Monday, November 14, 2011

அதிகரித்துவரும் சர்க்கரை நோயாளிகள்...


புதிய மருத்துவ வணிகத்துக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை மாற்றிக்கொண்டிருக்கிறது சர்க்கரை நோய்! இந்திய மருத்துவ ஆய்வுக் கழகமும் இந்தியா டயாபெடிக்ஸ் அமைப்பும் இணைந்து நடத்திய மாதிரி ஆய்வின்படி இந்தியாவில் நிகழாண்டில் 6.2 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். அடுத்து சர்க்கரை நோய்க்கு இலக்காகக்கூடிய எல்லைக்கோட்டில் நிற்போர் 7.7 கோடி பேர்.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி உலகம் முழுவதும் 220 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். இவர்களில் 50.8 மில்லியன் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.இந்தப் புள்ளிவிவரங்கள் முழுமையானவை அல்ல. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் எடுத்த மாதிரிச் சான்றுகள் அடிப்படையில் மொத்த மக்கள்தொகைக்கும் பொருத்திப் பார்க்கும் முறையைக் கொண்டவை. இதில் மிகைப்படுத்தல் தவிர்க்க முடியாதது. அதற்காக இவை முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. 

இந்தியா என்றாலே மக்கள் தொகை அதிகம், விழிப்புணர்வு குறைவு என்பதால், கொஞ்சம் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்வதென்பது, இத்தகைய ஆய்வுகளில் அவர்களாகவே அனுமதி எடுத்துக்கொள்கிற விஷயமாக இருக்கின்றது. 

இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் இவற்றின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது உண்மை. இதற்கு அடிப்படைக் காரணம் இந்தியர்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. உணவுப்பழக்கம் முன்புபோல இல்லை. 

மனஅழுத்தமும், மனச்சோர்வும் நடுத்தர மக்களிடம் குடிகொண்டுவிட்ட நோய்களாகவே மாறிவிட்டன. இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாகப் பெருகி வருவதைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருத்துவமனைகள் வரிந்துகட்டி நிற்கும் அதேநேரத்தில், வெளிநாட்டு மருத்துவமனைகளும் இந்திய மருத்துவமனைகளோடு இணைந்து சிறப்பு சர்க்கரை நோய் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை மையங்களைத் திறக்கத் தொடங்கிவிட்டன. 

ஆனால், மத்திய அரசு இன்னும் விழித்துக்கொண்டு இதற்கான நடவடிக்கைகளில் வேகமாக இறங்கவில்லையே என்பதுதான் வருத்தமளிக்கிறது.இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகியிருப்பதால் மேலதிகமாக பாதிக்கப்படப்போவது யார் என்றால், முதியோர்களும் பெண்களும் மட்டுமே. 

இந்தியாவில் சர்க்கரை நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 10.07 லட்சம் பேர்களாக இருந்தால், இதில் 5.81 லட்சம் பேர் பெண்களாக இருக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகளில் 60 விழுக்காட்டினர் தங்களுக்கான மருத்துவச் செலவை தங்கள் வருங்காலச் சேமிப்புத் தொகையிலிருந்துதான் செலவழிக்கிறார்கள். 

இவர்களுக்கு வேறு வருவாயோ அல்லது மருத்துவக் காப்பீடோ இல்லை. இதிலும் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.அரசின் கணக்கெடுப்பின்படி சர்க்கரை நோயாளி ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ. 26,000 மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளுக்காக செலவிடுகிறார். 

அதாவது மாதம் குறைந்தபட்சம் ரூ. 2,000 செலவிட வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு முதியவருக்கு இந்த அளவுக்கான பணம் ஓய்வூதியத்தில் பெரும் பகுதி என்பதும், இதன் பிறகு அவர் எந்தத் தொகையை வைத்து வாழ்க்கை நடத்துவார் என்பதும் நினைத்துப் பார்க்கவே சங்கடமானது.இதையும்விட சங்கடமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை நோயாளிகளுக்குத் தொடர் நோய்களாக விழித்திரை பாதிப்பால் பார்வை பறிபோதல், கால் நரம்புகள் செயலிழப்பதால் கால்கள் வெட்டியெடுக்கப்படுதல், ரத்தத்தின் மிகை சர்க்கரையைத் தொடர்ச்சியாக வெளியேற்றும் சிறுநீரகம் விரைந்து கெட்டுப்போதல் என்று பல பிரச்னைகளை முதியோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இத்தகைய மோசமான சூழ்நிலை ஏற்படாமல் சற்று தணிவான சூழலை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசு செய்ய வேண்டியது, இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்கள், இலவச ஆய்வுக்கூட வசதி ஆகியவற்றை முதற்கட்டமாக நாடு முழுவதும் அறிமுகம் செய்ய வேண்டியது இன்றியமையாதது.அண்மையில், இந்திய மருத்துவ ஆய்வுக் குழுமத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், சர்க்கரை நோய் பரிசோதனை அட்டைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார். 

சர்க்கரை அளவைப் பரிசோதிக்கும் அட்டைகள் தயாரிப்பில் பல்வேறு பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் விலை அதிகம். சிறுநீரில் சர்க்கரை அளவை நோயாளிகளே கணக்கிடுவதற்கும், ரத்தத் துளியை அட்டையில் தடவியதும் சர்க்கரை அளவை அறியும் கருவிகளும் பல்வேறு நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்டாலும் இவற்றின் விலை அதிகமாகவே உள்ளது. 

மிக மலிவான விலையில், தரமான அட்டைகளை இந்திய நிறுவனங்களே உருவாக்கும் சூழ்நிலை ஏற்படுமானால் சர்க்கரை நோயாளிகளின் மருத்துவச் செலவு பாதியாகக் குறையும் என்பது உறுதி.எளிய மூலிகைகளால் ஒருவர் தன் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது என்றால் அதை ஊக்கப்படுத்தவும், சர்க்கரை அளவை அறியும் கருவிகள் பயன்பாட்டுக்கு மட்டும் ஆங்கில முறையைப் பயன்படுத்திக்கொள்ளச் செய்வதும் ஒரு நோயாளிக்குச் செய்யும் பேருதவி. சில நோய்களுக்கு சித்த, ஆயுர்வேத மருந்துகளுடன், அலோபதி மருத்துவ ஆய்வுக்கருவிகள் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது.எந்தவகை மருத்துவம் என்பதல்ல முக்கியம். நோய்க்கு மருந்து எது என்பதுதான் விடையாக இருக்க முடியும். 

நன்றி தினமணி தலையங்கம்

7 comments:

  1. சர்க்கரை நோய் பரம்பரையாக வருவது என்பதால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். முறையான உணவுக் கட்டுப்பாடு, நிறைய நடப்பது, சைக்கிள் ஓட்டுவது இவையெல்லாம் சர்க்கரை நோய் வராமல் தூரத்தில் வைக்கும் உபாயங்கள். (என் குடும்பத்தில் மெஜாரிட்டி சர்க்கரை நோயாளிகள் என்பதால் இப்படித்தான் நான் இதுவரை இந்த நோயின்றி இருக்கிறேன்.) நல்ல செய்தியைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி சார்...

    ReplyDelete
  2. நண்பர் கணேஷின் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.

    பகிர்விற்கு நன்றி சதிஷ்.

    ReplyDelete
  3. நல்லதோர் பதிவு. இன்று சர்க்கரை நோய் தினமல்லவா?



    நம்ம தளத்தில்:
    ஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா?

    ReplyDelete
  4. அருமையான விழிப்புணர்வு நன்றி

    ReplyDelete
  5. நல்லதொரு புள்ளி விபரங்களும், ஆலோசனைகளும் நன்றி சங்கவி...!!!

    ReplyDelete
  6. இனிப்பான பதிவானாலும் பயமாத்தான் இருக்கு சங்கவி !

    ReplyDelete
  7. சர்க்கரை நோய் --பயனுள்ள பதிவு..

    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete