Wednesday, June 18, 2014

நம்ம ஊரு வண்டி

மாட்டு வண்டி நான் சென்ற முதல் வாகனம் இதுதான். எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊர் திருவிழாவிற்கு முதன் முதலாக 4 மாத குழந்தையாக இருக்கும் போது சென்றேன் பின்னாளில் எனது அம்மா சொன்னதாக ஞாபகம். எனக்கு மட்டுமல்ல 25 ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் வாகனம் மாட்டு வண்டியாகத்தான் இருக்கும். இன்றும் மாட்டு வண்டிகள் அழியவில்லை ஆனால் குறைந்து இருக்கின்றது.
கிராமங்களில் விடாப்பிடியாக இன்னும் சில பேர் மாட்டு வண்டி வைத்து கொண்டு விவசாயம் பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .மாட்டு வண்டி ஓட்டுவது ஒரு கலை மாட்டின் சுபாவத்திற்கு ஏற்ப அதை அதட்டி ஓட்டுவார்கள்.
 
எனக்கு சிறுவயதில் இருந்து அதிகம் மாட்டுவண்டியுடன் புழக்கம் உள்ளது. இவ்வண்டியை நெல் சுமக்க, அரைக்க, சந்தைக்கு செல்ல என அனைத்து பொருட்களையும் தூக்கி செல்ல மாட்டு வண்டியைத்தான் பயன்படுத்தினர் ஒரு காலத்தில். இப்போது இதை பயன்படுத்துவது குறைந்தாலும் கிராமத்தில் இதற்கான வரவேற்பு இன்றும் உண்டு.

பழைய திரைப்படங்களில் மாட்டு வண்டியைப்பற்றிய பாடல்களும், மாட்டு வண்டிகளும் அதிகம் இடம் பெற்று இருக்கும் கிராமத்து படம் என்றால் மாட்டு வண்டிக்கு நிச்சயம் இடம் உண்டு. மாட்டு வண்டியைப்பற்றி புகழ் பெற்ற பாடல்கள் நிறைய இருக்கின்றன.

முன்காலத்தில் சரக்கு வாகனமாக மக்கள் பய்னபடுத்தியது மாட்டு வண்டியைத்தான் இவ்வண்டியைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பனின் தாத்தா கூறிய தகவல் இன்னும் நன்றாக இருந்தது. அவர் காலத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் அதிகம் நடக்குமாம் ஊர் ஊராக சென்று மாட்டு வண்டி ஓட்த்தில் நிறைய பரிசுகள் பெற்று இருக்கின்றாராம். மாட்டு வண்டி பந்தயத்திற்கு சென்ற இடத்தில் தான் பந்தயத்தை பார்க்க வந்த அவர் மனைவியையும் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். வண்டிக்கு பெயிண்ட் அடித்து அழகாக பராமரித்து வருகிறாராம் இப்ப பட்டணத்துக்கு குடி வந்தாதால் அதெல்லாம் நினைவுகளோடு சரி என்கிறார்.
இன்றும் பல ஊர்களில் ரேக்ளா ரேஸ் என்ற பெயரில் மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.
 
அந்த காலத்தில் சுற்றுலா என்றால்  பழனிதான் அதிகம் செல்வார்கள் பழனி செல்லும்போது வீட்டில் உள்ள மாட்டு வண்டியின் மேல் சாக்கு கட்டி விட்டு அதுதான் நிழல் போகும் போது கட்டுச்சோறு செய்து கொண்டு போவோம். வரும் போது விறகு பொறுக்கி சில இடங்களில் கல் வைத்து சாப்பாடு செய்து கொள்வோம். பழனி சென்று வர ஐந்து நாட்கள் ஆகும் இவர் திருப்பதிக்கும், ராமேஸ்வரத்துக்கும் மாட்டு வண்டியிலேயே குடும்பத்துடன் சென்று வந்த காலங்கள் இன்று இல்லை...
 
15 வருடத்திற்கு முன்பு திருமணம் என்றால் எல்லாரும் வண்டி கட்டிக்கொண்டு தான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்வார்கள் அதானால் தான் அக்காலங்களில் 3 நாட்களுக்க திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இப்போது 3 மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது திருமண நிகழ்வுகள்..

மாட்டு வண்டியில் கரும்பு ஏற்றிக்கொண்டு செல்வார்கள் பின்னால் சென்று கரும்பை சத்தம் வராமல் உடைத்து வந்து சாப்பிடுவோம். மாட்டு வண்டியில் இரு மாடுகளை பூட்டி அதை லவகமாக கையில் பிடித்து சின்ன சாட்டையை வைத்து அடித்து மேதுவாக நகரும் போது ஆடி ஆடி செல்லும.பொருட்கள் ஆட்கள் என எல்லோரையும் இழுக்கும் வண்டி நம்ம ஊரு மாட்டுவண்டி..
மாட்டுவண்டியை ஒவ்வொருவரும் அவர்களது வசதிக்கேற்ப வண்டியை அழகு படுத்தி வைத்திருப்பர்.  சிலர் அழகாக கூண்டு அடித்து அதற்கு பெயின் அடித்து வைத்திருப்பர். இன்னும் சிலர் கட்டை வண்டியாகவே வைத்திருப்பர். வைக்கோள் போட்டு அதன் மேல் பெட்சீட் போட்டு மெத்தை போல வடிவமைத்து வைத்துருப்பர் இதை எல்லாம் நின்று பொறுமையாக ரசிக்கத்தோணும்.
இவ்வண்டிகளைப் பொறுத்த வரை ஹய் ஹய் என்று கத்தி சாட்டையில் மெதுவாக ரெண்டு போட்டால் வேகமாக செல்லும். ஹோ ஹோ என்று சத்தமிட்டு கயிரை இறுக்கப்பிடித்தால் அப்படியே நிற்கும். இதற்கு இதுதான் எக்ஸ்லேட்டர், பிரேக் எல்லாம். வண்டி ஓட்டுபவரின் குரல் தான் இதற்கு மிகப்பெரிய பலம் அவரின் குரலுக்கேற்ப நகரும்..
இவை இரண்டும் மாட்டு வண்டிக்கு முக்கிய தேவைகள்...
அச்சாணி: இரவு நேரங்களில் பயனம் முடிந்ததும் வண்டியை லாக் செய்வது போல் மாட்டு வண்டிக்கு வண்டி சக்கரம் கழண்டு விடாமல் தடுக்கும் இரும்பு பட்டை.

நோத்தடி: மாடு வண்டியில் பூட்டபடும் கம்பு. வண்டி சும்மாக இருக்கு பொழுது சீசா மாதிரி விளாயாடலாம்.

இன்றும் ஊருக்கு சென்றால் மாட்டு வண்டியில் செல்ல மனம் அடித்து கொள்ளும். சமீபத்தில் வண்டியில் இருந்து இறங்கி ஒரு 5 நிமிடம் மாட்டு வண்டியில் சென்றேன் ஆடி ஆடி குழியில் இறங்கி செல்லும் போது பின்புறம், முதுகு, கை எல்லாம் வலி எடுத்தது. அந்த வலியும் ஒரு சுகமான கிராமத்து நினைவுகள் தான்....

7 comments:

  1. 'நான் 1974க்கு அப்புறம் எங்கேயும் மாட்டுவண்டி பார்த்ததில்லை. அதுவும் கல்யாணத்துக்கு மாட்டுவண்டி கட்டிக்கொண்டு அதில் வருவது 40 வருடங்களுக்கு முன்புதான் (வரப்பட்டிக்காடாக இருந்தால் ஒழிய)

    நோத்தடி என்பது நுகத்தடி. அருமையான தமிழ்சொல்.

    ReplyDelete
  2. மாட்டுவண்டியில் பயணித்த இனிமையான நினைவுகளை கிளறிவிட்டீர்கள்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வணக்கம்

    கதையை படிக்கும் போது முன்பு உள்ள நினைவு வந்து. மாட்டு வண்டியில் பயணம் செய்வது ஒரு சுகந்தான்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. இனிமையான நினைவுகள். மாட்டு வண்டியில் சில முறை பயணித்ததுண்டு....

    ReplyDelete
  5. நானும் சுத்த கிராமச் சூழலில்
    வளர்ந்தவன் என்கிற முறையில்
    இந்தப் பதிவினை ரசித்துப் படிக்க முடிந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete