Thursday, April 29, 2010

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி


நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால் முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

  முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.
முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது.
ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன்   தோற்றமளிக்க   தேரையர்   என்ற   சித்தர்  தான்  எழுதிய 
தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்
முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.
அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

ஒரு நெல்லிக்கனியில் 482.14 (மய்ண்ற் ர்ச் ள்ன்ல்ங்ழ் ர்ஷ்ண்க்ங் க்ண்ள்ம்ன்ற்ஹள்ங்)  என்னும் அதிக சக்தி வாய்ந்த ச்ணற்டிணிதுடிஞீச்ற்ஞு என அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:


நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.


Monday, April 26, 2010

உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்


நாம் தினமும் உண்ணும் பல பொருட்களில் வெந்தயம் இடம் பெற்றிருக்கும். வெந்தயத்தினால் நமது உடலுக்கு பல பயன்கள் உண்டு. கோடை காலங்களில் உடல் சூட்டைத்தணிக்க வெந்தயத்திற்கு முக்கிய இடம் உண்டு. வெந்தயத்தின் மருத்துவ குணங்களை நான் பல புத்தகங்கிளில் படிக்கும் போது ஒவ்வவொன்றிலும் பல நன்மைகள் பற்றி கூறி உள்ளது. நமக்கு வாழ்வில் தேவையான பயன்களை இப்பதிவில் தொகுத்தளித்துள்ளேன்.

வெந்தய விதைகளில் புரதம், மாவுச்சத்து, சர்க்கரை பிசின், வைட்டமின் உலோகச் சத்து, செரிமானப் பொருள்வகை முதலியன அடங்கியுள்ளன. இந்த விதையில் சத்துள்ள அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. செடியின் இலைகளிலும், தண்டுகளிலும், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியன அடங்கியிருக்கின்றன.

உடல் சூடு, மலச்சிக்கலை போக்க

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

வயிற்றுக்கோளாறு நீங்க

ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

அழகுக்கு 

பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும். 

அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.

பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.  

தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும்.   

மேலும் பல பயன்கள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.

நமது அன்றாட உணவின் அங்கமாகவும், நறுமணப் பொருள் என்ற வகையில் உணவு வகைகளில் ஊட்டச்சக்தியையும், சுவையையும் அதிகரிக்கின்றது. நீரிழிவு நோய்க்கு நல்ல பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது.

குளிர்ச்சித் தன்மையளிப்பதால் பெரியம்மை நோய் கண்டவர்க்கு பானமாகவும், உடலுரமுண்டாக்குவதற்கும், ஆண்மை பெருக்குவதற்கும் பயன்படுகிறது.
கூந்தல் தைலத்திலும் வாசனைப் பொருள்களிலும், சாயம் தயாரிக்கவும் பயன்படுகிறது.

ரிக்கெட்ஸ், இரத்த சோகை, நீரிழிவு ஆகிய துன்பந்தரும் நோய்களை குணப்படுத்தும் குணமும், திறனும் இதற்குண்டு. இலைகள் உடலுக்கு குளிர்ச்சியூட்டும். மிதமான பேதி மருந்து, புறவீக்கம், தீக்காயங்கள் இவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. 

வறுத்த வெந்தயப் பொடி மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும்.

பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து வெந்நீரில் குழைத்து உடல், முகம், கை, கால்களால் தடவி வர தோல் பளபளப்பாகும்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
 

Saturday, April 24, 2010

எங்க ஊர் திருவிழா....

நீங்க வெளி நாட்டில் இருக்கலாம், அல்லது வேலை விசயமாக வெளியூரில் இருக்கலாம், பெண்கள் தங்கள் புகுந்த ஊரில் இருக்கலாம், ஆண்களோ பெண்களோ வெளியூருக்கு குடி பெயர்ந்து இருக்கலாம் ஆனால் எல்லாருக்கும் சொந்த ஊர் என கண்டிப்பாக இருக்கும். எனக்கு சொந்த ஊர் பிடிக்காது என சொல்லுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சொந்த ஊரில் அதுவும் கிராமமாக இருந்தால் நிச்சயம் அந்த ஊரில் திருவிழா தான் முக்கிய அங்கம் வகிக்கும். அந்த திருவிழா இப்ப எங்க ஊர்ல ஆரம்பிச்சிருச்சு...

என் சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் பவானி அருகே சித்தார் என்னும் கிராமம் எங்க கிராமத்துல மாரியம்மனுக்கு பூச்சாட்டியாச்சு என எங்கப்பா சொன்னார். நான் படித்து முடித்து வேலைக்கு வந்ததற்கு அப்புறம் கோயில் திருவிழாவை திருவிழா அன்று புதன், வியாழன், வெள்ளி மூன்று நாட்கள் மட்டும் தான் இப்பவெல்லாம் போக முடியுது. எனக்கு ஞாபகம் தெரிந்தில் இருந்து எங்க ஊர் கோயில் கம்பம் நட்டு விட்டால் எங்களுக்கொல்லாம் ஒரே கொண்டாட்டம் தான் எங்க திருவிழா எப்பவும் மே முதல் வாரத்தில் தான் வரும் பள்ளி, கல்லூரி எல்லாம் விடுமுறை நாள் என்பதால் 15 நாளும் எங்களுக்கு கொண்டாட்டமே.

திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான் கம்பம் நடுதல், சாமி ஊர்வலம், முப்போடு, பாரா நடத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை மிக முக்கியமாக கிடா வெட்டுதல், மஞ்சள் நீராடுதல் என 15 நாட்களுக்கு ஒரே ஆட்டம் பாட்டமாக இருக்கும். இது தவிர இரவு நேரங்களில் பட்டிமன்றம், நாடகம், பாட்டுக்கச்சேரி, கரகாட்டம், ஒயிலாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என களை கட்டும் (2 வருடங்களுக்கு முன்பு நீக்ரோ பாய்ஸ் ஆட்டம், திரைப்பட நாட்டிய நிகழ்ச்சி என்ற பெயரில் 3 நாட்களுக்கு குத்தாட்டம் நடை பெறும் இப்ப அதற்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது) கம்பம் நட்டு விட்டால் அசைவ உணவுகள் சாப்பிடமாட்டோம், ஹோட்டலில் சாப்பிட மாட்டோம், எங்கு சென்றாலும் இரவு வீட்டிற்கு வந்து விடுவோம் என்ற ஊர்கட்டுப்பாடு உண்டு.

கம்பத்து ஆட்டம்

மாரியம்மன் கோயிலில் திருவிழாக் காலங்களில் மிக முக்கியமானது அதுவும் இளைஞர்கள் விருப்பப்படுவது. கம்பத்து ஆட்டம் தான். எங்கள் ஊரில் நெம்பர் தாத்தா என்று ஒருவர் இருக்கிறார் அவர் என் நண்பனின் தாத்தாவும் கூட அவர் தான் எங்கள் கம்பத்து ஆட்டத்தின் குரு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் 4 வரிசையாக நின்று கொண்டு தாத்தாவின் சொல்படி ஆடுவோம். 1ம் அடி, 2 ம் அடி, 3ம் அடி என 13 வகையான ஆட்டங்களை எங்களுக்கு அவர் சொல்லிக்கொடுத்தார். இந்த 13 வகையான ஆட்டமும் எனக்கு அத்துப்பிடி. கம்பம் நட்ட முதல் நாள் ஆட்டம் ஆட மாட்டோம் இரண்டாம் நாளில் இருந்து இரவு 8 மணிக்கு ஆரம்பித்தால் 12 மணி வரை ஆட்டம் களை கட்டும். இந்த ஆட்டத்தைக் காண ஊர் மக்கள் எல்லாம் திரண்டு இருப்பார்கள் அதுவும் என் நண்பர்கள் எல்லாம் அவர்களின் தோழிகள் ஆட்டத்தை காண வந்து இருந்தால் ஆட்டம் இன்னும் களை கட்டும்.

கம்பத்து ஆட்டம் ஒவ்வொரு ஊரிற்கும் வேறுபாடு உண்டு. ஒரு சில ஊரில் கம்பத்தை சுற்றி ஆடுவார்கள் எங்கள் ஊரில் கம்பத்தின் முன் தான் ஆடுவோம். கம்பத்து ஆட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஆட்டம் காவடி சிந்து என்னும் ஆட்டம் தான். இந்த ஆட்டத்தை மட்டும் மேளம் அடிப்பவர்களை 3 முறைக்கு மேல் இதே ஆட்டத்தை கேட்டு ஆடுவாம். இந்த ஆட்டம் ஆடும் போது எங்க ஊர் நெம்பர் தாத்தா அவர்கள் இதற்கு தாளம் சொல்லுவார் தகிம்தா தகிம்தா தகிம்தா தந்தனத்தோம் தகிம்தா இன்றும் என் காதில் ஒளிக்கிறது.

கரகாட்டம், ஒயிலாட்டம்

கம்பத்து ஆட்டம 13 நாட்களுக்கு நடக்கும் 13 வது நாள் செவ்வாய் அன்று இரவு காவிரி கரையில் இருந்து சாமி ஊர்வலமாக புறப்பட்டு கரகாட்டம், ஒயிலாட்டம், வான வேடிக்கையும் ஊர்வலம் நடைபெறும். கரகாட்டத்தையும், குறவன் குறத்தி ஆட்டத்தையும் பார்க்க கூட்டம் அலைமோதும். சுமார் 1 மணி நேரத்திற்கு வாணவேடிக்கை நடக்கும் சுற்று வட்டார கிராமங்களில் இருப்பவர்கள் எல்லாம் அங்கு கூடியிருப்பர். அடுத்த நாள் புதன்கிழமை காலை முப்போடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். கம்பம் நட்ட நாள் முதல் பூசாரி கோயிலில் தான் தங்கி இருப்பார் அவர் தான் முப்போடு எடுப்பார் அன்று இரவு பாரா நடக்கும் நிகழ்ச்சி நடக்கும் பாரா நடப்பது என்றால் கோயிலைச்சுற்றி விடியும் வரை நடக்கவேண்டும் இதற்கு பெயர் தான் பாரா நடத்தல்.

திருவிழா நாள்

வியாழக்கிழமை தான் திருவிழா நாள் நானும் என் நண்பர்கள் எல்லாம் வெளியூரில் இருப்பதால் திருவிழா அன்று தான் ஊரிற்கு செல்லோம் அன்று காலை தீர்த்தக்குடம் ஊர்வலம் நடக்கும் அந்த ஊர்வலத்துக்கு முன் ஒரு 3 மணி நேரம் எங்க ஆட்டத்தை பட்டையக்கிளப்புவோம். அன்று தான் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும் அழகு குத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று இரவு ஊரில் நாடகம், பாட்டுகச்சேரி, கூத்து போன்ற எதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெறும்.

மஞ்சள் நீராடல்


வெள்ளிக்கிழமை காலை கம்பத்ைதை எடுத்து ஆற்றில் கரைத்து விடுவர் பின்பு சாமி ஊர்வலத்துடன் மஞ்சள் நீராட்டு விழா நடை பெறும். அன்று ஊரில் போற வர்றவங்க எங்களுக்கு பிடிச்சவங்க என ஆண் பெண் பேதமின்றி எல்லார் மேலேயும் தண்ணீர் ஊற்றுவோம், மஞ்சள் நீர் என்ற பெயரில் சாயம் கலந்து கலக்கி விடுவோம். நண்பர்களை ரோட்டில் போட்டு உருட்டுவோம் அன்றுடன் திருவிழா நிறைவுபெறும்..

இந்த வருடம் வரும் மே 5, 6, 7 தான் திருவிழா நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன் ஊரிற்கு சென்று திருவிழா கொண்டாடா.....

சொர்க்கமே என்றாலும்
அது
நம் ஊரப் போல
வருமா?
..................உண்மையான வரிகள்...

Wednesday, April 21, 2010

இளமையாக வாழ இளநீர் சாப்பிடுங்க....


கோடை வெய்யிலின் தாக்கம் இந்த வருடம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது கோடை வெப்பத்தை போக்க கம்மங்கூழ், மோர் சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கும் என என் முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தேன் அத்துடன் இளநீரையும் சேர்த்துக்கொள்ளலாம். இளநீர் இயற்கை தந்த கொடை என்றும் கூறலாம்.இளநீர் கோடை காலத்தில் மட்டுமல்ல எப்போது சாப்பிடக்கூடிய பொருள்.

இளநீர்:
தென்னைமரத்தின் இளங்காயில் உள்ள நீரைக் குறிக்கும். எனினும், இளந்தேங்காயையும் குறிக்கும். இளந்தேங்காய் மட்டை உரிக்கும் முன் பச்சை நிறத்தில் காணப்படும். சில வகைத் தென்னைமரங்களில் காவிநிறத்தில் காய்கள் காய்க்கும். அவை செவ்விளநீர் எனப்படுகின்றன. புறமட்டையை உரிக்காமல் மட்டையோடு உள்ள இளந்தேங்காயின் நுனியைச் சீவி உள்ளிருக்கும் நீரை உறிஞ்சிக் குடிப்பர். தேங்காய் முற்றாமல் இளசாய் இருப்பதால் அரிவாள் முதலியவற்றால் சீவ இயலும். நீரைப் பருகியவுடன், இளநீர்த் தேங்காயைப் பிளந்து முற்றாது இருக்கும் இளகிய பருப்பை உண்பர். இந்த முற்றாத இளகிய பருப்புக்கு வழுக்கை என்று பெயர். 


இளநீர் மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை உணவாகும். கோடைக்காலத்தில்  வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க இது மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இளநீர் நன்கு முற்றி காய்ந்தவுடன் அதிலிருந்து தேங்காய் எடுக்கப்படுகிறது. காய்ந்த இளநீருக்கு நெற்று என்று பெயர்.

இளம் தேங்காயில் உள்ள சுத்தமான நீர் இளநீர். இது சிறிது பால்கலந்த நீர்போன்ற வெண்மை நிறமுடையது. சிறிது துவர்ப்பாயும், தித்திப்பாயும் இருக்கும். தூய கலப்படமற்ற சத்துகள் நிறைந்த இளநீர் தாகத்தைத் தீர்க்கும். இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். இளநீர் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது. காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும் 30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளன. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும் தசைகளுக்கும் ஒருவிதப் புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டி விடுகின்றன. இதனால்தான் இளநீர் அருந்தியதும் நமக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது.
காலையில் இளநீர் சாப்பிடுவது மிக மிக ஆரோக்கியமான பானமாகும். உடலுக்குச் சத்தும் தந்து ஊக்கமும் தரும் இனிய மருந்து இது. மதுபான அடிமைகள் இளநீருக்கு அடிமையானால் அவர்கள் ஆரோக்கியம் மிக்க மனிதராகத் திகழ்வார்கள். குழந்தைகள் இதை அருந்தினால் ஒடுங்கிப் போகாமல் ஓரளவு சதைப் பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள். இளநீரில் உள்ள சர்க்கரையை உடல் உடனடியாகக் கிரகித்துக் கொள்கிறது.

இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:

உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாதுஉப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.

மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும்.

நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.

சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்..

பெண்களின் மாத விலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கும் இளநீரே மருந்து.

உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.

பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

வயிற்றுப் பொருமல் மந்தம் உணவு செரியாமை பெருங்குடல் வீக்கம் ஈரல் கோளாறு குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும்.

காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.

பித்தக் கோளாறு பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும்.

காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள்.
மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.

மதுபானம் சாப்பிடுபவர்கள் பானத்துடன் இளநீர் மிக்ஸிங்கிற்காக சேர்த்து சாப்பிட்டால் கேஸ் பிரச்சனைகள் வராது, அடுத்த நாள் காலை உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எந்த உடல் உபாதைக்கும் இடமிருக்காது என இளநீரீன் பயன்களை நான் டைப் செய்து கொண்டு இருக்கும்போது என் நண்பன் கூறியது இது.

Tuesday, April 20, 2010

காதலும் கனியும்....

பன்னிரன்டாம் வகுப்பு கடைசித் தேர்வு நடந்து முடிந்து பள்ளியில் மாணவ மாணவிகள் அனைவரும் மீண்டும் எப்ப சந்திப்போம் எங்கு சந்திப்போம் என மகிழ்வுடனும், சோகத்துடனும் பேசிக்கொண்டு இருக்கும் போது கடந்த இரண்டு வருடமாக ஒரு தலையாக இளங்கனியை காதலித்த கண்ணன் அன்று தான் தனது காதலை சொல்ல கனியும் இதைச் சொல்ல இவ்வளவு நாளா? நானும் ஆறு மாதமாக காத்திருக்கிறேன் இன்று தான் சொல்கிறாய் என் மறக்க முடியாத நாள் என அவள் அழக கண்ணனும் அழுது நான் திருமணம் ஒன்று செய்தால் அது உன்னுடன் தான் என இருவரும் சத்தியம் செய்து பிரிந்து சென்று விட்டனர்.
கண்ணனும், இளங்கனியும் ஒரே ஊர் தான். கண்ணன் சாதாரண தேநீர் கடை வைத்திருக்கும் சொக்கம்மாளின் மகன் இளங்கனி அந்த ஊரில் வசதி படைத்தவரான வீராச்சாமியின் மகள். வீராச்சாமி நன்கு படித்தும் விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் விவசாயியாக வலம் வருபவர். சொக்கம்மாளின் தேநீர் கடைக்கு பால் வீராச்சாமி தான் ஊற்றுகிறார்.
தேர்வு முடிவுகள் வந்த உடன் இருவரும் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெற்று பாஸ் ஆகிவிட்டனர். இருவரும் ஒரே கல்லூரியில் சேரலாம் என முடிவு செய்து பல கல்லூரிக்கு விண்ணப்பிக்க இருவருக்கும் அருகில் உள்ள நகரத்தில் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது இருவரும் அங்கே சேர்வது என முடிவெடுக்க முதலில் கண்ணன் அங்கு சேர்ந்தான். கனியின் அப்பா வீராச்சாமி என நீ இன்ஜினியரிங் எல்லாம் படிக்க வேண்டாம் பி.எஸ்.சி படிதால் போதும் என பக்கத்தில் உள்ள மாநகரத்தில் மிகப்பிரபலமான கிறித்துவ மகளிர் கல்லூரியில் சேர்த்ததார். அந்த கல்லூரி பருவம் முழுவதும் இருவரும் கடித்தில் காதலித்தனர். இவள் ஒரு வருடம் முன்பே படிப்பு முடித்து வர இவளுக்கு வரன் பாக்க ஆரம்பித்தனர். கண்ணன் இன்னும் ஒரு வருடம் மட்டும் பொறு எனக்கு கேம்பஸ்ஸில் மும்பையில் வேலை கிடைத்துள்ளது. முடித்ததும் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.
இவளுக்கு வந்த வரக்களை எல்லாம் தானாகவே ஜாதகம் சரியில்லை என தள்ளிப்போனது. கண்ணனும் கல்லூரி முடிந்து மும்பையில் வேலைக்கு நல்ல சம்பளத்தில் சேர்ந்தான். இருவரும் 5 மாதம் கழித்து திருமணம் செய்யலாம் என முடிவெடுத்து காத்திருந்தனர்.

வீராச்சாமி ஏரியாவில் கொஞ்சம் பெரிய ஆள் அவரை எதிர்த்தி திருமணம் செய்வது கொஞ்சம் கஷ்டந்தான் என உணாந்த கண்ணன் மும்பையில் ஒரு வீடு பார்த்து விட்டு அவன் ஊரில் இருந்து மும்பைக்கு ரிட்டன் டிக்கெட் ரெடி செய்து விட்டு ஐந்து நண்பர்களுக்கு மட்டும் முன்னே சொல்லி ஊர் வந்து சேர்ந்தான். அரியர் பரிச்சை இருக்கு என கனியை வரவழைத்து திருமணத்தை நண்பர்கள் முன்னிலையில் பதிவு செய்து விட்டு இருவரும் வீடு திரும்பினர்.

கண்ணனின் பக்கத்து நகரத்தில் இருந்து காலை 5.30க்கு மும்பைக்கு ரயில் ஞாயிறு காலை டிக்கெட் புக்செய்து இருந்தான் சனிக்கிழமை இரவு அவளிடம் பேசும் போது நீ காலை 4 மணிக்கு உன் வீட்டில் இருந்து வாழைத் தோப்பு வழியாக மெயின் ரோட்டுக்கு வந்து விடு நான் அங்கு காத்திருக்கிறேன் என சொல்லிவிட்டான். கனி இரவு முழுவதும் தூங்காமல் வீட்டில் அவளுக்கென்று இருந்த நகையை எதுவும் எடுக்காமல் அவளின் சேமிப்பான 50 ஆயிரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பின் வாசல் வழியாக புறப்பட்டு மெயின் ரோடடை அடைந்தாள் அங்கு கண்ணன் இல்லை தேடிப்பார்க்கும் போது அருகில் இருந்த புதிரில் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்தான் கார் வாடைக்கு எடுத்தால் தெரிந்து விடும் வண்டிய ஸ்டேன்டில் போட்டு விட்டால் நண்பன் எடுத்துக்கொள்வான். என கூறி இருவரும் ஊரில் யார் கண்ணிலும் படாமல் இரயில் நிலையத்தை நோக்கி வந்து வாகனத்தை ஸ்டேன்டில் விட்டு விட்டு வெளியே வந்தனர்.
வீட்டில் பொண்ணைக்காணவில்லை என்று தெரிந்து வீராசாமியும் மனைவியும் வீடு, தோட்டம் எல்லாம் தேடி சொந்த பந்தங்களுக்கு சொல்லி அனுப்பிவிட்டனர். அனைவரும் தேடும் படலம் ஆரம்பித்தனர். எங்கு சென்றாள் யாருடன் சென்றாள் என அவர்களுக்குத் தெரியவில்லை யாரை காதலிக்கிறாள் எனவும் தெரியவில்லை.
ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்து இருக்கும் போது யாரும் பாக்கமல் இருக்கு ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தனர் இன்னும் 15 நிமிடத்தில் சென்று விடலாம் என கனவுடன் இருக்க அப்போது வரும் மும்பை எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதம் என அறிந்த உடன் என்ன செய்வது என்று யோசித்து பஸ் ஏறி அடுத்த ஊருக்குச்சென்று விடலாம் என்று அடுத்த ஊருக்கு சென்றனர்.
இவர்கள் இருவரையும் அந்ந ஊரில் இருந்து மார்க்கெட் வந்தவர்கள் பார்த்து கண்ணனும். இளங்கனியும் தான் போகின்றனர் என ஊறுதி செய்து வீராசாமியிடம் தகவல் தெரிவித்தனர். கண்ணனின் நண்பனையும் அவன் தாய் தகப்பனிடம் வீராசாமியின் உறவினர்கள் விசாரிக்க நண்பன் ஒருவன் உண்மையைச் சொல்லிவிட்டான். இவர்கள் ரயில் நிலையத்திற்கு தேட வர ரயில் இன்னும் போகவில்லை என தெரிந்ததும் நகர் முழுக்க தேட மார்க்கெட்டில் பார்த்தவர்கள் இந்த ஊர் பஸ்ல போரான் என கூறிவிட்டனர்.
பக்கத்து ஊர் பஸ்நிலையத்தில் இறங்கி கண்ணனும், கனியும் டீ குடித்து கொண்டு இருக்கும் போது இவர்களைத் தேடி வாகனம் வருவதைக்கண்டு கண்ணன் அங்கு இருந்து ஒரு ஆட்டோவில் ஏறி அந்த ஊரில் இருக்கும் ஒரு நண்பன் வீட்டிற்கு சென்று அங்கு தங்கினான். அந்ந ரயில் நிலையத்தில் மட்டுமல்ல எல்லா ரயில்நிலையத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டு அங்கு இருந்து வேறு நண்பன் வீடு என நான்கு நாட்களாக மாறி மாறி செல்ல கடைசியில் 5 வது நண்பன் அந்த பொண்ணுக்கு ஒரு வகையில் சொந்தமாகிவிட காட்டிக்கொடுத்து விட்டான். வீராச்சாமியும் அவரது ஆட்களும், கண்ணனின் மாமாவும் வந்து கண்ணணையும், கனியையும் பிரித்து கூட்டிச்சென்றனர்.
6 வருடமாக காதலித்த கண்ணன் இளங்கனியை மறக்க முடியாமல் அவன் ரிஜிஸ்டர் திருமணம் செய்ததை வைத்து அந்த மாவட்ட கோர்ட்டில் ஆட்கொனர்வு மனு தாக்கல் செய்தான். வீராச்சாமி அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கை வைத்து பெண்ணை கடத்தியதாக கண்ணன் மற்றும் அவர்களது நண்பர்கள் மேல் வழக்கு பதிவு செய்து இரு வழக்காக விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணணையில் இளங்கனி கோர்ட்டில் தனது அப்பாவின் மிரட்டலுக்கு பயந்து அவருக்கு சாதகமாக பதில் அளிக்க கண்ணன் கடத்தியதாக நிருபிக்கப்பட்டு கண்ணனுக்கு 5 வருடமும், நண்பர்களுக்கு 3 வருடமும் சிறை தண்டணை கிடைத்தது.
கண்ணன் மேல் முறையீடு செய்தான் ஆனாலும் சிறையில் அடைத்தனர். 2 வருடம் சிறையில் நண்பர்களுடன் இருந்தான் இவர்களது நன்னடத்தை காரணமாக அண்ணா பிறந்த நாளன்று விடுதலை ஆனார்கள்.
இந்த 2 வருமும் இளங்கனி பைத்தியம் பிடித்தது போல் ஆகி வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. வீராச்சாமி பொண்ணை நெருங்கிய உறவினர் வீட்டு தோட்டத்திற்கு அனுப்பி சிகிச்சை அளித்து அவள் சரியாகியதும் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார். இந்நிலையில் கனிக்கு கண்ணன் சிறையில் இருந்து வந்து ஊரில் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் துணையாக இருக்கிறான் எனத் தெரியவந்தது.
இளங்கனிக்கு அவர்களின் சொந்த்தில் இருந்து ஒரு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்து கோயிலில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர். திருமண நாள் அன்று மணப்பெண் அலங்காரம் முடித்து கோவிலுக்கு காரில் அழைத்து சென்றனர் காரில் செல்லும் பொழுது கண்ணன் வீட்டை பார்த்துக்கொண்டே சென்றாள். கோவிலில் அனைவரும் இறங்கி அம்மனை தரிசித்து விட்டு கோவிலை சுற்றி வந்து உட்காருங்க என்று கூறியதும் கோயிலைச்சுற்றிய இளங்கனி கோவிலில் இருந்து அவனது கடையை நோக்கி ஒடினாள் கோவிலுக்கும் கடைக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அவள் பின்னால் அனைவரும் ஓடி வர அவள் கண்ணனின் வீட்டுக்குச் சென்று கண்ணனைக் கட்டி அணைத்து இனி நான் இங்கு தான் இருப்பேன் என அழத் தொடங்கினாள்.
பின்னால் வந்த வீராச்சாமியும் குடும்பத்தினரும் என்ன செய்வது என்று வீட்டு வாசலில் நிற்க ஊரே வேடிக்கை பார்த்தது கண்ணன் வீட்டின் முன் வந்து இப்பவும் நான் சொல்கிறேன் உங்கள் பொண்ணுதான் என் மனைவி இவள் இல்லை எனில் எனக்குத் திருமணம் இல்லை. ஆனால் உங்க இளங்கனி அவள் உங்களுடன் வந்தால் நீங்கள் தாரளமாக கூட்டடிட்டுப்போங்க என கூற. இளங்கனி அவனைவிட்டு வரமாட்டாள் எனத் தெரிந்த வீராசாமி அவள் வாழ்க்கையை அவள் தேடிகிட்டாள் என வீறு நடை போட்டு பின்னோக்கி சென்றார்.

Thursday, April 15, 2010

ஒரு தமிழன் வேஷ்டி அணிந்தால் அது இன்னொரு தமிழனுக்கு கேவலமா?

இந்த வருட தமிழ்புத்தாண்டு அன்று எங்கள் அலுவலகத்தில் ஆண்கள் வேஷ்டி அணிந்தும் பெண்கள் புடவையுடன் வரலாம் என்று அறிவிப்பு வெளியானதுமே எனக்கு ரொம்ப சந்தோசம். எனக்கு பிடித்த உடைகளில் வேஷ்டி ரொம்ப முக்கியமானது. நான் பொதுவாக தமிழர் திருவிழா காலங்களில் வேஷ்டி அணிவது வழக்கம் அதனால் உற்சகத்துடன் வீடு திரும்பி சித்திரைத் திருநாளை எதிர் நோக்கி காத்திருந்தேன்.

சித்திரைத் திருநாள் அன்று காலை எழுந்து கனிகளில் விழித்து வெள்ளை வேஷ்டியில் பளிச்சென்று புறப்பட்டேன். மாடியில் இருந்து கீழே வரும் போது எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் பக்கத்து வீட்டு அத்தையும், மாமாவும் கோயிலுக்கா என்றார்கள் இல்லை அலுவலகத்துக்கு என்றேன். ஆபிஸ்க்கு இப்படியா போறது என கேட்டாங்க சுளீர் என வந்தது கோபம் ஆனா சிரிச்சிகிட்டே வந்து விட்டேன். கீழே வந்து இருசக்கர வாகனத்தை எடுத்து தலைகவசத்தை அணிந்தால் எதிர்வீட்டு நண்பனும் அவனது தங்கையும் என்ன வேஷ்டி கட்டடிட்டு தலைகவசம் என அங்கே ஒரு நக்கல் சிரிப்பு மீண்டும் கோபம் என்ன செய்வது சிரிச்சிகிட்டே வந்து விட்டேன்.

வேஷ்டி கட்டி வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணியக்கூடாதா என்ன? என்ன செய்வது என நான் மீண்டும் சந்தோசத்துடன் அலுவலகம் வந்தேன். அலுவலக லிப்ட்டில் ஏறியதும் அங்கே வந்த நண்பன் ஆகா வேஷ்டியா நல்லாயிருக்கு என சென்று விட்டான். எனது இருக்கை நோக்கி போகும் போது தான் எங்கள் தளத்தில் நான் மட்டுமே வேஷ்டி மற்ற யாரும் கட்டவில்லை. யாரைக்கேட்டாலும் வேஷ்டியா என்று சிரிக்கிறார்கள். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவெனில் காலையில் இருந்து அலுவலகம் வரை என்னை பார்த்து வேஷ்டியா? என சிரித்தவர்கள் அனைவரும் தமிழர்கள்.

ஒரு தமிழ் திருவிழா அன்று ஒரு தமிழன் நமது பாரம்பரிய உடையான வேஷ்டி அணிவது தவறா? என்னிடம் வேஷ்டியா என்று கேட்டவர்களிடம் நான் கேட்ட கேள்வி இதுதான்.

வேஷ்டி தமிழனின் அடையாளம் இன்று இருக்கும் நமது மக்கள் படித்துவிட்டு பெரிய கம்பெனியில் 5 இலக்கத்தில் சம்பளம் வாங்கினால் நீ தமிழன் இல்லையா? அலுவலகத்திற்கு ஏற்ற உடை நாகரிகமான உடை பேண்ட் சர்ட் தான் இல்லை என்று  சொல்லமாட்டேன். நமது திருவிழா நம்ம வீட்டு விசேசங்கள், நம்ம கோயில் பண்டிகை, நம் வீட்டுத்திருமணம் போன்ற நமது விசேசத்திற்கு நமது பாரம்பரிய உடை அணியலாமே இதில் தவறு ஒன்றும் இல்லை என நான் நினைக்கிறேன்.
நான் எப்போதும் எனது வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், நமது பாரம்பரிய திருவிழாக்களுக்கும் வேஷ்டி அணிவது தான் வழக்கம் இதை இன்றும் கடைபிடித்து வருகிறேன் நான் மட்டுமல்ல எங்க ஊர் இளைஞர்கள் எல்லோரும் ஊர் திருவிழாவிற்கு வந்தால் வேஷ்டி அணிந்து கொண்டு கலந்து கொள்வது வழக்கம்.

அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் வேஷ்டி என்பது நமது அடையாளம், இன்று புதிதாக நாம் அணியும் உடையல்ல, நம் அப்பா, தாத்தா என நம் முன்னோர்களின் உடையே இதுதான். இவ்வுடையை தினமும் அணியவேண்டிய அவசியம் இல்லை நமது கலாச்சார திருவிழாக்கள் அன்று அணியலாம் எனறு வலியுறுத்துகிறேன். இவ்வுடையை அணியும் போது நம்மைப்பார்த்து ஏளனம் செய்பவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் உனக்கு அதன் அருமை தெரியவில்லை.

நண்பர்களே நீங்களும் நமது கலாச்சார நிகழ்வுகளில் வேஷ்டி அணிந்து நம் கலாச்சாரத்தை காக்க கைகொடுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

Monday, April 12, 2010

எனக்குப் பிடித்த சினிமாக்கள்-கல்லூரிக்கு முன் (தொடர் பதிவு)


எனக்கு பிடித்த சினிமாக்கள் - கல்லூரிக்கு முன் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த பிரபாகருக்கு நன்றி... எனக்குப்பிடித்த படங்கள் என்றால் எதை சொல்ல சொல்லிக்கொண்டே இருக்கலாம் இதில் ஒரு சின்ன சந்தோசம் கல்லூரிக்கு முன் என்பதில் தான் பள்ளிகளில் படிக்கும் போது நிறைய படங்கள் பார்த்து இருக்கிறறோம் பழைய நினைவுகளை நினைத்து ஒரு பதிவு....

விதிகள்:

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே

2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.

3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)

முதல் மரியாதை:

இப்படம் என் வாழ்வில் மறக்க முடியாத படம் இப்படத்தை எங்கள் ஊர் திறந்தவெளி திரையரங்கமான ஸ்ரீவெங்கடேஸ்வரா தியேட்டரில் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக முழுவதும் பார்த்த படம். இதற்கு முன் நிறைய படங்களுக்கு பார்த்து இருந்தாலும் முழுவதும் பார்த்த படம் இதுதான். இப்படத்தில் வரும் பாடல்களை அப்போது முனு முனுத்தபடி இருப்பேன். அடி ஆத்தாடி என்ற பாடல் காலத்தலர் அழியாத பாடல்களில் ஒன்று என கூறலாம் இன்றும் என் அழைபேசியின் ரிங் டோன் இப்பாடல் தான். இதில் வரும் ஏக்குருவி, சிட்டுக்குருவி, அடியே எவடி, ஏய் எவடிய அவ என்ற பாடல் நான் என் பக்கத்து வீட்டு சிறுசுகளை எல்லாம் அப்போதே கிண்டல் அடிக்க பயன்படுத்திய பாடல்.

16 வயதினிலே:

நானும் ரஜினி ரசிகன் தான் இப்படம் என்று பார்த்தேனே அன்றில் இருந்து இன்று வரை நானும் தலைவரின் ரசிகனே. இந்த படம் எங்க ஊர் திருவிழாவின் போது திரைகட்டி ஒளிபரப்பிய போது முழுவதும் ரசித்து ரசித்து பார்த்த படம். இப்படம் பார்த்த பின் ஊரில் நண்பர்களிடம் ரகளை செய்து இது எப்படி இருக்கு என்று ஒவ்வொருவரிடமும் சொல்லிக்காட்டுவேன். நாங்கள் ஊரில் விடுமுறை நாட்களில் கிணற்றில் குளிக்ச் செல்வோம் அப்போது உயரத்தில் இருந்து தான் அனைவரும் கிணற்றில் குதிப்போம் அப்ப என் நண்பன் சிவா குதிக்கலாமா வேண்டாமா என யோசிக்கும் போது நான் தள்ளிவிட்டு இது எப்படி இருக்கு என சொல்லி எல்லாரும் சிரித்துக்கொண்டு இருக்கும் போது கிணற்றில் இருந்து கூக்குரல் உள்ளே எட்டிப்பார்த்தால் சிவா கீழே விழுகும் போது பயத்தில் காலை நீட்ட அது பம்ப் செட் பைப்பில் பட்டு திரும்பி விழ இவனுக்கு மூக்கு நெற்றி எல்லாம் ரத்த காயம் இதை அவன் அவங்க வீட்டில் சொல்ல அங்கே இருந்து எங்க வீட்டுக்கு சண்டைக்கு வர ஊர்ப்பஞ்சாயத்தில் போய் முடிந்தது இப்பிரச்சனை இது எப்படி இருக்கு.


ஊமை விழிகள்:

இப்படத்தை குமாராபாளையத்தில் உள்ள கெளரி திரையரங்கில் பார்த்த ஞாபகம். இது ஒரு திகில் படமாக அந்த கால கட்டத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படமும் கூட இப்படத்தில் வரும் அந்த திகில் பாட்டியைக்கண்டால் கண்ணை கைகளால் மூடி அந்த ஓட்டையில் பயந்து பயந்து படம் பார்ப்பேன். இதில் வரும் பாடல்களும் சிறப்பாக இருக்கும் படம் பார்க்க பார்க்க பயம் இருந்து கொண்டே இருக்கும்.

அஞ்சலி:

இப்படத்தில் வரும் குழந்தைகள் அனைத்திம் பக்கத்து வீட்டு குழந்தைகள் போலவே இருக்கும். இப்படம் பார்த்த பின் பக்கத்து வீட்டு குழந்தைகளை எல்லாம் சேர்த்துக்கொண்டு அடித்த லூட்டிகள் சொல்லி மாளாது. இதில் அஞ்சலியாக வரும் குழந்தையின் நடிப்பு மிகச்சிறப்பாக இருக்கும், ரகுவரன் ரேவதி இருவரின் நடிப்பு எதாதர்தமாகவும் அழககாவிம் இருக்கும் மணிரத்தினத்தின் முத்திரை பதித்த படைப்புகளில் இதுவும் ஒன்று.

தளபதி:

நட்பை சிறப்பாக கூறிய படங்களில் இதுவும் ஒன்று. ரஜினி ரொம்ப பிடிக்கும் அதிலும் இப்படத்தில் வரும் ராக்கம்மா கையத்தட்டு என்ற பாடல் இன்று கேட்டாலும் ஆடத்தோனும். எனது பள்ளிப்பருவத்தில் நான் அதிக முறை பார்த்த படம் இது தான். கிட்டத்தட்ட 15 முறை பார்த்து இருப்பேன். ரஜினி, மம்முட்டி, ஷோபனா, அரவிந்சாமி ஆகியோர் நடிப்புடன் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யாவும் சிறப்பாக தங்களது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.


வருசம் 16:

குடும்பத்திற்குள் நடக்கும் காதலை அற்புதமாக சொல்லிய படம் கண்ணன் என்ற பாத்திரத்தில் கார்த்திக் நன்றாக செய்து இருப்பார். கார்த்திக் குஷ்புவை கலாய்க்கும் இடங்கள் எல்லாம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் வரும் காதலை பலர் ஆதரிக்க சிலர் எதிர்க்க அற்புதமாக கதையை நகர்த்தி இருப்பார் பாசில். இதில் வரும் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்.

நாயகன்:

கமல் நடிப்பில் முத்திரை பதித்த படங்களில் இதுவும் ஒன்று. கமலின் அற்புதமான நடிப்பும் மணிரத்தினத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்பும் அருமையகா இருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அழகு. க்ளைமேக்ஸ் காட்சியில் கமல் ஒரு சிறப்பான நடிப்பை கொடுத்து இருப்பார். கமலின் இளமைத்தோற்றத்தை அற்புதமாக காட்டப்பட படங்களில் இதுவும் ஒன்று.

வீடு:

பாலு மகேந்திராவின் அற்புதமான படம் நான் பன்னிரென்டாம் வகுப்பு படிக்கும் போது விசிடியில் இப்படம் பார்த்த ஞாபகம் பாலு மகேந்திராவின் அற்புதமான படம். ஒரு சராசரி மனிதன் தன் வாழ்வில் வீடு கட்ட வேண்டும் என்ற லட்சியம் கண்டிப்பாக இருக்கும் அப்படி இருக்கும் மனிதன் வீடு கட்ட வேண்டும் என்று என்னி எவ்வாறு ஒரு வீட்டை கட்டுகிறான் என்பது தான் இப்படம். ஒரு வீடு கட்டி முடிப்பதற்குள் அவன் எவ்வளவு கஷ்டப்படுவான் என்றும் வீடு கட்டும் போது எத்தனை தடைகளை தாண்ட வேண்டி இருக்கும் என்பதை அற்புதமாக விளக்கும் படம்.

அபூர்வ சகோதரர்கள்

இந்த படம் வெளிவந்து கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப்பிறகே இப்படத்ததை நான் பார்த்தேன் அதற்கு முன் இப்படத்தின் கதை வசனத்தை டேப்ரிக்காடர் கிழியும் வரை கேட்டதாக ஞாபகம். இப்படத்தை பார்த்து ரசித்த போது ஒவ்வொரு காட்சிக்கான வசனங்களும் எனக்கு அத்துப்பிடி. இதில் எனக்கு மிகவும் பிடித்த குள்ளக் கமலை இன்றும் தொலைக்காட்சியில் ரசித்து வருகிறேன். இப்படத்தில் வரும் பாடல்களும், குள்ள கமல் வரும் ஒவ்வொரு ப்ரேமும் எனக்கு அத்துப்புடி. இப்படத்திற்கு அப்புறம் கமலின் படங்களை இது வரை நான் மிஸ் பன்னியது இல்லை. அவரின் நடிப்பிற்கும் இப்படமும் ஒர் உதாரணம்.

பாட்ஷா

தலைவர் நடித்த சூப்பர் வெற்றிப்படம் இப்படம் நான் 11ம் வகுப்பு படிக்கும் போது ரீலீஸ் ஆனது. இப்படத்ததை கோபி ஸ்ரீவள்ளி தியேட்டரில் படம் ரீலீஸ் ஆன அன்று பள்ளிக்கு கட் அடித்து விட்டு பள்ளி சீருடையிலேயே என் நண்பர்கள் 25 பேருடன் பார்த்த படம். இப்படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன் என்பது இன்றும் கணக்கில் கொள்ளாது. 25 நாள், 50 ம் நாள், 100 ம் நாளும் இப்படத்தை பார்த்தேன். ரஜினி அவர்கள் மானிக்பாட்ஷாவாக மாறும் இடம் தியேட்டரில் எங்கள் ஆட்டம் களை கட்டும். இப்படத்தின் ஒவ்வொரு வசனங்களும் எனக்கு தெரியும், பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும். ரஜினிக்கு திரையுலகில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது மிகையாகது.

இப்படங்கள் எல்லாம் நான் கல்லூரிக்கு வரும் முன் பார்த்து மனதால் மீண்டும்  மீண்டும் இப்படத்தை பார்க்க தூண்டும் படங்கள். நான் கல்லூரி முடித்து இன்று வரை எனக்குப்பிடித்த படங்கள் இரண்டு பதிவுகள் போடலாம் இப்போது தான் படம் பார்க்கும் ரசனை மிக அதிகமாகி உள்ளது. அதைப்பற்றியான பதிவிற்கு தயாராகி வருகிறேன்.

இப்பதிவு ஒரு தொடர் பதிவு தொடர் பதிவிற்கு யாரை அழைக்காலம் என யோசிக்கும் போது இப்ப எல்லாம் நம் பதிவர்கள் தொடர் பதிவென்றால் தலை தெறிக்க ஒடுகின்றார்கள். என் பதிவை எழுதுவதற்கே நேரம் இல்லை இதில் எங்க நண்பா தொடரை அழைப்பது என்கிறார்கள். இதனால் சக நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் யார் யாருக்கு பதிவு எழுத தலைப்பை யோசித்துக்கொண்டு இருக்கறீர்களோ நீங்கள் உங்களுக்கு பிடித்த சினிமாவைப்பற்றி எழுதுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

Friday, April 9, 2010

அவள் என் தோழி....

அவளும் நானும் பக்கத்து பக்கத்து வீடுதான் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம் அவள் வீட்டில் நான் சாப்பிட அவள் என் வீட்டில் சாப்பிட என இரு குடும்பத்து உறவுகளும் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. மாதம் ஒரு முறை எங்க ஊர் திரையரங்கிற்கு எல்லாரும் செல்வோம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு மினி சுற்றுலா பக்கத்தில் இருக்கும் மேட்டூர் அணை, மதேஸ்வரன் மலை, கோபி, கொடிவேரி, பண்ணாரி அம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரன் கோயில் என எங்கு சென்றாலும் அவளுடன் செல்வதற்குத்தான் எனக்கும் என்னுடன் செல்வதற்கு அவளுக்கும் விருப்பம்.

அவள் வீட்டில் என்ன சாப்பிட செய்தாலும் எனக்கு அவர்கள் அம்மா தருகிறார்களோ இல்லையோ இவள் எனக்காக எடுத்துக் கொண்டு வந்து நான் சாப்பிடுவதை பார்க்கும் போது தான் அவளுக்கு ஏக திருப்தி. அவள் சொந்த ஊர் கன்னியாகுமரி அவள் அப்பா இங்க அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவர்கள் இங்கு குடிவந்து 3 வருடங்கள் ஆகின்றது. 3 வருடம் பக்கத்தில் இருப்பதால் எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பத்தாரும் பக்கத்து நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

நான் தினமும் தூங்கி எழுந்ததும் எப்ப எங்க வீட்டு கதவு திறப்பார்கள் நான் அவளை பார்க்கலாம் என படுக்கையில் படுத்துக்கொண்டே கதவைப் பார்ப்பேன். அப்பா குளித்து முடித்து கடைக்கு போகும் நேரம் காத்துக்கொண்டு இருப்பேன் அப்பா சென்றதும் அவள் வீட்டு வாசலுக்கு வந்து பார்ப்பேன் அப்போது தான் எனக்கு விடியும். ஊர்த்திருவிழா சமயங்களில் அவள் கையை கோர்த்துக்கொண்டு கோயிலைச் சுற்ற தூரி ஆடும் சுகமே தனிதான்.

நாங்கள் இருவரும் இதுவரை சண்டையிட்டதே இல்லை எங்களுக்குள் கோபமும் வாராது. எப்போதும் எங்களுக்குள் சிரிப்புதான். எங்களைப்பார்த்தால் அவள் மாமா மகனுக்கு எப்பவுமே கோபம் தான் வரும். இதனால் அடிக்கடி என்னுடன் சண்டைக்கு வருவான் அந்த மண்டையன் என்ன செய்ய என் அவளுக்காக நான் இதை எல்லாம் யாரிடமும் சொல்ல மாட்டேன்.

அவள் இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை என்று சென்று கொண்டு இருக்கும் தருவாயில் வந்து விழுந்தது இடி அவள் அம்மாவிற்கும் வேலை கன்னியாகுமரியிலேயே கிடைத்து விட்டது என்று. அவள் அப்பாவிற்கு எங்க மாமா மூலமாக அதே ஊருக்கு மாற்றுதல் வாங்கி கொடுத்து விட்டார். அவள் குடும்பத்துடன் பிரிந்து செல்லும் வேளையில் எங்கள் வீட்டில் உள்ளவர்களும் அவர்களும் அழுதனர். அவள் குடும்த்துடன் ஒரு புதன்கிழமையில் ஊருக்கு செல்ல ஆயுத்தம் ஆனார்கள். அன்று காலை நான் அவர்கள் குடும்பத்தில் எல்லாரிடமும் சிரித்து விட்டு அவள் கையைப்பற்றி டாடா சொல்லிவிட்டு வந்த அந்த புதன் கிழமை தான் எனக்கு வாழ்வில் மறக்க முடியாத நாள் ஆம் அன்று தான் நான் முதன் முதலாக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதல் வகுப்புக்கு முதல் நாள் வகுப்பிற்கு சென்ற நாள்.

அதன் பின் அவளை நான் பார்க்கவே இல்லை, கொஞ்ச நாள் அவர்கள் அம்மாவும் அப்பாவும் கடிதம் எழுதுவார்கள் அவள் அம்மா பண்ணாரி மாரியம்மனின் தீவர பக்தை அவர்கள் பண்ணாரி வந்து விட்டு எங்க வீட்டுக்கு வரும் நேரத்தில் நான் விடுதியில் தங்கியிருந்தால் அவளை பார்க்க இயலவில்லை.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப்பின் அவள் அம்மாவும் அப்பாவும் கோயிலுக்கு வந்து விட்டு எங்க வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள் எப்படி இருக்கறீர்கள் என என் அம்மா விசாரிக்கும் போது அவள் அப்பா ரிட்டேர் ஆகிவிட்டார் எனவும் அவள் அம்மாவிற்கு இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது என்று கூறிவிட்டு. மகள் எப்படி இருக்கிறாள் என்று கேட்டதும் கடந்த 2004ம் ஆண்டு வந்த சுனாமியில் இன்ஜினியரிங் மேல் படிப்பு படித்துக்கொண்டு இருந்த அவள் கடலோடு காலமாகிவிட்டாள் என கூறி சோகத்துடன் என்னைப்பற்றியும் விசாரித்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.

இதை என்னிடம் அம்மா சொன்னதும் தூக்கம் கலைந்து துக்கம் நிறைந்தது என் மனது என்ன சொல்லது என் முதல் தோழி என் குழந்தைப் பேச்சை நானும் அவள் குழந்தைப்பேச்சை அவளும் புரியாத அந்த வயதில் கேட்ட என் அவள் இன்று இல்லை இதை நான் கேட்காமல் இருந்திலுருந்தாலும் கூட என்மனது வேதனையில் இருந்திருக்காது.

என் முதல் தோழியை நான் ஞாபகம் அறிந்து பார்த்ததும் இல்லை அவள் பேச்சை கேட்டதும் இல்லை ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவள் நினைவு...

அவள் அவள் தான் என் தோழி இலக்கியா.........

Thursday, April 1, 2010

என்றும் இளமைக்கு கறிவேப்பிலை சாப்பிடுங்க....

நமது தமிழர்களின் வீட்டு சமையலில் கறிவேப்பிலை இல்லாமல் சமையலை பார்ப்பது மிகக்கடினம். நமது உணவுகள் அனைத்திலும் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும். கறிவேப்பிலை மணத்திற்காக பயன்படுத்துவது கிடையாது மணத்திற்காக தான் பயன் படுத்துகிறோம் என்றால் அது மிக தவறு. இயற்கை நமக்களித்த இயற்கை மருத்துவத்திற்கு கறிவேப்பிலை மிக சரியான உதாரணம். நமது முன்னோர்கள் தொட்டு இன்று வரை நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தி வருகிறோம்.
கறிவேப்பிலை இலையாக கையில் இருக்கும் போது அதிக மணம் இருக்காது. பச்சையாக சாப்பிட்டால் கசப்பது போல் இருக்கும் இளம் சூடான எண்ணெயில் போடும் போது தான் அதன் சுவையும், மனமும் அதிகரிக்கும். பல மருத்துவ குணங்களைக் கொண்டது தான் கறிவேப்பிலை.
நிறைய இடங்களில், நிறைய பேர் சாப்பிடும் போது பார்த்திருக்கிறேன் அவர்கள் கறிவேப்பிலையை சாப்பிடுவது கிடையாது எடுத்து இலையின் ஓரத்தில் வைத்து விடுவர் இது தான் இன்றளவும் அனைத்து இடங்களிலும் நடக்கும் உண்மை. இதன் நன்மைகள் முழுவதும் தெரியதாவர்கள் தான் இப்படி செய்கிறார்கள் நிச்சயம் இதன் நன்மை தெரிந்த எவரும் இனி சாப்பிடுவார்கள் என்பது தான் என் கருத்து.
கறிவேப்பிலையைப் பொடி செய்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். சட்னியாக செய்து தினப்படி சாப்பிட மிகவும் நல்லது.

கறிவேப்பிலைச் சட்னி:

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் இதுபோன்று துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.
 
கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்:

கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:
  • இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.
  • கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.
  • இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.
  • தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..
  • சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். 
  • கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
  • எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள். 
  • மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.
  • கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.
  • பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். 
  • கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.
  • குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.
  • வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.
  • கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.
  • கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.