Thursday, October 29, 2009

நட்பும் வரிகளும்.......

அவசரமாய்ப் போகிறேன்
அப்புறம் பேசுவோம்
என்றார் ஒரு நண்பர்
இம்முறையும்

பிறகு பார்க்கலாம் என
அலைபேசியை அணைத்தாள்
ஒரு தோழி

கடிதப் போக்குவரத்தை
நிறுத்திவிட்ட நண்பர்
ஈமெயிலில் தென்படுவதும்
குறைந்து போயிற்று

கோயிலில் பழக்கமான புது நண்பர்
பக்தி பரவசத்தில்
சில வார்த்தைகளோடு
சென்று விடுகிறார்

தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும்
நண்பனின் புன்னகையை
செய்தி முடியும் நேரத்தில்
அரிதாகப் பார்க்க முடிகிறது

குவிந்து கிடக்கின்றன மனதில்
நட்பும் வரிகளும்

தனிமையோடு நடக்கிறது
கபடி விளையாட்டு

யார் மீதும்
வருத்தம் வைக்க
விரும்பவில்லை

எப்போதும் போல்
நிதானமாய்ப் பார்த்து
தலை அசைத்து
நலம் விசாரிக்கிறது
பால்கனி செடி

இப்போது அதில்
புதிதாய்
ஒற்றைப்பூ

1 comment:

  1. நட்பும் வரிகளும்...அருமை...கொஞ்சம் கூட பொருத்த மில்லாமல்...

    ReplyDelete