Tuesday, November 30, 2010

இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் - நேசக்கரம் நீட்டுவோம்


உலகம் முழுவதும் இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப் படுகிறது. எனவே, எய்ட்ஸ் பற்றிய பல தகவல்களை இன்றைய தினத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஜூன் 5, 1981அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. ஆண் ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒரு அரிய வகை நிமோனியாவை கண்டறிந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையே எய்ட்ஸ் கண்டறியப்பட்டதற்கான முதல் ஆவணமாகும்.

முதல் எய்ட்ஸ் என்பது ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்று அழைக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை புற்று நோய் என்றும் இது கூறப்பட்டது. 1982ல் தான் இது சி.டி.சியால் எய்ட்ஸ் என பெயரிடப்பட்டது. இதன் பின், 3 ஆண்டுகளில், அதாவது 1984ல் எச்.ஐ.வி. எனப்படும் ஹியூமன் இம்யூனோ டெபிசியன்சி வைரஸ் பிரித்தறியப்பட்டது.
உலகம் முழுவதும் 3 கோடியே 34 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 80 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். எச்.ஐ.வி உள்ளவர்களில் 39 சதவீதம் பேர் பெண்கள்.

தென் மாநிலங்களில் எச்.ஐ.வி., தொற்று குறைந்து வருகிறது என்ற சமீபத்திய உலக சுகாதார நிறுவன அறிக்கை, நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. விழிப்புணர்வு ஒன்றே எச்.ஐ.வி., பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று உலகம் முழுவதும் அறிந்துள்ள நிலையில், இந்தியாவில் அதற்காக எடுத்த முயற்சிகள் பலன் தரத் தொடங்கியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. உலகம் முழுவதுமே, எச்.ஐ.வி., பரவும் வேகத்தில் குறைவு காணப்படுகிறது. ஏறத்தாழ 17 சதவீதம் குறைந்துள்ளது. பிரசவத்தின் போது எடுக்கப்படும் பரிசோதனையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் 54 சதவீதம் குறைந்திருக்கிறது. அதே சமயம், ஆசியாவில் எச்.ஐ.வி., உள்ளவர்களில் பாதிப்பேர் இந்தியாவில் உள்ளனர். ஆகவே இந்தியாவில் எச்.ஐ.வி., தடுப்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
"எய்ட்ஸ் வேக்ஸ்' எனும் தடுப்பு மருந்தும் எச்.ஐ.வி., பரவுவதை 31 சதவீதம் கட்டுப்படுத்துகிறது. இது அடுத்து 100 சதவீதம் எச்.ஐ.வி.,யை தடுக்கும் மருந்து உருவாக அடிப்படையாக அமையலாம். எச்.ஐ.வி., மனித உடலுக்குள் பல்கிப் பெருகும் பல்வேறு கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் அதை செயல்படவிடாமல் தடுப்பதற்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் செயல்பட்டு வருகின்றனர். அது வெற்றி பெறும் வரை, உலகின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக எச்.ஐ.வி., தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
எச்.ஐ.வி உள்ளர் நம்முடன் பழகும் போது கீழ்உள்ள எது நடந்தாலும் நமக்கு நோய் பரவாது..
  • வீட்டில் ஒன்றாகப் பழகுவதன் மூலம்
  • வேலை செய்யும் இடத்தில் ஒன்றாகப் பழகுவதன் மூலம்
  • தட்டு, தம்ளர், ஸ்பூன் அகியவற்றை சேர்த்து உபயோகிப்பதால்
  • உணவு, தண்ணீர் பகிர்ந்து கொள்வதால்
  • அவர்கள் உபயோகிக்கும் கழிவறை, அல்லது குளியல் தெட்டியை பயன்படுத்துவதன் மூலம்
  • முத்தம் இட்டுக் கொண்டால், இரும்பல் மற்றும் தும்பல் தெறித்தது விட்டால்
  • நோய்யினால் பாதிக்கப்பட்டவருடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம், கை குலுக்குவதன் மூலம்
  • நோயாளியைக் கடித்த கொசு, மூட்டைப் பூச்சி உங்களை கடித்துவிட்டால்
  • கண்ணீர், உமிழ் நீர் அல்லது வியர்வை உங்கள் மேல் படுவதால்
  • எய்ட்ஸ் கிருமி உள்ளவரின் சிறுநீர், மலத்தை மிதித்து விட்டால்
கிருமி பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிந்து நாம் அவர்களை வெறுக்காமல் அரவணைத்து செல்வதன் மூலம் அவர்களுக்கு மனதில் நிம்மதி ஏற்படுத்த முடியும்... 


நமக்கு தெரிந்த யாருக்கேனும் இருந்தால் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி நம்மால் ஆன உதவிகளை செய்யலாம்....
எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றியான எனது பதிவுகள்...

Monday, November 29, 2010

பதிவுலகில் இரண்டாம் ஆண்டில் சங்கவி...

நண்பர்களுக்கு வணக்கம்.....

கடந்த வருடம் நவம்பரில் வலைப்பதிவை தொடங்கினேன் முதலில் எனக்கு பிடித்த கவிதைகளையும், கட்டுரைகளையும் தேர்வு செய்து வலைப்பதிவில் பதிந்தேன். அதற்கு பின் முதன் முதலாக எனது அனுபவங்களை சொந்தமாக எழுத ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன்.

வலைப்பதிவில் முதலில் எழுத தொடங்கி முதலில் ஒன்றிரண்டு பின்னூட்டங்கள் வந்தாலும் போக போக எனது பதிவிற்கு நண்பர்கள் வந்து ஊக்கமளிக்க எனது பதிவுகளும் 150யை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் நான் எழுத ஆரம்பித்த அஞ்சறைபெட்டி நண்பர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு காரணம் நண்பர்களாகிய நீங்கள் தான். உங்களின் ஆதராவால் தான் சங்கவி என்ற என் வலைப்பதிவு பதிவர்களிடம் ஒரளவிற்கு தெரியவந்துள்ளது...

வலைப்பதிவு தொடங்கி ஒரு வருடத்தில் எனது ஊக்கமளிப்பவர்களாக 300 பேரும், 76000 ஹிட்ஸ் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்....

என்றும் உங்கள் ஆதரவோடு... 
உங்களில் ஒருவன்........

Thursday, November 25, 2010

பீகார் கற்றுக்கொடுத்த பாடம்

பீகார் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம், சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றால் அனைவரும் எடுத்துக்காட்டாக கூறுவது பீகாரைத்தான், கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என அனைத்தும் நடந்த மாநிலம் என்றால் பீகாரைத்தான் கூறுவோம். இது எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது ஆனால் பீகாரில் அதிகமாக நடக்கிறது. பொருளாதாரம், தொழில், வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் பின்தங்கியே இருந்தது.

இன்று இந்தியாவே திரும்பி பார்க்கிற மாநிலமாக உருவாகிக்கொண்டு இருக்கிறது பீகார். அதற்கு காரணம் தற்போது நடந்த தேர்தல். லாலு, பஸ்வான் ஒரு கூட்டணி, ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பிஜேபி ஒரு கூட்டணி, காங்கிரஸ் தனியாக நின்றது. இம்மும்முனை போட்டியில் யாருக்கு வெற்றி என்று பலத்த போட்டி இருந்தது.

லாலு, பஸ்வான் தனது ஜாதி ஓட்டுக்களையும் குடும்பத்தையும், பணபலத்தையும் நம்பி களம் இறங்கனர், காங்கிரஸ் வளரும் தலைவர் ராகுலின் மக்களை ஈர்க்கும் சக்தி, வித்தியாசமான வியூகம் என புது தெம்போடு அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து பம்பரமாக சுழன்றார். அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து தனி மெஜாரிட்டியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கூறினர். ஜனதா தளமும், பாஜகவும் மக்களுக்கான பல நல்ல திட்டங்களை ஏற்கனவே நிறைவேற்றி உள்ளோம், மேலும் அத்திட்டத்தை செயல்பட முனைவோம் என்று அவர்கள் மக்களுக்கான திட்டத்தை முன்னிறுத்தி களம் இறங்கினர்.

வெற்றி மக்களுக்கான திட்டத்திற்கே இதற்கு முக்கிய காரணம் நிதீஷ்குமார். பீகார் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் நிதீஷ். இவரது வெற்றி ரகசியத்தை ஒரே வரியில் சொல்லி விடலாம். மக்கள் நலனை மட்டுமே மனதில் கொண்டு செயல்பட்டதே அவருடைய வெற்றிக்கு காரணம்.

2005-ம் ஆண்டு முதல்- மந்திரியான நிதீஷ் குமார் பீகாரை எந்தெந்த முறைகளில் முன்னேற்ற வேண்டும் என்று சிந்தித்தார். நாட்டிலேயே பீகார்தான் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. சட்டம்- ஒழுங்கு என்பது அங்கு அறவே கிடையாது. அரசு திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்ல முடியாத நிலைமை இருந்தது. மிக முக்கியமாக சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே இங்கு சரியில்லை  இதை தெரிந்து கொண்ட நிதீஷ்குமார் இக்குறைகளை போக்க முன்னுரிமை எடுத்து செயல்பட்டார்.

இவரது ஆட்சியில் ரவுடிகள், சமூக விரோதிகள் ஒடுக்கப்பட்டனர். சட்டம்- ஒழுங்கு சீராகி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிட செய்தார். குடிநீர் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார். ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் குறையில்லாமல் கிடைக்க உறுதி செய்தார்.

படிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் காலியாக கிடந்த 1 லட்சம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினார். மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வர எளிதாக வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி கிடைக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகளை மேம்படுத்தினார். காலியாக இருந்த டாக்டர் பணியிடங்களை நிரப்பினார்.

நாட்டிலேயே முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். இவரிடம் எந்த அரசியல் பந்தாவும் இல்லை. எப்ப வேண்டுமானலும் யார் வேண்டுமானலும் சந்திக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி இருந்தார் இது மக்களை கவர்ந்த ஒன்று.
இவரின் அற்புத நடவடிக்கையால் பீகார் இன்று பின்தங்கிய நிலையில் இருந்து முன்னேற்றப்பாதை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் இவரது திட்டங்களும் செயல்படுத்தியி விதமும்.

பீகார் மக்களைப் பொறுத்த வரை பணம் கூடிய கூட்டம் இவைகளை எல்லாம் நம்பாமல் அவர்கள் முன்னேற்றத்திற்கு யார் உதவுகிறார்கள் என்று பார்த்து ஓட்டுப்போட்டுள்ளனர். இது பீகாருக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் தான்.

பீகார் வெற்றி அடுத்து வரும் மாநிலங்களுக்கு கிலி ஏற்படுத்து உள்ளது. திட்டம் தீட்டுவது பெரிதல்ல அது எப்படி மக்களை சென்றடைவது என்று பார்க்க வேண்டும். ஏழைகள் வீட்டுக்கு சென்று அவர்களுடன் உணவு அருந்தி தோள் மேல் கை போட்டு சென்றால் பத்தாது அதற்கு பதில் அவர்கள் குடி இருக்கும் வீட்டிற்கு சாலை, தண்ணீர், மின்சார வசதி செய்து கொடுத்தால் ஓட்டு தானாக விழும் என்பதற்கு பீகார் சாட்சி.

அதிகம் படிக்காத மக்களே இந்த அளவிற்கு சிந்தித்து வாக்களித்துள்ளார்கள் என்றால் படித்தவர்களும் சிந்திக்க வேண்டும். யார் நமக்கு நல்ல திட்டங்களை அளித்து அதை சரியாக செயல்படுத்துகிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்க வேண்டும்..

அப்பொழுதுதான் நாமும் நம் நாடும் முன்னேற்றப்பாதையில் செல்லும்... வல்லரசாக இருப்போம் என்ற நம்பிக்கையில்...

அஞ்சறைப்பெட்டி 25.11.2010

 உள்ளுரில் இருந்து உலகம் வரை........

இந்த வாரம் தமிழகம் முழுவதும் பலத்த மழை. அநேகமாக எல்லா ஏரி குளங்களும் நிரம்பி அங்காங்கே ரோட்டில் சென்றவர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் கூட நடந்துள்ளது. நம்ம ஊரில் உள்ள தரைப்பாலங்களை எல்லாம் மாற்ற வேண்டும் அப்போது தான் இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பது குறையும். அடுத்த முறை மழைக்காலத்திற்கு முன் தடுப்பனைகளை அதிகம் ஏற்படுத்தினால் நிறைய தண்ணீரை சேமிக்க முடியும்...

..............................
.................................................................

உத்திரபிரதேசத்தில் முசாபர் நகர் மாவட்டம், லங்க் கிராமத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்த பஞ்சாயத்தார் கூடி, கிராமத்திலுள்ள திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்தனர். மொபைல் போன் இளைஞர்களிடத்தில், குறிப்பாக பெண்களிடத்தில் விரும்பத்தகாத தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே, திருமணமாகாத பெண்கள் காதல் திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று அந்த ஊர் பிரமுகர்கள் கூறி உள்ளனர். பெண்கள் காதல் திருமணம் செய்யக்கூடாது என்பது இங்கு முக்கியமல்ல சாதி தான் இங்கு பிரச்சனை இன்னும் நம் நாட்டில் கீழ் சாதி மேல் சாதி பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. இந்த சட்டம் இயற்றிய அந்த ஊர் பிரமுகர்களை வன்மையாக கண்டிக்கிறேன்...

..............................
..........................................................................

"ஈரானில் பெண்கள் 16 வயதிலும், ஆண்கள் 20 வயதிலும் திருமணம் முடித்து கொள்ள வேண்டும்' என, அந்நாட்டு அதிபர் முகமது அகமதி நிஜாத் வலியுறுத்தியுள்ளார். கடந்த 1979ல், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்ட பின் மக்கள் தொகை அதிகரித்தது. அதையடுத்து அங்கு குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990ல் இருந்து அங்கு மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது.


ஈரான் அதிபர் அகமதி நிஜாத், "குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் என்பது பாவமான செயல். மேற்கில் இருந்து இறக்குமதியான திட்டம்' என்று விமர்சித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர், "நம் நாட்டில் பெண்கள் 16 அல்லது 17 வயதிலும், ஆண்கள் 20 வயதிலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். தற்போது ஆண்கள் 26 வயதிலும், பெண்கள் 24 வயதிலும் மணம் செய்து கொள்கின்றனர். இவ்வளவு தாமதமாக மணம் செய்து கொள்வதற்கு காரணம் எதுவுமில்லை' என்று கூறி உள்ளார்.
..........................................................................................................
மணிக்கு சுமார் 1600 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் காரை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர். இக்கார் தயாரிக்கும் பணியில் ரிச்சர்ட் நோபல் என்பவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணி வருகிற ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. அதில், அதிசக்தி வாய்ந்த ஜெட் என்ஜின் மற்றும் ராக்கெட் பொருத்தப்படுகிறது. மேலும், இதன் பாகங்கள் மிக மெலிதான உலோக கலவையினால் அமைக்கப்பட உள்ளது. மேலும் 4 அலுமினிய சக்கரங்களும் பொருத்தப்பட உள்ளன.
 இக்கார் வருகிற 2012-ம் ஆண்டு பயன்பாட்டில் வரும். அப்போது அதிவேகமாக இயங்கி உலக சாதனை படைக்கும் என விஞ்ஞானி ரிச்சர்ட் நோபல் தெரிவித்துள்ளார்.

நம்ம ஊர் சாலைக்கு 100கிலோ மீட்டர் வேகத்தில் போனாலே கார் சாலைல போக மாட்டங்குது...

................................................................................................

தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல் மிக தீவிரமா இருக்குது. போக்குவரத்து பனிமனை முன்பு எங்க பார்த்தாலும் ப்ளக்ஸ் போர்டு மயம்... யாரு செயிப்பாங்களோ... எல்லா ஓட்டுநரும் நடத்துனரும் ஓட்டு போட போயிட்டா தேர்தல் அன்னிக்கு பஸ் ஓடுமா...

நாட்டு நடப்பு
இந்த வாரம் ஊழல் புகாரில் சிக்கியவர் கர்நாடக முதல்வர்.  இவரும் அனைத்து பேட்டியிலும் நான் குற்றமற்றவன் சட்டப்படி சந்திக்கிறேன் என்கிறார். ஊழல் புகாரில் மாட்டியவர்கள் எல்லாரும் சொல்லும் பேட்டியே இது தான்... யாரும் மனசாட்சி படி பேசுவதில்லை...

பாரளுமன்றம் 12வது நாளாக ஒத்திவைப்பு. ஆக மொத்தம் பாரளுமன்றத்தை கூட்டாம எந்த எம்பிக்கும் சம்பளத்தை கொடுக்காம எல்லாத்தையும் வீட்டுக்கு அனுப்பீட்ட பிரச்சனை இல்லை...

பீகாரில் நடந்த தேர்தலில் நிதீஸ் மீண்டும் வெற்றி... வாழ்த்துக்கள்...


ஒருவர் 5 வருடம் ஆட்சி நடத்தி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி நடத்துவது சாதாரண விசயமல்ல.. இவர் கடந்த 5 வருட ஆட்சி மக்களுக்கு பிடித்து இருந்ததாலேயே வெற்றி பெற்று இருக்கிறார். லாலுவுக்கு மீண்டும் ஆப்பு... காங்கிரசுக்கு பெரிய ஆப்பு...


ராகுலின் பிரச்சாரம் பீகாரில் எடுபடவில்லை இதே மாதிரி தான் தமிழ்நாடும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் தான் முதல்வர் என ராகுல் அறிவித்தாலும் தனித்து நின்றால் பீகார் போல தான் தமிழ்நாடும்.. இங்கு திராவிட கட்சிகளின் முதுகில் ஏறினால் மட்டுமே வெற்றி பெறமுடியும். இது அவர்களுக்கு இப்ப நன்றாக புரிந்து இருக்கும்...

தகவல்
ஜப்பான்காரர்களுக்கு விருப்பமான விளையாட்டுதான் சுமோ மல்யுத்தம். முற்காலத்திலெல்லாம், தோற்றால் மரணம் என்பது சாதாரண நிகழ்வாக இருந்தது. ஜப்பானில் இன்று ஏறத்தாழ 800 சுமோ மல்யுத்த வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களில், மல்யுத்தத்தை நிரந்தரத் தொழிலாகச் செய்பவர்களை ரிகிஷி என்று அழைப்பார்கள். சாம்பியன்கள் யொக்கொஸýனா என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு சுமோ மல்யுத்த வீரனைப் பொறுத்தவரை மிகவும் உடல் பருமனுடன் இருக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது. காரணம், ஒரு சுமோ மல்யுத்த வீரனைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், அவனைத் தரையில் வீழ்த்த வேண்டும். அல்லது கோதாவைவிட்டு வெளியே தூக்கி எறிய வேண்டும். மிக அதிக பருமனுடன் இருப்பவனை இப்படிச் செய்வது சிரமம்தானே! சில சுமோ வீரர்கள் 135 கிலோ கிராம் எடை இருப்பார்கள். கோணிஷிகி எனும் சுமோ வீரர் 252 கிலோ கிராம் எடையுடன் இருந்தார். அது ஒரு சாதனை.

பருமன் அதிகரிப்பதற்கான வழி சாப்பிடுவதுதான். சுமோ வீரர்கள் தினமும் மிக அதிகமாக, அவித்த உணவுகளைச் சாப்பிடுவார்கள். குறிப்பாக, இவற்றில் புரோட்டீன்களும், வைட்டமின்களும் நிறையச் சேர்ந்திருக்கும். வயிற்றையும் தொடைகளையும் பெருக்க வைப்பதற்கான உணவு இது. பெரிய இடையும், மரம்போன்ற கால்களும் சுமோ வீரனுக்கேற்ற உடல் அமைப்பாகும். இப்படிப்பட்ட உடல் அமைப்புடன் இருக்கும்போது வீழ்த்துவதோ தூக்கி எறிவதோ சிரமமாக இருக்கும்.
மொக்கை ஜோக்

மொக்கை   ஒருநாள் மிருக வைத்தியசாலைக்கு சென்றார்.. ஒரு கிராமத்து ஆளிடம் கேட்டார்.. ஏன் இந்த மாட்டுக்கு கொம்பு இல்லே..?

கிராமத்து ஆள் சொன்னார்..
" சில மாடுகளுக்கு கொம்பை அறுத்து விட்டுடுவோம்.. சில மாடுகளுக்கு தீய்த்து விட்டுடுவோம்.. சில மாடுகளுக்கு கொம்பு தானாவே ஒடஞ்சு போயிடும்.. சில மாடுகளுக்கு கொம்பு வளராது.. ஆனா இதுக்கு ஏன் கொம்பு இல்லேன்னா... இது குதிரை... மாடு இல்லே...!!!

..............................
..

நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி…..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….
இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

அறிமுக பதிவர்
சுற்றுலா பற்றியும், காதல் பற்றியும் தனது அனுபவங்களை நிறைய மகிழ்ச்சியுடன் பதிவிடுகிறார் அருண் பிரசாத். சமீபத்தில் தான் பதிவுலகற்கு வந்தாலும் இவரது எழுத்துக்கள் நம் வாழ்வில் நடந்தன போல் இருக்கின்றது. நாம் கல்லூரி காலத்தில் எப்படி சுற்றுலா செல்வோமோ அது போல் இவரது பதிவை படித்த உடன் நமக்கு நிச்சயம் நம் சுற்றுலா அசைபோட வைக்கும்...

http://sutrulavirumbi.blogspot.com/

தத்துவம்
ஏன் காதலை வித்தியாசமாப் பாக்கிறீனம்..அது ஒரு ஒழுக்கமுள்ள உணர்வு..! 

ஒழுக்கம் தப்பினால் அது காதலில்லை..!
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்…
மாறாதய்யா மாறது!
மனமும் குணமும் மாறாது!

                               கண்ணதாசன்...

குறுஞ்செய்தி
பனாரஸ் சேலை - ரூ 10,  நைலான் சேலை ரூ8,  காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.

என்னோட அட்ரஸ் வேனும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க.. இதோ இது தாங்க... 
ஜே. நெப்போலியன், 
சன் ஆப் மார்க்கோபோலோ, 
எம்.சி. இல்லம், மானிட்டர் நகர், 
ஓல்டு மங்க் முதல் கட்டிங், கிங் பிசர் ஏரியா, 
விஸ்கி தாலுகா, ரம் டிஸ்டிரிக்ட், பின்கோடு 6000 5000.
என்னோடு அவள் இருந்திருந்தாள் இளவரசியாக இருந்திருப்பாள் பாவம் இப்போது யாருக்கோ இல்லத்தரசியாக இருக்கிறாள்...

Tuesday, November 23, 2010

பழமொழி 2

ஏற்கனவே பாட்டியின் பழமொழியும் சங்கவியும் என்ற பெயரில் சில பழமொழிகளை தொகுத்து ஒரு பதிவாக்கி இருந்தேன். மீண்டும் சில பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளேன் இப்பதிவில்.

பழமொழியை அனுபவத்தின் குழந்தைகள் என்று சொல்லலாம் தமிழ் இலக்கியத்தில் பழமொழியானது முதுசொல், முதுமொழி, பழஞ்சொல், மூதுரை , சொலவடைஎன்றும் கூறுகின்றனர்.

பழமொழியை கிராமத்தில் இருப்பவர்கள் இன்றும் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் முன் போல் இல்லை இப்போது குறைந்து உள்ளது. பழமொழி அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.

அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது.

நடந்து முடிந்துவிட்ட ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப்போன ஒரு
பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

எந்தவிதமான காரியங்களைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கருத்தைச் செலுத்த வேண்டும். கொண்ட நோக்கத்தை மறந்து விட்டுக் கவனத்தை வேறொன்றில் செலுத்தல் கூடாது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை அப்பொருளோ அவரோ
இல்லாத போதுதான் வெளிப்படும்.

அடாது செய்பவன் படாது படுவான்

தகாத செயல்களைச் செய்பவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெற்றே தீருவர்.
 
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

தன்னிடமுள்ள ஒன்றின் சிறப்பினை உணராமல் பிறிதொன்றின் வெளித்தோற்றத்தில் மயங்கி அதனை உயர்வாகக் கருதுவதால் பயன் கிடையாது.
 
வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும்

வாழ்க்கையில் கவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் உதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

கோத்திரம் அறிந்து பெண் கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு

பொதுவாக இது நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மறுமகளாக்கி கொள்வதற்கும் அல்லது நல்ல குடும்பமா என ஆராய்ந்து பெண் கொடுப்பதற்கும் அடுத்து , தானம் தந்தால் கூட அளவறிந்து பிச்சையிட வேண்டும் என்பதற்காகவும் பொருள் தரும்படி இருக்கிறது.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.

யாரோ ஒரு புண்ணியவான் போன போக்கில் ஐந்தும் பெண் பெற்றால் அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட நாளடைவில் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில் புயல் அடிக்க செய்து விட்டனர். உண்மை  அதுவல்ல,

அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான்,வாங்கவும் மாட்டான் . 

அரை குறையாய் கல்வி கற்றவனால் சந்தையில் எந்த பொருளையும் வணிகம் செய்திட இயலாது. அவனால் எந்த பொருளையும் திறமையாக வாங்கி வரவும் முடியாது. விற்று வரவும் முடியாது. நாம் இந்த பழமொழிக்கு நேரிடையாக உணரும் பொருள் இதுதான்.

குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும் 

ஒரேயொரு வார்த்தை மாறினால் எப்படி தம் வசதிப்படி பழமொழிக்கு விளக்கம் அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு மேற்கண்ட  பழமொழியும் ஒரு சான்று .சிறுமை அடைய நேரிட்டாலும் கூட அதிலும் எதாவது சமாதானத்தை தேடிக் கொள்ளும் மனபாவம் உள்ளவர்களுக்காய் சொல்லப் பட்ட பழமொழியாக இது அறியப்படுகிறது . 

ஆறு கெட நாணல் விடு. ஊரு கெட நூல விடு . 

நேரடியாய் பழமொழியைப் பொருள் கொள்ளப் பார்த்தோமானால் ஆற்றை பாழாக்குவதற்கு நாணல் விட்டும் ஊரைக் கெட்டுப் போக செய்ய நூலை விடு என்பதாகவும் வரும். சில பழமொழிகள் இடம் மாற்றிப் பொருள் கொண்டோமானால்தான் அர்த்தம் விளங்கும்.  இது பற்றி இலக்கணப் பாடத்தில் இடம்மாற்றிப் பொருள்கோள் என்ற தலைப்பில் ஒரு பகுதியே தனியாக இருக்கிறது. 

பழைய இஞ்சியில் காரம் அதிகம்

உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்

சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்

விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்

தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்

போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம் தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது
 

Monday, November 22, 2010

முருங்கைக்கீரையும் உடல்நலமும்..

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ , முருங்கைக்கீரை இவை  அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள  சத்துக்கள் நிறைய...

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.  

முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். 
முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். 
 
மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். 
பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.
முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்: 


முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.


இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.  எனவேதான்,  இக்கீரைக்கு  'விந்து கட்டி'   என்ற
பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.


முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.


முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.


முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம்
முருங்கைக் காய் கை கண்ட மருந்து.


முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. 


முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.




முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.


கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.


முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை, குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப பருகிவர காசநோய் ,கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.


வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.


ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயன்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்...
இத்தனை பயன் உள்ள முருங்கைகீரையை சாப்பிட்டு உடல் நலத்தை பாதுகாக்கவும்...

Sunday, November 21, 2010

ஊரெல்லாம் மழை

10 நாட்களுக்கு முன் பெய்த மழையால் ஊரில் உள்ள ஏரிகளெல்லாம் ஓரளவு நிறைந்து இருந்தான கடந்த இடண்டு நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில்  நல்ல மழை இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளம் அனைத்தும் நிரம்பி தண்ணீர் கடை போகின்றது.

ஏரி என்னும் பாசன திட்டம்

இந்த ஏரிக்கள் எல்லாம் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் கட்டப்பெற்றது. அதற்குபின் அதிக ஏரிக்கள் உருவாக்கவில்லை. இந்த ஏரியை உருவாக்கம் போது குறிப்பிட்ட நீரை சேமித்து வைக்கும் ஏரிகள் இது அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நிலத்தடி நீரை அதிகாக்குவதுடன் விவசாயத்திற்கு மிகுந்த உபயோகமாகிறது. 

அந்த காலத்திலேயே ஏரி அமைத்த உடன் முன்னோர்கள் செய்த அற்புதமான காரியம் ஒரு ஏரியில் நீர் நிரம்பினார் குறிப்பிட்ட தூரத்திற்கு பள்ளம் அமைத்து ஏரியில் கடை போகும் நீரை அடுத்து ஒரு ஏரி உருவாக்கி அதில் நிரப்பி பாசனத்திற்கு நீரை பயன் படுத்தி உள்ளனர். அநேகமாக இந்த ஏரி அமைத்தவர்கள் எல்லாம் பட்டம் வாங்கி இருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். ஏரி என்னும் பாசன திட்டம் அற்புதமானது என்றால் அது மிகையாகது.

இன்று நாம் அநேகமாக படிக்கும் செய்திகளில் முக்கியமானது மழை நீர் ஊருக்குள் புகுந்தது. வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன இப்படித்தான் இதற்க காரணம் யார் என்று பார்த்தால் நாம் தான். 

மழை நீர் வரும் பள்ளத்தில் தண்ணீர் வருவதற்கு மட்டுமின்றி அதை சுற்றியும் குறிப்பிட்ட இடங்களை காலியாக விட்டு இருப்பார்கள் அது பார்ப்பதற்கு ஒரு சின்ன ஆறு போல் தோன்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக முன் பெய்த மழை இப்போது அதிகம் இல்லை இதனால் நம் மக்கள் செய்த வேலை என்ன வென்றால் ஏரி மற்றும் பள்ளத்தில் சில பகுதிகளை ஆக்கரமிப்பு செய்து இதை புறம்போக்கு நிலம் என்று குடிசைகள் அமைத்து விடுகின்றனர்.

மறுபடியும் பருவநிலை காரணமாக மழை பெய்ய ஆரம்பிக்கும் போது தண்ணீர் ஊருக்குள் புகுந்து ஊரை வெள்ளக்காடாக மாற்றுகிறது. இதனால் தண்ணீர் சேமிக்க வழி இன்றி தண்ணீர் ஆற்றில் கலந்து பின் கடலில் கலந்து உபயோகமில்லாமல் போகின்றது.

நேற்று எங்கள் ஊரில் தண்ணீர் கரைபுரண்டு சென்ற போது ஒரு பெரியவர் சொன்னார் பேசாம சினிமாவில் வர்ற மாதிரி இங்க இருந்த பள்ளத்தை காணவில்லை என்று கோர்ட்டுக்கு போக வேண்டியது தான் என்றார். இதைப்பற்றி இனி பேசி என்ன செய்வது. இனி மழை நீரை சேமிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைப்பற்றி பல நல்ல திட்டங்களை உருவாக்கினால் தண்ணீருக்காக அடுத்த மாநிலத்தை கேட்காமலே நம் வேண்டிய நீரை நாமே சேமிக்க முடியும்.

நேற்று எங்க ஊரில் தண்ணீரைப்பார்க்க ஊரே கூடியதில்லாமல் சுற்று வட்டாரத்தில் இருந்தும் மக்கள் ஒரு சுற்றலா போல் தண்ணீரைப் பார்த்து மகிழ்ந்தனர். பக்கத்திலேயே திடீர் கடைகள் முளைத்து நல்ல வியாபாரமும் இருந்ததை பார்க்க முடிந்தது...

 ஏரி நிறைந்து கடை போகம் நீர்...
திடீர் சுற்றுலா தளமாக மாறியதால் வியாபாரம் களை கட்டுகிறது
தண்ணீரில் நடப்பதே சுகம்...
இது மற்றொரு ஏரி இதுவும் நிரம்பி கடை போகிறது...

Thursday, November 18, 2010

அஞ்சறைப்பெட்டி 18.11.2010




எனது கடந்த வாரம் எனது அஞ்சறைப்பெட்டிக்கு ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 டில்லியில் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து 65 பேர் பலியாம். ஆனால் பலி எண்ணிக்கை நிச்யம் அதிகமாகத்தான் இருக்கும். நம் நாடு முழுவதும் இன்று அடுக்குமாடி குடியிருப்பு அதிகரித்து வரும் நேரத்தில் இனி அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களும் புதிதாக வாங்குபவர்களும் நிச்சயம் யோசனை செய்ய வேண்டி இருக்கும். டெல்லியில் மட்டுமல்ல அனைத்து நகரங்களிலும் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை ஆய்வு செய்ய வேண்டும். நகர மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் விழிப்புடன் ஆய்வு செய்ய வேண்டும் இவர்கள் விழிப்புடன் ஆய்வு செய்தால் இனி இந்த மாதிரி விபத்துக்கள் குறையும்... 
அடுக்குமாடி குடியிருப்பு என்னைப்பொறுத்த வரை ஆகாயமும் சொந்தமில்லைபூமியும் சொந்தமில்லை.... 
*************************************************

இந்த முறை ஊருக்கு சென்ற போது கோபி, அத்தாணி வழியாக அந்தியூர் சென்றேன். கோபி அத்தாணி சாலை நான் சிறுவயதில் இருந்து மிகவும் ரசித்த சாலை ரொம்ப நாட்களுக்கு அப்புறம் இப்பதான் பகலில் அந்த சாலையில் பயணித்தேன்.. 

வலைந்து நெளிந்து செல்லும் சாலையில் இருபுறமும் வயல் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என நெற்பயிர்கள் கண்னுக்கு குளிர்ச்சியாகவும், மனதுக்கு அமைதியாகவும் கிட்டத்தட்ட 25 நிமிடத்தில் கடக்க வேண்டிய இடத்தை ரசித்துக்கொண்டே 1 மணி நேரமாக கடந்தேன். 

சாலையில் இருபுறமும் இரும்பு வேலி போட்டு சாலையை அகலப்படுத்தி இருந்தார்கள்.. இயற்கை அழகு எழில் கொஞ்சும் இடம் அது என்றால் மிகையாகாது.
கோபி பக்கம் போனீங்கன்னா ஒரு 20 நிமிடம் அப்படியே கோபி அத்தாணி சாலையில் பயணியுங்கள் ஒரு வித்தியாசமான அனுபவம் காத்திருக்கும்...

*************************************************
 ஈக்களுக்கு பயந்து 5 கிராம மக்கள் ஊரை காலி செய்கிறோம் என்று கூறி உள்ளனர் இது வேறு எங்கும் இல்லிங்க நம்ம ஊர்ல தான் மேட்டூர் மேச்சேரி பக்கத்தில் உள்ள சந்திரமாகடை, பொதியாம்பட்டி, இருசாக்கவுண்டனூர், சொரையனூர், புட்டாரெட்டியூர் என்ற கிராமங்கள் தான். இங்கு பக்கத்தில் கோழிப்பண்ணை நிறைய இருப்பதால் ஈக்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கிறதாம் சாப்பாடு சாப்பிடும் போது சாப்பாட்டுத் தட்டில் ஒரு 100 ஈக்கள் மொய்க்கின்றனவாம்...

ஈக்கள் அதிகம் இருந்தாலே சுகாதாரக் கேடு அதிகமாக இருக்கும். மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்தினான் என்று கேள்வி பட்டு இருக்கிறோம் இனி ஈக்கு பயந்து ஊரைக் காலி பன்னின கதையை சொல்வோம்...

கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இன்னும் பத்து நாட்களில் ஈக்களை அழிக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளாராம் இன்னும் 10 நாள் கழித்து தெரியும் ஈ என்ன ஆச்சுன்னு..

*************************************************
 அமெரிக்காவில் பப்போலோ விங்க் கோழி உற்பத்தி நிறுவனம் வருடந்தோதும் சிக்கன் சாப்பிடும் போட்டியினை நடத்துகிறதாம் இதில் சோன்யா தோமஸ் (Sonya Thomas 43) எனும் பெண் 12 நிமிடங்களில் 181 சிக்கன் இறக்கை பாகங்களை (மொத்தம் 2.2. கிகி எடை) தின்று உலகசாதனை படைத்துள்ளார்.

இவர் அளித்த பேட்டியில் எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருப்பது தான் எனக்கு பிடிக்கும் அப்படித்தான் இந்த போட்டியில் கலந்து கொண்டேன் என்று கூறிஉள்ளார்.. அடிப்பாவி மக்கா இந்த மாதிரி நம்ம ஊர்ல எந்த கோழிப்பண்ணைக்காரரும் நடத்த மாட்டிங்கறாங்களே.. 
 நம்ம ஊர்ல மட்டும் நடந்துச்சுன்னா சாப்பாட்டு ராஜா, ராணி பட்டம் நமக்குத்தான்...
 
ஒலிம்பிக்கில் இந்த போட்டிய சேர்க்கச் சொல்லனும்.... அப்பத்தான் நமக்கு எப்பவும் ஒரு தங்கம் உறுதி..... 
*************************************************

இந்த வாரம் விகடனில் சாருவின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது சிங்கப்பூரைப்பற்றியும், அங்குள்ள உணவுகளைப்பற்றியும் அற்புதமாக கூறியிருந்தார். அந்த ஊர் விலையை விட  நம்ம ஊர் உணவகங்களில் விலை அதிகம் என்பது யோசிக்க வேண்டிய ஒன்று.. டாஸ்மார்க்கில் தான் அரசுக்கு அதிக வருமானம் ஆனால் அவர்கள் நடத்தும் சாக்கனாக்கடை (பார்) பற்றி நச்சுன்னு சொல்லி இருந்தார். ரொம்ப ரசித்தேன் சாருவின் வரிகளை...

*************************************************

106 வயது பாட்டி ஒருவர் கன்னித்தன்மையை இழக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடாத காரணத்தால் உடல் ஆரோக்கியமுடன் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். எடின்பர்க் நகரைச் சேர்ந்தவர் இசா பிளித் (Isa Blyth). இவர் சனிக்கிழமை 106வது பிறந்தநாளை கொண்டாடினார். இதுவரை செக்சில் ஈடுபட்டதே இல்லை என தெரிவித்துள்ளார். முத்தத்தைக்கூட பரிமாறியதில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

செக்சில் ஈடுபடாததால் நான் இன்னமும் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னைப் போல வேறு யாராவது இருக்கிறார்களா என்பது தெரியாது. எனது வாழ்நாளில், காதலிக்க வேண்டும் என்ற எண்ணமோ, செக்சில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமோ வந்ததே இல்லை என இசா தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு பெண்ணைப்பற்றி கேட்க மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. 
************************************************ 
கடந்த வார விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தேன் ஊரில் பயங்கர மழை பெய்து பக்கத்தில் உள்ள அணையான வரட்டுப்பள்ளம் அணையில் ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் ஏரி இரண்டும் நிரம்பிவிட்டன என்று சொன்னார்கள்..
 குடும்ப சகிதமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு சென்றோம் நாங்க சென்ற நேரத்தில் மழை பிடித்தது அணையில் நிரம்பிய தண்ணீரை மட்டும் சில நிமிடங்கள் பார்த்து விட்டு வரும் வழியில் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்றோம். அந்தி மாலை பொழுதில் சிறு தூரலுடன் தண்ணீர் முழுவதும நிரம்பிய ஏரியை மிக ரசித்தேன் அங்கே ரசித்த இடத்தின் புகைப்படம் கீழே... 
 இன்று காலை தான் ஊரில் இருந்து அலைபேசியில் சொன்னார்கள் ஊரில் உள்ள ஏரி எல்லாம் நிறைந்து கடை போகிறது என்று (தண்ணீர் நிரம்பி வழிவதை கடை என்று சொல்வோம்) எங்கள் வீட்டு அருகே தண்ணீர் நிற்கிறதாம் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது இந்த வருடம் தண்ணீர் பிரச்சனை இருக்காது அனைத்து ஏரிகளும் நிரம்பியதால் விவசாயம் செழிப்பாக இருக்கும்.  
நாட்டு நடப்பு

இந்தியாவில் உள்ள சாமனியன்கள் முதல் உலக புகழ் பெற்ற கோடிசுவரன்கள் முதல் அனைவரும் இவ்வாரம் உச்சரித்த பெயர் ஸ்பெக்ட்ரம் ராசா. இவர் பதவி பறிப்பால் 2011 சட்டசபைத் தேர்தலுக்குள் பல மாற்றங்கள் வருமா வராதா இது தான் அரசியல் நிபுணர்களின் முதல் பேச்சு..

கடந்த வாரம் நீயா நானாவில் லஞ்சத்தை பற்றிய விவாதம் நன்றாக இருந்தது. லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். லஞ்சம் கொடுப்பது முதல் குற்றம். ஏன் கொடுக்கிறார்கள் நமக்கு சீக்கிரம் வேலை முடியனும் தினமும் அலுவலத்திற்கு விடுமுறை போட்டு விட்டு நம்ம காரியத்திற்கு நடக்க முடியாது இதனால் லஞ்சம் கொடுக்க முன் வருகிறோம். லஞ்சத்தை சுத்தமாக ஒழிக்க முடியாது அதைக்கட்டுப்படுத்த அரசு அனைத்து துறைகளிலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வழி செய்ய வேண்டும். அதற்கு பல வழிமுறைகளை உருவாக்கினால் குறைக்க முடியும் என்பது என் நம்பிக்கை.
 தகவல்

பொதுவாக உலகில் பெண்களை விட ஆண்கள் விரைவில் மரணம் அடைந்து விடுவது வழக்கம், பெண்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு அவர்களின் மரபணுக்களின் தன்மை தான் காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மனிதனுக்கு முதுமை வருவது ஏன் என்பது குறித்து ஆய்ந்த ஐரோப்பிய நிபுணர்கள் டிஸ்போசபிள் சோமா என்ற கோட்பாட்டை உருவாக்கினர். 

மனித உடல் நிலையற்றது. ஆனால், அதனுள்ளிருக்கும் மரபணுக்கள் நிலையானவை. ஆம். ஒரு மனிதனின் மரபணுக்கள் அவன் சந்ததிகளுக்குக் கடத்தப்படுவதன் மூலம் அவனது மரபணுக்கள் என்றும் நீடித்து இருக்கின்றன எனக் கொள்ளலாம். மனித உடல் என்பது ஒரு கார் போல. அதில் உள்ள மரபணுக்களை சந்ததிகளுக்குக் கொண்டு சேர்ப்பதுதான் அதன் வேலை. வாழ்நாள் ஓட்டத்தில் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் உடல் ஒரு காலகட்டத்தில் வலுவிழந்து அழிகிறது. இது எல்லா உயிரினங்களிலும் உள்ளது தான். ஆனால் மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களிலும் அவற்றின் பெண்கள் மட்டும் நீண்ட நாள் வாழ்கின்றனர். இதற்கு அவர்களின் மரபணுக்களின் தன்மைதான் காரணம் என பேராசிரியர் டாம் கிர்க்வுட் கூறுகிறார்.
 மொக்கை ஜோக்

ஒழுங்கா பீரோ சாவிய குடுத்துடு.. இல்லேண்ணா உன் பொண்டாட்டியை கொன்னுடுவேன்..
பீரோ சாவி என்ன????!!!!.. எதை வேணும்ன்னாலும் எடுத்துக்கோ..
 

ஆனா ஆசை காட்டி மோசம் பண்ணிடாதே.. அந்த பாவம் உன்னை சும்மா விடாது..!

*************************************************
கையில ஊசி குத்துனா ஏன் இரத்தம் வருது...
உங்களுக்கு தெரியுமா
குத்துனது யாருன்னு பார்க்கத்தான் இரத்தம் வருதாம்...


அறிமுக பதிவர்

வலையப்பன் என்ற பெயரில் தேர்தல் ஸ்பெசல்... 2011 சட்டசபைத் தேர்தலுக்காக என்று ஒரு வலைப்பதிவை தொடங்கி அதில் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியைப்பற்றி எழுதிவருகிறார். இவ்வலைப்பூவில் சட்டமன்றத் தொகுதியில் எத்தனை வாக்களர்கள், இதற்கு முன் போட்டியிட்டவர்கள், தற்போதைய உறுப்பினர், தொகுதி மறுசீரமைப்பு, தொகுதியின் எல்லை, இது வரை வெற்றி பெற்றவர்கள், மற்றும் தொகுதி பற்றியான குறிப்புகள் என ஒவ்வொரு தொகுதியைப் பற்றியும் எழுதிவருகிறார்.

2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இவ்வலைப்பதிவு பரபரப்பாக இருக்கும்...
http://electionvalaiyappan.blogspot.com/

தத்துவம்

பணத்தைக் கொண்டு நாயை வாங்கிடலாம் ஆனால்
அன்பைக்கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்...

உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்;
ஆனால் யாராவது ஒருவருக்கு. நீங்களே உலகமாக இருக்கலாம்.

குறுஞ்செய்தி

பிரபல நடிகர்களின் அடுத்த படங்கள் என்னும் தலைப்பில் எனக்கு வந்த குறுஞ்செய்தி..

சுறாவை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் படங்களின் தலைப்பு நெத்திலி, கருவாடு, வஞ்சிரம், திமிக்கலம்...

மங்காத்தாவில் நடித்து வரும் அஜித்தின் அடுத்தடுத்த படத் தலைப்புகள்... மாரியாத்தா, செல்லாத்தா.....

தனுஷ் படிக்காதவனைத் தொடர்ந்து எழுதாததவன், விளங்காதவன்....

ஜீவா எஸ்.எம்.எஸ் படத்தை தொடர்ந்து எம்.எம்.எஸ், மிஸ்ட்கால், டயல்ட் கால்....

விஷால் சத்யம் படத்தை தொடர்ந்து இன்போசிஸ், விப்ரோ...

சிம்பு சுவரைத்தாண்டி வருவாயா, துண்டைத் தாண்டி வருவாயா...

மாதவன் குரு என் ஆளு, கவிதா உன் ஆளு, ரஞ்சிதா சுவாமிஜி ஆளு...

Monday, November 15, 2010

இன்றைய தாம்பத்யம்...



தாம்பத்யம் மனித வாழ்க்கையில் இன்றியமையாதது. காதல், திருமணம், தாம்பத்யம் இவை நம்மால் நமக்காக உருவாக்கப்பட்டது. இதனால் கிடைக்கும் நன்மைகள் நிறைய ஆனால் இரண்டு மனங்கள் இணைந்து புரிந்து கொள்ளும் போது தான் இது உண்மையாகிறது.

தாம்பத்யத்தின் மூலமாக இருவரது உணர்வு, மகிழ்ச்சி, துக்கம் அனைத்தும் பகிரபப்டுகிறது. இருவரும் மனம் விட்டு பேசும் போது தான் தாழ்வு மனப்பான்மை, கோபங்கள், தவறுகள் இவை அனைத்தும் தாம்பத்தயத்தினால் மறந்து மணக்கிறது வாழ்வும் சிறக்கிறது.

தாம்பத்யம் எங்கு முழுமையடையவில்லையோ அங்கு விரிசல் ஆரம்பமாகிறது. இன்றைய வேகமான கால கட்டத்தில் கணவன் மனைவியிடம் தாம்பத்யம் எந்த இடத்தில் உள்ளது என்றால் 75 சதவீதம் பேர் சொல்லும் காரணம் அதற்கு எங்க நேரம்?

இது ஆரோக்கியமான தாம்பத்யமா என்றால் நிச்சயம் இல்லை இவர்களெல்லாம் கடமைக்காக வாழ்பவர்கள்.

இன்றைய நிலையில் பெயர், பணம், புகழைத் தேடி தான் ஓடவேண்டிய நிலையில் இருக்கிறோம் மனம் விட்டு பேச நேரம் இல்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் வேலை அலுப்பு, பொழுது போக்கு மையங்கள், தொலைக்காட்சி, குழந்தைகள் என நேரம் சென்று விடுகின்றது.

நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், உறவினர்கள், உடன் அலுவலகத்தில் பணி புரிபவர்கள் என்று அவர்களைப் பற்றி அறியாமல் இருந்தால் தவறில்லை. ஆனால் தம் வீட்டில் என்ன நடக்கின்றது என்று பல பேருக்கு தெரிவதில்லை. காலையில் பணிக்கு செல்வதும் இரவு வீட்டுக்கு வரும் நேரம் தெரியாமல் தான் இங்கு அநேகம் பேர் உழைக்கின்றனர்.

நம் வீட்டுக்குத்தான் உழைக்கிறார்கள் என்றாலும் குழந்தைகளுடன் விளையாடவும், மனைவியுடன் நேரத்தை செலவழிக்கவும் முடியவில்லை இது போன்ற அருமையான நேரங்கள் என்ன சம்பாரிச்சு செலவு செய்தாலும் கிடைக்காது என்பதை உணர்வதில்லை.

இன்றைய வேகமான கால கட்டத்தில் மனிதன் வாழ்க்கை சக்கரம் போல் ஆகிவிட்டது. எந்த இடத்திலம் நிற்க கூட நேரமில்லை. அவர்கள் விரும்பும் பல நல்ல விசயங்கள் அவர்கள் இழக்கின்றனர். இதில் முக்கியமான ஒன்று தாம்பத்யம். இது கவலையான விசயம் இதற்கு மாற்றுக்கருத்து இல்லை என்றும் கூறலாம்.

இருவரும் வேலைக்குச் செல்வது இன்று சாதாரணம் அப்போது தான் குடும்பம் நடத்த முடியும் இது இன்றைய காலத்தின் கட்டாயம். இருவரும் இரவு பகல் பாராமல் இங்கு உழைப்பது சர்வசாதாரணம். இதன் பலன் பணம், சொகுசான வாழ்க்கை, இன்ப சுற்றலா, வார இறுதியில் பெரிய விடுதியில் உணவு, என்ன வேண்டுமா அது உடனே வாங்கலாம் ஆனால் இது மட்டும் தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. ஆனால் தாம்பத்ய வாழ்க்கை ? எத்தனை செலவு செய்தாலும் தாம்பயத்ய வாழ்க்கைக்கு ஈடாகுமா?

இன்று நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்கு அதிகரித்து வருவதும், திருமணம் ஆன சில மாதங்களிலேயே பிரிவற்கு முக்கிய காரணம் தாம்பத்தியமே என பல ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்க அவரது மனமும், உடலும் உற்சாகமாக இருக்க வேண்டிது மிக அவசியம். மனதிற்கும், உடலுக்கும் உற்சாகமளிக்கும் தாம்பத்யத்தை இன்று பலர் மறந்து விட்டனர் அதற்கு அவர்கள் செர்ல்லும் காரணம் நேரமில்லை. ஆனால் பின்வரும் நாட்களில் நீதிமன்றங்களை நாடும் போது மட்டும் நேரம் இருக்கிறது.நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக நிற்கும் நேரத்தில் மனம் விட்டு பேசியிருந்தால் இன்று பல குடும்பங்கள் இணைந்து இருக்கும்.

பணம், புகழ் என்று வாழ்க்கையில் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருப்பார்கள் அவர்கள் அனைத்தையும் சம்பாரித்து நின்று பார்க்கும் போது பணத்தை தவிர அங்கு வேற ஒன்றும் இருக்காது. இவர்கள் பணம் இருந்தும் நிம்மதியை தேடி மீண்டும் ஓட வேண்டி இருக்கும்.

இருவரும் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் தாம்பத்யம் இல்லாமல், அவர்களுக்கு தெரியமலேயே அவர்களது நம்பிக்கை இழக்கின்றனர். தங்களது நிறை குறை, இன்பம் துன்பம், கோபங்களை தனது துணையுடன் இணைந்து அதற்காக நேரம் ஒதுக்கி துணையுடன் செலவிடுவது தான் நல்ல தாம்பத்யம். நல்ல தாம்பத்யம் தான் குழந்தைகள், செல்வம் என் வீட்டிற்குள் வாழ இயலும். மனித வாழ்க்கைக்கு தாம்பத்யம் அவசியம் அதை தொலைத்து விட்டால் அப்புறம் எதைத் தேடுவது.

Wednesday, November 10, 2010

அஞ்சறைப்பெட்டி 11.11.2010


நண்பர்களுக்கு வணக்கம். இது வரை எனதுவலைப்பதிவிற்கு தாங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி.. இனி ஒரு புது முயற்சியாக வாரம் வாரம் அஞ்சறைப்பெட்டி என்னும் பெயரில் அந்தவார நிகழ்வுகளும் எனது கருத்துக்களும், அந்த வாரத்தில் எனக்கு பிடிச்ச பதிவுகள், பிடித்த ஜோக்குகள் மற்றும் நான் ரசித்த விசயங்கள் என வாரம் வாரம் ஒரு கலவையாக  பதிவை  கொடுக்க உள்ளேன் உங்கள் ஆதரவோடு..... நன்றி....


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சிறுநீரில் அளவுக்கு அதிகமான நைட்ரேட்ஸ், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன. இதனால் இதில் தரமான உரம் தயாரிக்கலாமாம். இதற்காக 90 ஆயிரம் கழிப்றைகள் அமைத்து அதில் சிறுநீரைப் பிடிக்க கேன் பொருத்தி விடுகிறார்களாம். இதன் மூலம் வாரத்திற்கு 200 ரூபாய் சம்பாரிக்கிறார்களாம் இது நம்ம ஊர்ல இல்லிங்க தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் நகரில். 
நினைச்சுபாருங்க நம்ம ஊர்ல சிறுநீரை காசு கொடுத்து வாங்கிக்கிறன்னு விளம்பரம் கொடுத்தா போதும் அடுத்த நாள் விளம்பரம் கொடுத்த வீட்டு முன்பு டேங்கர் லாரி வரிசையாக சிறுநீரோடு நிற்கும்.

..........................................................................................................
ஒபமா இந்தியா வந்து இங்கு நம் பாராளுமன்றத்தில் உரையாடும் போது இந்தியா வளரும் நாடல்ல வளர்ந்த நாடு என்று கூறி நம் வளர்ச்சியை பார்த்து கொஞ்சம் அசந்து விட்டார் என்று தோன்றுகிறது.
ஒபாமாவும் அவரது மனைவியும் நம் இந்திய மாணவ, மாணவிகளுடன் நடனம் ஆடியது வரவேற்கத்தக்கது.
நம் நாட்டு தலைவர்கள் இது போல் இல்லையே என்ற மனவருத்தமும் அவர்களைப் பார்த்து கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது.

..........................................................................................................

ஜல் புயல் ஐஸ் போல் கரைந்து விட்டது. தமிழகத்தை முழுமையாக தாக்கி நம்ம மக்கள் நட்டுள்ள நெற்பயிரெல்லாம் தண்ணீரில் மூழ்கி விடுமோ என்ற பயத்துடன் இருந்தேன் பராவயில்லை புயல் ஜில் என்று முடிந்து விட்டது.

..........................................................................................................

காவிரியில் நாம் தண்ணீர் வேண்டும் என வேண்டுகோள் வைக்கவும் கடிதம் எழுதுவதும் கர்நாடகாவிடம் கேட்பது பிடிக்கவில்லை போலும் வருண பகவானுக்கு கர்நாடகாவில் கொட்டு கொட்டு என்று கொட்டி கிருஸ்ண ராஜசாகர் அனை நிரம்பி வரும் உபரி நீரால் ஒகேனக்கல்லில் பல பாறைகள் மூழ்கி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறதாம் சீக்கிரம் மேட்டூர் அணை நிரம்பி டெல்டா மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கு தண்ணீர் கிடைத்து விடும் என்று சந்தோசம்...
..........................................................................................................

சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு எல்லாம் தமிழக அரசால் மின்அஞ்சல் கொடுக்கப்பட்டுள்ளது ரொம்ப வரவேற்கத்தக்க விசயம். ஆனால் இந்த மின் அஞ்சலை தினமும் அவர்கள் படிப்பார்களா என்றால் சந்தேகத்திற்குரியது தான். அரசு அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் ஓர் உத்தரவு போட வேண்டும் உங்களுக்க வந்த மின்அஞ்சல் எத்தனை அதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது எத்தனை என்று ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

நீங்களும் உங்க சட்டமன்ற உறுப்பினர்களின் மின்அஞ்சலைப் பார்க்க இங்க போங்க http://www.tn.gov.in/telephone/email-MLA.html

நாட்டு நடப்பு
இந்த வருட தீபாவளிக்கு பட்டாசு விற்பனை இருந்ததோ இல்லையோ சரக்கு விற்பனை படுஜோராக நடைபெற்றது அனைத்து ஊர்களிலும். 
தமிழ் நாட்டில் மட்டும் 7434 கடைகளின் மூலம் ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. இந்த தீபாவளிக்கு அரசு நிர்ணயித்த இலக்கு 300 கோடி ஆனால் சரக்கு விற்றதோ 345 கோடி.. அரசு சொல்வதை தட்டாமல் நிறை வேற்றுகிறார்கள் நம் குடிமக்கள்... 
வாழ்க குடிமக்கள்.....

தகவல்

மின்காந்த அலைகளைக் கொண்டு மூளையின் செயல்பாட்டை சீராக்க முடியும் என்பது மருத்துவ ஆராய்ச்சியின் சமீபத்திய கண்டுபிடிப்பு.

மொக்கை ஜோக்

தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கனும்னா என்ன செய்யனும் 

வேற ஒன்னும் இல்ல

கொசு தூங்குனதுக்கு அப்புறம் நீங்க தூங்குங்க...

அறிமுக பதிவர்

குழலும் யாலும் என்ற பெயரில் முரளி என்பவர் எழுதி வருகிறார்   "மரபின் இசை குழல்; நவீனத்தின் இசை யாழ். எனது கவிதையின் திசைகள் இரண்டுமே. என கவிதையாக எழுதி வருகிறார்.
இவர் ஒரு பத்திரிக்கையாளர் தனது கருத்துக்களை  கவிதையாக தொகுத்து வழங்கி வருகிறார். இவருடைய கவிதைகள் சமூகம் சார்ந்த விசயமாகவும் அரசியல் கலந்தும் இருக்கும்.
இவரது கவிதைகளை நிறைய ரசித்துள்ளேன் நீங்களும் ரசியுங்களேன்.... http://kuzhalumyazhum.blogspot.com/

தத்துவம்

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்.... பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்..


Monday, November 8, 2010

காமக்கொடூரன் என்கவுன்டர்.. காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

போன வாரத்தில் நம் நாட்டை உலுக்கிய சம்பவம் கோவையில் நடந்தது. குழந்தைகளை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்தான் மோகன்ராஜ் என்னும் காமக்கொடூரன் அதைப்பற்றி நம் பதிவர்கள் நிறைய பதிவுகளை எழுதி இருந்தோம் நானும் காமக்கொடூரன்களை என்ன செய்யலாம் எனற தலைப்பில் எழுதியிருந்தேன். அப்பதிவை படித்தவர்கள் அனைவரும் அவர்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

கண்டனம் செய்ததுடன் நிற்காமல் அவர்களை உயிருடன் விடக்கூடாது என்று தான் நிறைய பேர் சொல்லி இருந்தார்கள். ஆனால் நம் நாட்டுச்சட்டத்தில் அவர்களை கோர்ட்டில் நிறுத்தி கோர்ட் அளிக்கும் தண்டனை வருவதற்கு சுமார் 1 வருடம் ஆகும் அதற்குள் நாம் மறந்து விடுவோம் என்று எழுதியிருந்தேன்.

நாம் அந்த சம்பத்தை மறந்து தீபாவளி சந்தோசமாக கொண்டாடி தீபாவளி சந்தோசத்தில் இருந்து மீள்வதற்குள் தமிழக காவல்துறையால் அடுத்த சந்தோசமான நிகழ்வு  காமக்கொடூரன் மோகன்ராஜ் என்கவுண்டர். 

கோவையில் நடந்த சம்பத்தால் அனைவரும் மனவேதனை அடைந்தனர் என்றால் அது மிகையாகது அத்தனை பேரும் இன்று அவன் என்கவுண்டர் என்று அறிந்தவுடன் மிக்க மகிழ்ச்சி கொள்வர். இனி மேல் குழந்தைகளை கடத்துபவர்களை பிடிச்சு என்கவுண்டர் செய்யனும் அப்பத்தான் எவனுக்கும் கடத்தலாம் என்று கனவு கூட வராது.

இந்த என்கவுண்டரை நடத்திய தமிழக  காவல் துறையினருக்கும், கோவை கமிசனர் சைலேந்தர் பாபு அவர்களுக்கும், இச்சம்பவத்தில் கொலையாளியை பிடிக்கவும், என்கவுண்டர் செய்யவும் உதவிய அனைத்து காவல் துறை நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

Thursday, November 4, 2010

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

.அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து வெடி வெடித்து தொலைக்காட்சி பார்க்காமல் குடும்பத்துடன் கொண்டாடுங்கள் தீபாவளிய...

முன் இரவில் புத்தாடைஎடுத்து,
உணர்ச்சிப்பெருக்கால்
உற்றார் உறவினரிடம் காட்டி,
மனதுக்குள் சொல்லிக்கொள்வோம் ,
நாளை திபாவளி.

கனவிலும் புத்தாடை உடுத்தி,
இஷ்டப்படி பலகாரம் உன்டு,
கண்டபடி பட்டாசு வெடித்து,
கனவெல்லாம் ஒத்திகைபார்த்து,
அந்த நடுநிசியிலம் சொல்லிக்கொள்வோம்,
நாளை தீபாவளி.

அந்த விடியற்காலை வேளையிலே,
எண்ணி எண்ணி இரவை விரட்டி ,
விழித்தஉடன் மனதில் உற்சாகமாய்,
சொல்லிக்கொள்வோம்
இன்று தீபாவளி.

தலைக்கு எண்ணெய் தேய்த்து,
இளம் குளிரில் வெந்நீரில் தலைகுளித்து,
மெல்லிய தவிப்பில் சொல்லிக்கொள்வோம்,
இன்று தீபாவளி.

புத்தாடை அணிந்துகொண்டு,
புதுப்போலிவாய் வந்துநின்று,
கண்ணாடியில் ஒத்திகை பார்த்து
புன்னகையில் சொல்லிக்கொள்வோம்,
இன்று தீபாவளி.

பட்டாசு பல வெடிக்க,
பலகாரம் சில கிடைக்க,
மூக்கு முட்ட கறி கிடைக்க
பரவசத்தில் சொல்லிக்கொள்வோம்,
இன்று தீபாவளி.

வீதியெங்கும் வீடுகளில்,
விதவிதமாய் விளக்கெரிய,
விளையாடாய் சொல்லிக்கொள்வோம்,
இன்று தீபாவளி.

பட்டாசும் தீர்ந்துபோக,
மத்தாப்பும் தீர்ந்துபோக,
பதைபதைப்பில் சொல்லிக்கொள்வோம்,
முடிந்தது தீபாவளி.

தீப ஒளிக்கு முடிவு ஏது
தீப ஒளி போல்
அணைய அணைய பிரகாசித்து
வாழ்வில் இன்ப துன்பங்களிலும்
பிரகாசிப்போம்...

என் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்...



நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..