Tuesday, August 12, 2014

வரலாற்று புகழ் மிக்க குதிரை சந்தை தொடங்கியது...


ஆடி மாதம் என்றாலே என் மனதில் நினைவிற்கு வருவது குதிரை சந்தை தான். எங்கு வேலை செய்தாலும் எப்ப இந்த திருவிழா வரும் 3 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்ற ஏக்கம் தான் இதற்கு காரணம். பதிவுலகில் இந்த சந்தையை 5வது முறையாக பதிகிறேன். வருடா வருடம் இந்த குதிரை சந்தை பற்றியான பதிவுகளை பதிவிடுவதற்கு காரணம், நிச்சயம் நாம் அனைவரும் காண வேண்டிய ஒன்று. இந்த பதிவை பார்த்து சந்தைக்கு மக்கள் வருவார்கள் என்பதற்காக பதிவிடுவதில்லை. வர இயலாதவர்கள் இதைப்பாத்து திருப்தி அடையவேண்டும் என்பதற்காக இந்த பதிவு. கடந்த வருடம் 8 இலட்சம் மக்கள் இந்த நான்கு நாள் திருவிழாவில் கலந்து கொண்டதாக அறிவித்திருந்தனர். இந்த வருடம் ஆகஸ்ட் 15ம் நாள் திருவிழாவையோட்டியே வருவதால் இந்த வருடம் நிச்சயம் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்..

குதிரைசந்தை

அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபு குதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இப்போதைய சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் வீட்டு உபயோகப் பொருட்கள், சோளக்கருது, பேரிக்கா, மைசூர் பருப்பி, அல்வா ம்ற்றும் புதிதாக வந்துள்ள விவசாயப்பொருட்கள், பொழுது போக்கிற்காக பல வகையான இராட்டினங்கள் என்று களை கட்டும் அந்தியூரும் அதன் சுற்று வட்டாரமும்.

இத்தளத்தின் வரலாறு

சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் வனப்பகுதியில் 600 ஆண்டுகளுக்கு முன் குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி, மூன்று குழவிக்கற்களை மட்டும் நட்டு வழிபட்டனர். இந்த கோயில் பூஜாரி வீட்டுப் பெண்ணை, ஆற்காடு நவாப் திருணம் செய்ய விருப்பம் தெரிவித்து பெண் கேட்டுள்ளார். உறவினர்களிடம் கலந்து பின் சம்மதம் தெரிவிப்பதாக நவாபின் ஜவானிடம் பூஜாரி கூறினார். உறவினர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அப்போது உறவினர் ஒருவருக்கு அருள்வந்து, நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு, இரவோடு இரவாக சென்றுவிடுங்கள், என்று கூறினார். பூஜாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர். அடுத்த நாள் நவாப்பின் ஆட்கள் அங்கு சென்று பார்த்த போது யாரும் இல்லை. 
 
கோயில் கோபுரம், குதிரை மற்றும் யானைகள் கட்டும் இடங்களை சேதப்படுத்தினர். கற்களுடன் சென்றவர்கள் பல ஊர் கடந்து பசியாலும், பட்டினியாலும் வாடி வதங்கினர். தங்களையே பாதுகாக்க இயலாத நிலையில், தம்முடன் கொண்டு வந்த மூன்று கற்களையும் அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு, வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து ஓரிடத்தில் படுத்தனர். அடுத்தநாள் அனைவரும் புறப்பட்ட போது, தங்களுடைய கூடையில் மூன்று கல் சிலைகளும் இருந்ததைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டனர். அவற்றைத் தங்கள் குலதெய்வமாக வழிபட முடிவெடுத்தனர். அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் என்ற இடத்திலுள்ள கல்மண்டபத்தை அடைந்தனர். பாண்டிய மன்னரிடம் அனுமதி பெற்று மூன்று கற்களையும் வழிபாடு செய்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒரு குறுநிலமன்னன் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார்.
 
கோயில் சுற்றுப் பிரகார நடுப்பகுதியில் 11 அடி நீளம், 11 அடி அகலம், 11 அடி உயரம் கொண்ட குலுக்கை என்னும் பெட்டகம் உள்ளது. அதனுள் பூஜை பொருட்களை வைத்து வந்தனர். ஆடி மாதத் திருவிழாவில், விழாவிற்கு முந்திய நாள் குலுக்கையைத் திறந்து பூஜைப் பொருட்கள் எடுப்பது வழக்கம். இக்குலுக்கைக்கு நான்குபுறமும் வாசற்படிகள் இல்லை. மேல்பகுதி வழியாக ஆள் புகுந்து வரும் நுழைவாயில் உள்ளது. கீழே துவாரம் காற்றோட்ட வசதிக்கு அமைத்து அத்துவாரத்தில் பாதுகாப்புக்காகப் பாம்புகளை விட்டு வைத்தனர். ஆகம விதிப்படி விரதம் இருந்து வரும் பூசாரிகளில் ஒருவர் மட்டும் திறப்பார். மற்றவர்கள் அந்த பெட்டகத்தில் நுழைய முயற்சித்தால் பாம்பால் கடியுண்டு இறப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. பக்தர்கள் தங்கள் தோட்டங்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்களால், தங்களுக்கு ஆபத்து நேராமல் இருக்க, குலுக்கைக்கு பூக்கள் இட்டு வணங்குகின்றனர். இந்த குலுக்கை பார்ப்பதற்கு புற்று போல உள்ளது.
 
இங்குள்ள காமாட்சியம்மன் தவமிருக்க அந்தியூர் வனத்துக்குச் சென்றாள். மாய மந்திரத்தில் பிரசித்தி பெற்ற உத்தண்ட முனிராயன் என்பவர் அம்பாளுக்கு வனப்பகுதியை விட மறுத்தார். அவனை குருநாத சுவாமியின் சீடரான, அகோர வீரபத்திரர் சண்டையிட்டு அழித்தார். அவன் அழியும் முன், “என் அகந்தையை அழித்த குருநாதா! உன் கையால் அழிவதால், என் பூர்வ ஜன்ம சாபம் நீங்கப் பெற்றேன். இவ்வனத்தில் தாய் காமாட்சி அம்மன் தவம் மேற்கொள்ளட்டும். இந்த வனம் இன்றிலிருந்து ஸ்ரீகுருநாதர் வனமாக இருக்கும். நான், அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க, நீ இங்கேயே அருள்புரிவாய்” என்று வரம் கேட்டான். அந்த வரத்தை குருநாத சுவாமி கொடுத்தார். இதனடிப்படையில், அசுரகுணம் கொண்டவர்களுக்கு கூட குருநாத சுவாமி பூர்வ ஜன்ம சாபத்தையும், பாவத்தையும் தீர்ப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்தக் கோயிலில் சிறிய கல் உருவம் ஒன்றை வீரபத்திரரும், உத்தண்ட முனியும் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். அந்தக் கல் குன்றாக வளர்ந்துள்ளது. மக்களும், “குருநாதா. உன் குன்று வளர்வதைப் போல் என் குடும்பத்தையும் வாழ வையப்பா” என வேண்டுகின்றனர். காமாட்சி அம்மன் தவநிலையில் இருக்கிறாள். அருகில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன், நவநாயகிகள், ஏழு கன்னிமார்கள் உள்ளனர். பாட்டன், பாட்டி, நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன், அண்ணன்மார் என்னும் முன்னுடையார், 18 சித்தர்கள் உள்ளனர். அகோர வீரபத்திரர் எதிரில் உத்தண்ட முனிராய துரையும், அன்னப்பாறையும் உள்ளது.
 
----------------------- 

இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த திருவிழாவை கான வருபவர்களுக்கு ஈரோடு, கோபி, சத்தியமங்ளத்தில் இருந்து நிறைய சிறப்பு பேருந்துகள் உண்டு...


 படங்கள் எல்லாம் பழைய படங்கள், இந்த வருட படங்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து உங்களை தேடி வரும் இணையத்தில்....

No comments:

Post a Comment