Thursday, June 17, 2010

"அரசு மருத்துவமனையும் அதிரடி டாக்டரும்"

புருஷோத்தம் விஜயகுமார் இந்த பேரைக்கேட்டால் இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் அலறுகின்றன. அனைத்து பத்திரிக்கைகளிலும் இவரின் செயல் இன்று பிரபலமாகிக்கொண்டு இருக்கின்றது. இவர் தான் இன்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை கூடுதல் இயக்குநர்.

இவர் செய்வது எல்லாம் இவருடன் 2 கண்காணிப்பாளர்கள், 8 உதவியாளர்கள் என்று இன்று தமிழகம் முழுவதும் முன் அறிவிப்பின்றி இ.எஸ்.ஐ மற்றும் அரசு மருத்துவமனைக்கு மாறு வேடத்தில் சென்று அங்கு நடப்பவற்றை பொறுமையுடன் கவனித்து தவறு செய்யும் அதிகாரிகளை உடனே சஸ்பெண்ட் செய்வது அங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வைப்பது தான் இவரின் தனித்துவம்.

இன்று அரசு மருத்துவமனைகள் எந்த அளவிற்கு இருக்கின்றது என்று நமக்கு நன்றாகவே தெரியும் இவரைப்பற்றிய செய்திகளை படித்த உடன் ஒர் இனம் புரியாத சந்தோசம் நமக்கு. ஒரு அருமையான அதிகாரி கிடைத்து இருக்கிறார் நம் மருத்துவ துறைக்கு என்று. இவர் ஓர் ஊரிற்கு சென்று அங்கு ரெய்டு நடத்தி வரும் ஏழை தாய்மார்களுக்கு நல்ல சிகிச்சை கிடைத்தால் அவர்களின் சந்தோசம் எவ்வளவு கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று. இந்த மாதிரி அதிகாரிகளால் உயிர் போகக்கிடந்த ஒருவர் பிழைத்தால் அதை விட மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை.

இந்த மருத்துவரைப்பற்றியான செய்தியை நான் ஜீனியர் விகடனில் படித்தேன் உங்கள் பார்வைக்கும்...

பர்தா, அல்லது லுங்கி, சட்டை... இதுதான் நாமக்கார டாக்டரின் சர்ப்ரைஸ் யூனி ஃபார்ம்! சில நாட்களுக்கு முன்பு, பொள்ளாச்சி ஆஸ்பத்திரியில் பர்தா அணிந்தபடி சென்றார் இந்த நாமக்காரர். வெளி நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டு வழங்கும் இடத்தில் தலைக்கு 10 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுப்பதைப் பார்த்து அதிர்ந்தார். காயத்துக்குக் கட்டுக் கட்ட பணம் வசூலிப்பதையும் நேரில் பார்த்தார். ஒரு நோயாளி ஆஸ்பத்திரிக்கு வர... ஊழியர் ஒருவரே டாக்டர் ரேஞ்சுக்கு நர்ஸைப் பார்த்து, ''இவருக்கு இன்ன ஊசி போடும்மா...'' என்று மருந்து பேரைச் சொல்லி உத்தரவு போட, நர்ஸ§ம் அந்த ஊசியைக் கூலாகப் போட்டு அனுப்பினார். இந்த மாதிரி பல பகீர் காட்சிகளைக் கண்டு டென்ஷனான நாமக்காரர், படக்கென்று பர்தா வேஷத்தைக் கலைத்தார். தமிழக இ.எஸ்.ஐ. மருத்துவப் பிரிவின் இயக்குநரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை கூடுதல் இயக்குநருமான புருஷோத்தம் விஜயகுமார்தான் அந்த மாறுவேட டாக்டர்! அந்த ஆஸ்பத்திரியில் லஞ்சம் வாங்கிய ஆறு பேர் அந்த ஸ்பாட்டிலேயே சஸ்பெண்ட்! மற்ற சிலருக்கு கடும் எச்சரிக்கை!

கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் மாறுவேடத்தில் புகுந்து சாட்டையைச் சுழற்றி வருகிறார் விஜயகுமார்.
இவரது அதிரடி நடவடிக்கைகளால், மருத்துவத் துறையின் பல்வேறு சங்கத்தினர் அதிருப்திதெரிவிக்க... அவர்களைச் சமாதானப்படுத்தி, விஜயகுமாரைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தும்படி பச்சைக் கொடி காட்டுகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

ஜூன் 10-ம் தேதி மேட்டூரில் ஆய்வில் ஈடுபட்டிருந்த விஜயகுமாரிடம், ''எப்படி வந்தது இந்த மாறுவேட ஆக்ஷன் ஐடியா?'' என்று நாம் கேட்க... ''கடலூரில் ஒரு பெண் அபார்ஷன் ஆகிற நிலைமையில் வலியால் துடித்தார். வயிற்றில் ஸ்கேன் எடுத்துவரச் சொன்னார்கள். ஒரு வீல் சேர்கூட இல்லை. கதறித் துடித்தவர், தவறி கீழே விழுந்து விட்டார். வலி பொறுக்க முடியாமல் தாயாரின் மடியில் புரண்டு அழுதார். இந்தக் காட்சியை ஓரமாக நின்று பார்த்த நான், பொறுமை இழந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன். கோத்தகிரியில் மயக்கவியல் டாக்டர் ஒருவர், அங்கு உள்ள நர்ஸ§க்குப் பிரசவம் பார்த்தார். 10 மணி நேரமாகியும் பிரசவம் நடக்கவில்லை. பிறகு, பிரசவ டாக்டரை அழைத்து வருகிறார். குழந்தை இறந்தே பிறக்கிறது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்காமல் எப்படி விடுவது? குடியாத்தத்தில் மாலை நேரத்தில் தனது ஓய்வறையில் டிரிப் போட்டு பணம் வசூலித்தவர் மீது நடவடிக்கை எடுத்தேன்...

புகார் வந்து பல விஷயங்களில் நடவடிக்கை எடுக்கிறேன். பல இடங்களில் புகார்களை சரிபார்ப்பதற்கு நேரிலேயே போக வேண்டியிருக்கிறது. அப்போது மாறுவேடம் உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு மருத்துவரையும், பணியாளரையும் நான் அன்னை தெரசாவாகப் பார்க்கிறேன். ஏழை மக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க இப்போது உள்ள அரசாங்கம் தேவையான கருவிகள், மருந்துகள் அனைத்தையும் வாரி வழங்குகின்றன. அதை எல்லாம் ஏழை மக்களுக்குக் கொண்டுசெல்லும் பாலமாகச் செயல்பட வேண்டியவர்கள் மருத்துவத் துறையினர்தான். அவர்களில் ஒருசிலர் தவறாக நடப்பதால், எவ்வளவு ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள்! நடவடிக்கைகளுக்குப் பிறகாவது, மருத்துவனைகள் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்!'' என்ற விஜயகுமாரை இடைமறித்து,

''நீங்கள் பார்த்த மருத்துவமனைகளிலேயே உங்களை பிரமிக்க வைத்தது எது?'' என்றோம். ''குமரி மாவட்டத்தில் உள்ள சின்ன ஊரான குழிபிறையில் இயங்கும் ஆஸ்பத்திரி... நெஞ்சு வலிப்ப தாகச் சொல்லிக்கொண்டு கிராமத்தான் போல நுழைந் தேன். பலவித பரிசோதனைகள் செய்து, ஆம்புலன்ஸ் வைத்து வெளியூருக்குச் சிகிச்சைக்காக அனுப்பும் வரை அக்கறை யாகக் கவனித்தார் அங்கு உள்ள பெண் மருத்துவர் ஒருவர். அதேபோல், மேட்டூர் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த சமையல்காரப் பெண்மணி விஜயா, நான் பலவித கேள்விகள் எழுப்பியபோதும் ரொம்பவும் சின்ஸியராகத் தெரிந்தார். அவருக்கு மனமார பாராட்டுச் சான்றிதழ் தந்துவிட்டு வந்தேன்!'' என்றார்.
'
'உங்களைப் பாதித்த விஷயம்?'' எனக் கேட்டபோது,
''ஒருமுறை பொங்கல் பரிசு பார்சல் என்கிற பெயரில் எனக்கு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தேன். மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள்... அந்தக் கவருக்குள் மலம் வைக்கப்பட்டிருந்தது. என்னால் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவர்தான் அனுப்பியிருக்க வேண்டும். இது மட்டுமா? என்னைப்பற்றி எத்தனையோ மொட்டைக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். நான் கடவுளை நம்புகிறவன். அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, தவறு செய்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து போகிறேன்..!'' என்றார் புருஷோத்தம் விஜயகுமார்!

நன்றி ஜீனியர் விகடன்:

இவர் மேல் பல புகார் கூறினாலும் பார்சல் அனுப்பினாலும் இவரின் பணியை சிறப்பாக செய்த புருஷோத்தம் விஜயகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. இவரின் பணியை அறிந்து நீங்கள் மேலும் பல மருத்துவமனைகளில் ஆய்வு நடத்துங்கள் என்று பச்சைகொடி காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கும் வாழ்த்துக்கள்...

புருஷோத்தம் விஜயகுமார் அவர்களின் இ-மெயில் கிடைத்தால் அவருக்கு இப்பதிவை அனுப்புவது உடன் வாழ்த்தும் சொல்வோம்...யாருக்காவது கிடைத்தால் அனுப்புங்க....

இந்த நேர்மையான அதிகாரியை பற்றி நான் படித்து அறிந்ததை உங்களிடம் பகிர்கிறேன்... நீங்களும் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்.....

27 comments:

  1. இந்த நேர்மையான அதிகாரியை பற்றி நான் படித்து அறிந்ததை உங்களிடம் பகிர்கிறேன்... நீங்களும் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்.....

    .... Salute to புருஷோத்தம் விஜயகுமார் sir.
    இப்படி இன்னும் நிறைய பேர் முன் வரணும்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நானும் படித்தேன் சஙகவி...இவர் போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் கொஞசமாவது மழை பெய்கிறது. அரசு கொடுக்கும் இலவச உதவிகளை நடுவில் பறிக்கும் பூசாரிகளுக்கு இவர் இன்னும் பாடம் கற்பிக்கவேண்டும்...அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. மிக சந்தோசம்!! தமிழ் நாட்டில் இப்படியும் ஒரு அதிகாரியா!!! இவரை பார்த்து மற்ற அதிகாரிகளும் திருந்துங்கள் !! இல்லையேல் வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் உறங்குங்கள் ....!!!!

    ReplyDelete
  4. மகிழ்ச்சியாக இருக்கிறது. லட்சத்தில் ஒருவர்...

    ReplyDelete
  5. நல்ல பதிவு..

    என்ன சார் அவரோட போட்டோ போடாம விட்டுட்டீங்க.

    ReplyDelete
  6. கலைக்டர் சகாயம்
    இந்த டாக்டர்

    கொஞ்சம் நம்பிக்கை பிறக்குது!

    ReplyDelete
  7. முன்னமே செய்தித்தாள்களில் இவரைப்பற்றி படித்தேன்.. மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது பணி தொடரவேண்டும்...

    நன்றி பகிர்வுக்கு...

    ReplyDelete
  8. இப்படியும் எங்கேயோ ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் சங்கவி.நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  9. மனிதருள் மாணிக்கம்..

    ReplyDelete
  10. தேவையான ஒரு பகிர்வு சங்கமேஸ்

    .....

    நன்றி

    ReplyDelete
  11. Please Don't put his E-mail id
    (If available) in Web and Don't Disturb him. by Anna-நீ

    ReplyDelete
  12. good post, thank you.
    i try to get and send his email or cell number to you.
    i do not want to show my identity now. there is no special reason to hide my identity other than i know little bit the honest man.

    ReplyDelete
  13. HATS OFF to him.. Please ask him to visit salem GH.

    ReplyDelete
  14. நல்ல பகிர்வு.
    இந்த மாதிரி அதிகாரிகள், அனைத்து துறைகளிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.
    நன்றி.

    ReplyDelete
  15. வாங்க எல்.கே.

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி... குட்டிப்பையன் நலம்....

    ReplyDelete
  16. வாங்க சித்ரா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  17. வாங்க வெறும் பய....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  18. வாங்க அருண்...

    எனக்கும் நம்பிக்கை பிறக்கிறது...

    ReplyDelete
  19. வாங்க க.பாலாசி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  20. வாங்க ஹேமா...

    ஆமாங்க ஒரு சிலர் இருக்கறதால தான் கொஞ்சம் நாடு நன்றாக இருக்கின்றது...

    ReplyDelete
  21. வாங்க பிரேமா மகள்...

    நிச்சயம் மனிதருள் மாணிக்கம் தான்...

    ReplyDelete
  22. வாங்க கதிர்...

    அவசியம் தேவையான பதிவுதான் சரியாச்சொன்னீங்க கதிர்....

    ReplyDelete
  23. வாங்க அனானிம்ஸ்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  24. வாங்க அமைதி அப்பா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  25. மருத்துவர் புருஷோத்தமன் அவர்களே இன்னும் ஒரு நூறாண்டு இரும் என்று உங்களை வாழ்த்தி ஆச்சார்யனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  26. மருத்துவர்கள் அனைவரும் இவரைப் போலிருந்தால்.. நம் நாட்டில் எந்த நோய் வந்தாலும் பயப்பட தேவையில்லை.. இதை பார்த்தாவது மற்றத்துறைகளும் மாற வாய்ப்பு நிறைய உள்ளது.. இந்த பதிவை பதித்தமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்.... சங்கவி

    ReplyDelete