Wednesday, January 30, 2013

அஞ்சறைப்பெட்டி 30.01.2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
பல முறை எனது அஞ்சறைப்பெட்டியில் எழுதி இருந்தேன் எங்கள் ஊர் சாலை (பவானி முதல் மேட்டூர் வரை) மிக மோசமான சாலை என்று யார் செய்த புண்ணியமே தெரியவில்லை 10 வருடத்திற்கு பின் இப்பத்தான் அந்த சாலையை செப்பனிடும் வேலை நடந்து கொண்டு இருக்கின்றது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இனி எங்க ஊருக்கு நல்ல படியாக பயணம் செய்யலாம் என்று... இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கூட உடல் வலி ரொம்ப பின்னி எடுக்கும் அந்த அளவிற்கு குழிகள் கொண்ட சாலை அது.

  ................................................................

அனைவரும் எதிர்பார்த்த விஸ்வரூபம் தேவை இல்லாமல் பல போராட்டங்களை நடத்தி இன்று தடை செய்யும் அளவிற்கு வந்துள்ளது. சினிமாவை சினிமாவாக பார்த்ததால் நிச்சயம் இந்த பிரச்சனைகள் இருக்காது.. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க சினிமாவுக்காக போராடுவது அபந்தம். முதலில் அடிப்படை விசயங்களுக்காக போராடாதவர்கள் தேவை இல்லாமல் சினிமாவுக்காக போராடுகின்றனர்.

..........................................................................................

கேரளத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விடாத தமிழகம் மீது சட்டரீதியான நடவடிக்கை என அம்மாநில உம்மன்சாண்டி கூறிஉள்ளார்.. ஏற்கனவே நாங்க சட்டரீதியான நடவடிக்கை எடுத்தும் எங்களுக்கு ஒரு சொட்டு கூட் தண்ணீர் கிடைக்கவில்லை இதில் நீங்களுமா..

................................................................................................

இனியும் மழை பெய்யவில்லை என்றால் இந்த வருட கோடை காலங்களில் நிச்சயம் தண்ணீருக்காக அலைய வேண்டிய நிலை வரும் வாய்ப்பு உண்டு. ஊரில் உள்ள குளங்கள், ஏரிகள் எல்லாம் வறண்டு காணப்படுகின்றன. மழையின்மையால் முதலில் பாதிக்கப்பட்டது விவசாயம் தான் இன்னும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கப்போறமோ இந்த மழையின்மையால்..

...............................................................................................

பசித்தாலும் சாப்பிடுவதில்லை.... தூக்கம் தொலைத்து நாள்தோறும் 16 மணிநேரம் ஆன் லைன் கேமில் மூழ்கியிருந்த ஆஸ்திரேலிய சிறுவன் அதற்கு அடிமையாகிவிட்டான். இக்கட்டான நிலையில் இருந்து அந்த சிறுவனை மீட்கப் போராடி வருகிறார் ஒரு தாய். உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் ஆன்லைனில் இந்த கேம் ஆடுவதாக கூறப்படுகிறது. இலவச ஆன்லைன் வீடியோகேம்களில் மிகவும் பிரபலமானது ‘ரன்எஸ்கேப்'. மல்டிபிளேயர் ஆன்லைன் கேம் என்ற வரிசையில் ரன்எஸ்கேப், கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த ஜெகக்ஸ் கேம்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வடிவமைத்ததுதான் இந்த கேம். கேமில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கும். அதோடு நாமும் ஒரு கேரக்டராக இறங்கி விளையாட வேண்டும். எப்படி விளையாடுவது, விளையாட்டின் நோக்கம் என்ன, எந்த இலக்கை அடைய வேண்டும் என்றெல்லாம் கேமுக்குள் இருக்கும் ஆலோசகர்களிடமே கேட்டுக் கொள்ளலாம். இதுதான் இலக்கு என்று எதுவும் கிடையாது.எதை நோக்கி போவது, என்ன சாதிப்பது என்பது நம் விருப்பம்தான். ஆகமொத்தம், உள்ளுக்குள் ஒரு உலகமே இருக்கும்.

...............................................................................................

குழந்தைகள் மண் சாப்பிடுவார்கள். அதிகம் போனால் சாக்பீஸ் சாப்பிடுவார்கள். கர்ப்பிணிகள் சாம்பல் விபூதி சாப்பிடுவார்கள். ஆனால் அமெரிக்காவில் வளர்ந்து பெரிய ஆளாக ஆன பின்னும் பூனை முடியை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஒரு பெண்.
15 ஆண்டுகளாக பந்து பந்தாக சுருட்டி பூனை முடியை ருசித்து சாப்பிட்டு வருகிறார் 43 வயதான அந்தப் பெண். பூனை முடி இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் என்கிறார் அந்தப் பெண்.
இதற்காக தான் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ள பூனைகளைப் பிடித்து அதன் முடிகளை சேகரித்து வருகிறார். கேட்பதற்கு அருவெருப்பாக இருந்தாலும் அந்தப் பெண் பூனை முடியின் ருசிக்கு அடிமையாகிவிட்டார் என்றே கூறுகின்றனர்.

தகவல்
 
 
அண்டார்டிகா பனி பிரதேசத்தில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் முகாம் அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது படர்ந்து கிடக்கும் ஐஸ் கட்டியின் அடியில் மறைந்து கிடக்கும் ஏரிகளை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ரோஸ் கடல் பகுதியில் ஐஸ் கட்டிகளின் மீது துளை போடும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

அப்போது 1 கி.மீட்டர் ஆழத்தில் ஏரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு வில்லர்னஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஏரியில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது துளை போடும் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் தெரிய வந்தது.

கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழுவினர் ஐஸ் கட்டிக்குள் மறைந்து கிடந்த எல்ஸ்வொர்த் என்ற ஏரியை கண்டுபிடித்தனர்.

தத்துவம்

இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.

எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.

ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.

1 comment:

  1. தகவல்கள் அனைத்தும் சிறப்பு! நல்லதொரு பகிர்வு!

    ReplyDelete