதல் இடம் பெற வில்லையா, ஏன், எப்படி என்று யோசித்து யோசித்துத் தலைவலி அதிகமாகிறது கூடவே அனைத்து வலிகளும்.

குழந்தைக்கு என்ன பிடிக்கும் என்ன விளையாடவேண்டும் என்று குழந்தை தான் முடிவெடுக்கவேண்டும், நாம் முடிவெடுக்கக் கூடாது, நமது கட்டாயத்தை ஆசையை, எதிர்பார்ப்பைப் குழந்தை மேல் திணிக்கக்கூடாது என்றார். இன்னும் 2 நாட்கள் சில கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைக்கிறேன் என்றார் மருத்துவர்.

மருத்துவர் சொன்னது நிச்சயம் 100 சதவீத உண்மை அப்பாவுக்கு டாக்டர் படிக்கவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் சூழ்நிலையால் படிக்க இயலாது அதற்காக் குழந்தையைக் கட்டாயப்படுத்துகின்றனர் இன்றைய பெற்றோர் என்றால் நிச்சயம் மறுக்க இயலாது. இதற்காகவே நிறைய பணங்களைப் புடுங்கிக்கொண்டு பிராய்லர் கோழிபோலப் படிக்க வைக்க நிறையக் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.

பெற்றோர்களில் குழந்தையிடம் பேசும் போதும், அவர்களின் ஆசையைக் கேட்கும் போதும் அவர்கள் வழியில் சென்று தான் வளர்த்தவேண்டும், கட்டாயப்படுத்தப் படுத்த குழந்தைகள் மனதால் பாதிக்கப்படும் நாம் தான் அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்...