Tuesday, February 12, 2013

காதலர் தினம்... பிப்ரவரி 14...


தந்தை தினம் வருகிறது  பல பேர்களுக்கு அது வந்து  போவதே தெரிவதில்லை. தாய் தினம் வருகிறது அதை நாம் யாரும் அந்த அளவிற்கு கொண்டாடுவதில்லை இன்னும்  நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரை அர்ப்பித்த பல தியாகிகளின் பிறந்த நாட்கள் நமக்கு நினைவுக்கு வருவதில்லை. ஆனால் இந்தக் காதலர் தினம் மட்டும் ஒரு பத்து நாட்கள் முன்பாகவே சூடு பிடிக்கத் தொடங்கி அனைவரையும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி உள்ளது அதற்கு மிக முக்கிய காரணம் மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம். இந்த வருடம் வாரப்பத்திரிக்கைகளில் எல்லாம் நல்ல முக்கியத்துவம் கொடுத்து நிறைய கவிதைகளை வெளியிட்டு காதலர் தினத்தை இளம் தலைமுறையினரிடையே சூடக்கி உள்ளது.

முகநூலில் எங்கு பார்த்தாலும் இப்போதே காதலர் தினத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சமூகவலைத்தளங்கள் எல்லாம் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றன காதல்ர் தினத்தை அதுமட்டுமில்லாமல் இன்று பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து பயணம் என எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சு காதலர் தினம் தான். 

கடைவீதிகளில் பரிசுகள் இந்த வருட புதுமை என அறிமுகப்படுத்தி அங்கும் கல்லாகட்டுன்றனர் காதலர் தினத்தால். காதலர் தினம் மிடியாக்கலின் பெரும் வரவேற்பால் குழந்தைகள் கூட இன்று காதலர் தினம் என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது.

ஒருவருக்கு அன்புடன் பரிசு கொடுப்பதில் தவறொன்றுமில்லை. பரிசு கொடுக்க கொடுக்கத்தான் எதிர்பார்ப்புகள் அதிகமாகி அன்பு அதிகமாகும். பரிசுகளை காதலர்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நாம் அன்பு வைத்திருக்கும் எவருக்கும் கொடுக்கலாம். நம் ஊர்க்கலாச்சாரம் காதல்ர் தினத்தை ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறது. காதலர் தினம் காதலி இருந்தால் தான் கொண்டாடவேண்டும் என்று அவசியம் இல்லை நட்புக்களுடனும், பெற்றோருடனும் கொண்டாடுவதில் தவறென்ன இருக்கிறது..



ஊரில் யார் யார் காதலிக்கிறார்கள் என்று இந்த தினத்தில் அவர்கள் உடுத்தும் உடையை வைத்தே சில வருடங்களுக்கு முன்னால் சோதிடம் சொல்லியது எல்லாம் தற்போது நினைவில்.. ஒரு 15 வருடங்களாகத்தான் நம்ம ஊரில் இந்த தினம் பேசப்படுகிறது எனக்கு முதன் முதலாக காதலர் தினம் அறிமுகமான புதிதில் இன்று பச்சை கலர் துணி அணிய வேண்டுமாம் அப்போது தான் நமக்கு காதலி இல்லை என்று எல்லாருக்கும் தெரியுமாம் நம்மை காதலிக்க வாய்ப்பிருக்கிறது என்று நண்பர்கள் போற போக்கில் பிட்டைப்போட பள்ளியில் கலர் துணி போட முடியாதே அதனால் பச்சை கலந்த சட்டையை வீட்டில் இருந்து பள்ளி பையில் ஒளித்து வைத்து பஸ்ஸ்டேண்டு கடையில் மாற்றிக்கொண்டு பஸ் பயணத்தின் போதும் பள்ளிக்உள் செல்லும் வரை பச்சை சட்டையும் அப்புறம் சீருடைக்கு மாறி மீண்டும் மாலை பச்சை சட்டை போட்டும் பயன் இல்லை அப்போது 7வது படிக்கிறேன் என்று நினைக்கிறேன்...

பச்சை சட்டை போட்டு டியூசன் வரை சென்று அன்று முழுவதும் பச்சை சட்டையை நேரம் கிடைக்கும் போதெல்லாம் போட்டு இருந்தேன் கை மேல் பலன் கிடைப்பது போல் நினைப்பு என்னை சுத்தி சுத்தி வந்தது ஆனால் ஒருத்தரும் திரும்பி கூட பார்க்கவில்லை என்றாலும் வருடா வருடம் அந்த வருடம் எந்த கலர் என்று கேட்டுத் தெரிந்து அந்த கலர் சட்டை போட்டும் பயன் இல்லை பச்சி ஒன்னும் சிக்கலை நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று அடுத்தவனை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் நானும் ஒருவன் ஆனேன்...

இதனாலயே காதலர் தினத்தின் மேல் கோபமாக வரும்.. இருந்தும் அந்த நாள் சந்தோசமாக போதும் என்பதால் இன்று வரை அதை வரவேற்க கடமைப்பட்டு இருக்கேன்.. காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...

6 comments:

  1. ஓஹோ... 7th-ல் இருந்தேவா...? இன்று தான் தெரியும்...

    /// நட்புக்களுடனும், பெற்றோருடனும் கொண்டாடுவதில் தவறென்ன இருக்கிறது... ///

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உண்மைதான்! காதலர் தினம் இந்த வருடம் கொஞ்சம் உற்சாகமாகத்தான் கொண்டாட ஆரம்பித்து இருக்கிறார்கள்! ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தடை விதிப்பார்கள் கொந்தளிப்பார்கள் இந்த வருடம் காணோம்! நல்லதொரு பகிர்வு!

    ReplyDelete
  3. //இதனாலயே காதலர் தினத்தின் மேல் கோபமாக வரும்.. இருந்தும் அந்த நாள் சந்தோசமாக போதும் என்பதால் இன்று வரை அதை வரவேற்க கடமைப்பட்டு இருக்கேன்.. காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்..//

    உண்மைதான்... நல்ல பகிர்வு,
    காதலர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும்...

    ReplyDelete
  4. அதானே! யாராவது பதிவர் தினம் கொண்டாடுறாங்களா? :-)

    போனாப்போகுது! காதலர்களுக்கு இனிய காதலர் தினம் வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. வணக்கம்
    சங்கவி

    அருமையாக சொன்னீர்கள் இன்று உங்களின் படைப்பு வலைச்சரத்தில் அறிமுகமானது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. காதலர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
    சங்ககாலத்தில் காதல் எங்கள் மத்தியில் இருந்திருக்கின்றது . காதலின் உவகையும் வலியும் பதிவான அழியாயிலக்கியங்கள் அவை. ஆனால் சங்கம் மருவிய சிலப்பதிகார காலகட்டத்தில் குழந்தைத்திருமணமுறை எம் மத்தியில் வழக்கத்திற்கு வர காதலும் மருவிவிட்டது..இன்று எங்கள் சமூகம் காதல் அற்றதாக மாறிவிட்டது. "ஆதலினால் காதல்செய்வீர்" என எமக்கு அறிவுரை வழங்கியவன் பாரதி.
    சங்கம் மருவிய காலகட்டத்தில் தென்னிந்தியாவில் முடிசூடிய மூவேந்தர்கள் ஓங்கி பேரரசுகள் உருவாகின. பேரரசுகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரத்தை . பிறப்பு சார்ந்தே உலகமெங்கும் நிலப்பிரபுத்துவம் உருவாக்கிக் கொண்டிருந்தது.
    சங்ககாலம் முதலே தமிழகத்தில் சாதியதிகாரமும் சாதிப்பிரிவினையும் வலுவாக இருந்திருந்தன. சங்கம் மருவிய காலத்தில் சாதியதிகார கட்டுமானமாகி சாதியடையாளங்களை மீறுவது உறுதியாக தடுக்கப்பட்டு அதற்காகவே குழந்தை வயதில் திருமணம் அறிமுகமாகி பதினைந்து நூற்றாண்டுகளாக நாங்கள் காதல் என்றால் என்ன என்று அறியாது. வாழ்ந்து வந்திருந்தோம். இதனால் நாங்கள் அறிந்ததெல்லாமே வெறும் பாலுறவு மட்டுமே.
    திருமணத்தில் காதல் இல்லாத காரணத்தால் நம் மூதாதையர் விபச்சாரிகளை தேடிப்போனார்கள்
    இளைஞனும் யுவதியும் தமது விருப்புக்கும் ரசனைக்கும் இயல்புக்கும் ஏற்ற துணையை தாமே தேடிக்கொள்வதுதான் உண்மையான காதல். தன் தோழனையும் தோழியையும் தேடிக்கொள்ள அனுமதி வழங்கிய எங்கள் சமூகம் வாழ்நாள் முழுக்க நீளும் திருமண உறவைத் தேடிக்கொள்ள கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக அனுமதிக்கவில்லை.
    திருமண பொருத்தத்தில் சொத்து, குடும்ப அந்தஸ்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள் .திருமணம் செய்ய விருப்பவர்களுக்கிடையில் விருப்பு, ரசனை, மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றில் பொருத்தம் உண்டா? என்று பார்த்தது கிடையாது. .இந்தப் பொருத்தங்கள் அவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகாமல் தெரிய வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய. திருமண முறைகளில் ஜோடியாக தம்பதிகளென முடிவுசெய்தபின்னர்தான் அவர்களை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம்.
    இருவர் தமக்கிடையே பகிருந்தோறும் நெருங்குந்தோறும், பழகுந்தோறும் அகத்தை பகிர்ந்துகொள்வதால் வளரும் ஓர் உறவுதான் காதல்.
    எமது விருப்பு, ரசனை, மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றில் இணைவு இல்லாத ஓருவரோடு கொஞ்ச நேரத்திற்குப் பின் எங்களால் பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவரை திருமணம் புரிந்தால் அந்தத் திருமணம் எப்படி தொடர முடியும்?
    பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத்தளம் இல்லாத நிலையில் நம் மத்தியில் தம்பதிகளுக்கிடையில் வெறும் வெற்று உரையாடல்கள் மட்டுமே சாத்தியம்.
    எங்கள் மத்தியில் நடைபெறும் திருமணங்களில் சில காலம் தாண்டியபின் தம்பதிகளுக்கிடையில் உரையாடலே நிகழ்வதில்லை. உணவு ரெடியா?, பிள்ளைகள் சாப்பிட்டார்களா? என சில வரிகளுகளுக்குமேல் தமக்கிடையில் உரையாடும் தம்பதிகள் மிக மிக அபூர்வம். வேறு வழியே இல்லாத நிலையில் நம் மத்தியில் திருமண உறவு என்பது வெறும் ஒப்புக்கு போலியாக நிகழ்வதாக மாறிவிடுகின்றது
    நம் மத்தியில் திருமணமான தம்பதிகள் பெரும்பாலும் தமது நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுகிறார்கள். திருமணம் புரியும் தம்பதிகளுக்கிடையில் காதலை வளராதலால் வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன் வெறும் சினிமா, நாவல்கள் நாடகங்கள் மூலம் வெறும் கற்பனையில் காதலைத் தரிசித்துவிட்டு அநேகமானவர்கள் மரணித்துப் போய்விடுகின்றார்கள்.
    இன்னமும் உண்மையான காதல் என்றால் என்ன என்று எங்களுக்கெல்லாம் . தெரியாத காரணத்தால் எந்த தெரிவும் இல்லாமல் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையயுள்ள அருகாமையையே காதலுக்கான காரணமாக எடுத்துக் கொள்கின்றோம். எங்கள் மத்தியில் இருவர் அருகருகே பழக நேர்ந்தாலே திருமணம் செய்து கொள்கின்றார்கள்.
    இறுகிய எங்கள் சமூகத்தின் மத்தியில் காதல் தடை செய்யப்பட்ட ஒன்றாக இன்னமும் இருப்பதனாலேயே அது இரகசியமானதாக உளவு பாக்கப்படும் ஒரு விடயமாக அமைந்துள்ளது. . இதனால் காதலை நிதானமாக அணுக முடியாது சில கண்களில் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே திருமணங்களாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளில் முடிவடிகின்றன.
    காதலை நிதானமாக அணுகவும் முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும் அனுபவம் தேவை. அத்தகைய அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் தேவை.
    ஆரோக்கியமான சமூகங்கள் காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரத்தினை கொண்டிருக்கும். . பொருத்தமான ஆண்பெண் உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்

    - நல்லையா தயாபரன்

    ReplyDelete